அம்மணி - அனைவருக்குமான படம்.

அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திரு...

அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். பெரிய பையன் எந்நேரமும் குடியே கதியென்று கிடக்கிறான். இளைய மகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு ஓட்டி வருகிறான்.

இவர்களுக்கு சொந்தமான வீட்டிலேயே அம்மணி பாட்டியும் வாடகைக்கு குடியிருக்கிறார். அம்மணி பாட்டிக்கு சொந்தம், பந்தம் யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள்.

இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வீட்டு கடனை கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் அவரது மகன்கள், மகள் வழி பேரன் ஆகியோர் இவள் மீது பாசம் காட்டுகிறார்கள்.

ஆனால், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வரும் பணம் கடனை கட்டுவதற்கே சரியாக போய்விடுகிறது. இதனால், விரக்தியடைந்த அவருடைய இளைய மகன், தனது பெயரில் அந்த வீட்டை எழுதி வாங்கிக் கொண்டு, குடிகார அண்ணனையும், லட்சுமி ராமகிருஷ்ணனையும் வீட்டை விட்டு விரட்டுகிறான்.

இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் மனமுடைந்து போகிறார். இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை

படம் முழுக்க முழுக்க லட்சுமி ராமகிருஷ்ணனே நிறைந்திருக்கிறார். அவரைச் சுற்றியே கதை நகர்கிறது. ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஆயாவாக, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். பெரிய நட்சத்திரம் என்று பார்க்காமல் எந்த மாதிரியாகவும் தன்னால் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது.

ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறியிருக்கிறார். குடிசைப் பகுதியில் வாழ்பவர்களின் வாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார். அதேபோல், பணம்தான் இன்றைய கால சூழ்நிலையில் முக்கியம் என்று இன்றைய தலைமுறையில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதேபோல், படத்தில் இடம்பெறும் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. குத்தாட்ட சுந்தரிகளின் நடனம் இல்லாமல், நெருக்கமான காதல் காட்சிகள் இல்லாமல் மனங்களுக்குள் நடக்கும் போராட்டத்தை மட்டுமே வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார். இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.

அம்மணி பாட்டியாக வரும் சுப்புலட்சுமி பாட்டியின் துறு துறு நடிப்பும் நம்மை கவர்கிறது. அதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணனின் இளைய மகனாக வரும் நிதின் சத்யாவின் நடிப்பும் அழகாக இருக்கிறது. அம்மாவிடம் கோபப்பட்டு இவர் பேசும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. எமதர்ம ராஜாவாக வந்து ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு சென்றிருக்கிறார் ரோபோ சங்கர்.

இம்ரானின் ஒளிப்பதிவு மிகவும் அருமையாக இருக்கிறது. கே-யின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் என்றாலும், பின்னணி இசை மென்மையாக வந்து வருடுகிறது.

மொத்தத்தில் ‘அம்மணி’ அனைவருக்குமான படம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About