குழந்தைகளுக்கான எண்ணெய் குளியல்... எது சரி... எது தவறு?

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம் என்று நமது மரபான பழக்கம் என்றாலும் ஒரு சிலர் அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்...

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம் என்று நமது மரபான பழக்கம் என்றாலும் ஒரு சிலர் அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்வார்கள். அதனால் பெற்றோர்களுக்கு என்ன செய்வது எனக் குழப்பம் ஏற்படுவது இயல்புதான். குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் சரிதானா.... அதனால் என்ன பலன்... எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாமா... உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் அரசு பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடு குறையும் எனப் பலரும் சொல்வதுண்டு. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடு குறையும், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தவித சாதக, பாதக பதில்களும் இல்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் குழந்தைகளின் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோடு நிற்காமல், அவர்களின் கண், காது, மூக்கு ஆகியவற்றிலும் எண்ணெய் விடுவார்கள். இது முற்றிலும் தவறானதும், ஆபத்தானதும்கூட.
                           
 குழந்தைகளின் கண்ணில் எண்ணெய் விடுவதால் கண் சிவந்து போகுதல், கண்ணில் அலர்ஜி ஏற்படுதல், கண் எரிச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் கண் எரிச்சல் தாங்காமல் குழந்தைகள் கண்ணைத் தேய்த்துக்கொண்டே இருந்தால் அவர்களுடைய கண் வெளிப்படலம் பாதிக்கப்படலாம். மூக்கில் எண்ணெய் விடுவதால் புரை ஏற்படுவது, ஜலதோஷம் ஏற்படலாம். காதுகளில் எண்ணெய் விடுவதால் காது வலி, காது எரிச்சல் ஏற்படலாம்.

இதுபோன்ற காரணங்களுக்காகவும், ஜலதோஷமும் புரையேறவும் வாய்ப்பிருப்பதால் ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளுக்கு கட்டாயமாக எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட வேண்டாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம். அதுவும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் ஒன்றினை அப்படியோ அல்லது லேசாக சூடுபடுத்தியோ பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய் போன்ற அதிக அடர்த்தியுடைய எண்ணெய்கள் பயன்படுத்தும்போது அவற்றின் எண்ணெய் பசை போக அதிக நேரமாகும் என்பதால் அவற்றைத் தவிர்க்கலாம்.                              

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துவிட்ட 15-20 நிமிடங்களுக்குள் குளிக்க அழைத்துச் சென்றுவிட வேண்டும். எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிப்பாட்டும் சமயத்தில் அதிக சூடான, அதிக குளிர்ச்சியான நீரினைத் தவிர்த்து மிதமான சூடுள்ள நீரைக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும். குறிப்பாக எண்ணெய் பசை நன்றாக போகும் அளவிற்கு சிகைக்காய், அரப்பு, மைல்டு ஷாம்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி 10-15 நிமிடங்களுக்குள் குளிப்பாட்டிவிட வேண்டும். பின்னர் தலைமுடியில் ஈரப்பதம் போகும் வரை நன்றாகத் துடைத்துவிட்டு சராசரியாக ஐந்து நிமிடங்கள் மிதமான வெயிலில் தலைமுடியை உலர்த்தச் செய்யலாம். இதனால் தலையில் நீர் தங்காது. குழந்தைகளின் தலைமுடியை உலர்த்த டிரையரைப் பயன்படுத்தக்கூடாது.                            
மசாஜ் செய்வதைப் பொறுத்தவரையில் 1-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித மசாஜ் முறைகளையும் செய்யாமல் குழந்தையின் உடலில்  எண்ணெய் தடவி பெரியவர்கள் தங்கள் கைகளால் மட்டும் லேசாக தேய்த்துவிட்டாலே போதும். 5 - 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு லைட் மசாஜ் செய்யலாம்.

குறைப் பிரசவத்தில் , எடைக் குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை உடலில் எண்ணெய் தேய்த்தோ அல்லது லைட் மசாஜ் செய்தோ குளிப்பாட்டலாம். இவ்வாறு செய்வதால் நரம்பு மண்டலம், தசைப்பகுதிகளும் நன்றாக செயல்பட தூண்டிவிடும். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About