உங்கள் வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள்!

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம...

"ஒரு நாள், ஒரே ஒரு நாள் நீ முதல்வரா இருந்துப்பாருன்னு" முதல்வன் படத்துல ரகுவரன் அர்ஜுன்கிட்ட சவால் விடுவாரே அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சா என்ன செய்விங்க? அட முதல்வரா கூட வேணாங்க. அலுவலகத்திலோ கல்லூரியிலோ எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு நண்பர்கள் தின விழாவை நடத்த வேண்டும் என்பது போன்ற ஒரு பொறுப்பு உங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். என்ன செய்வோம்?  நம்மில் நிறைய பேர் நமக்கெதுக்குங்க வம்பு என அந்த பொறுப்பிலிருந்து தப்பவே பார்ப்போம். அதற்கு நாம் சொல்லும் காரணங்கள்

"நம்ம வேலை கெட்டுடும்"

"இவங்க கொடுக்குற சம்பளத்துக்கு இத வேற செய்யணுமா?"

"நாம மட்டும் தனியா தெரிவோம்" என்பதாகத்தான் இருக்கும்.

இதில் "நம்ம வேலை கெட்டுடும்" என்ற டயலாக்கை தினமும் நினைத்துப்பார்த்து வேலை செய்தால் போதும். உங்கள் அலுவலகத்தில் உங்களை யாருமே அடிச்சுக்க முடியாது தானே!?

வாய்ப்புகள் எல்லா நேரமும் வந்து நம் வீட்டு கதவை தட்டிக் கொண்டு இருக்காது. நமக்கான வாய்ப்புகளை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். தற்போதிருக்கும் இடத்திலிருந்து அடுத்தக் கட்டத்தை நோக்கிய முயற்சியை மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும்.

யாரோ ஒருவரால் உங்களுக்கான வாய்ப்புகளும் உங்கள் வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படுவதை விடவும் உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்கி கொள்வது தான் சிறந்த பலனைத் தரும்.

ஒவ்வொரு நாளும் இன்று வேறு ஒரு உச்சத்தைத் தொட வேண்டும் என்றோ, புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் உற்சாகமாக தொடங்குங்கள்.

மேலோட்டமாகவும், அதுவரையில் அனுபவத்திடாத ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் பொழுது எப்போதுமே மனதில் ஒரு சின்ன தயக்கம் இருக்கத்தான் செய்யும். அந்த தயக்கத்துக்கு அடி பணிந்தால் வாய்ப்புகள் கை நழுவிப் போகத்தான் செய்யும்.  தைரியமாக கெத்தாக ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொண்டு செயல்பட ஆரம்பியுங்கள்.

ரகுவரன் விட்ட சவாலை ஏற்காமல் பின் வாங்குவது போன்ற ஒரு காட்சி படத்தில் வந்திருந்தால். முதல்வனை அவ்வளவு ரசித்திருக்க மாட்டோம் அல்லவா? ஆம், ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக் கொண்டு போராடுபவனைத்தான் உலகம் விரும்பும்!

மேலும் பல...

1 comments

Search This Blog

Blog Archive

About