பூமியின் காந்தப்புலத்தில் விரிசல்..என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்ததை, ஊட்டியில் இயங்கும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. கிரேப்ஸ் 3 மியுயான் தொல...

பூமியின் காந்தப்புலத்தில் விரிசல் விழுந்ததை, ஊட்டியில் இயங்கும் டாடா ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. கிரேப்ஸ் 3 மியுயான் தொலைநோக்கி மூலம், இந்த விரிசலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அரசின் விக்யான் பிரசார மையத்தின் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

"இந்த விரிசல் நடந்தது இப்போது கிடையாது. கடந்த வருடம் ஜூன் மாதம் 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடந்த சம்பவம்தான் இது. சூரியனில் இருக்கும் 12371 என்னும் சூரியப் புள்ளி எரிமலை போல வெடித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரியனில் இருந்து அயனித்துகள்கள் என்னும் மின்னேற்றம் பெற்ற துகள்கள் நாலா புறமும் உமிழப்பட்டது. இது பூமியை 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி வந்தடைந்தது. தொலைவின் காரணமாக தாமதமாக புவியை வந்தடைந்திருக்கிறது.

அப்படி வந்த துகள்கள், பூமியை சுற்றி இருக்கும் காந்தப்புலத்தை தாக்கியதால் ஏற்பட்டதுதான் இந்த விரிசல். இந்த காந்தப்புலம் என்பது பூமியை சுற்றி இருக்கும் கண்ணுக்குத் தெரியாத அமைப்பு. இந்த காந்தப் புலத்திற்குள்தான், நமது பூமி இருக்கிறது. ஒரு பலூனின் உட்புறம் நமது பூமி இருப்பதாக இதனை கற்பனை செய்து கொள்ளலாம். பல கோள்கள் இந்த காந்தப்புல அமைப்பை பெற்றிருக்கின்றன. செவ்வாய் போன்ற சிலவற்றிற்கு வெகு குறைவாக இருக்கும்.. எப்போதும் காந்தம் புவியில் வடக்கு நோக்கி நிற்பதற்கு இதுதான் காரணம்.

இந்த காந்தப்புலத்தின் பணியே, இதுபோன்ற வெளிப்புற துகள்களை பூமிக்குள் வரவிடாமல் தடுப்பதுதான். இது பூமியைப் போன்று 11 மடங்கு பெரிதாக இருக்கும் இது, பூமிக்குள் அயனித்துகள்கள் வராமல் தடுக்கும். இந்த அயனித்துகள்களை நாம் தடுக்காமல் விட்டால், அயனி மழை ஏற்படும். இந்த மழை ஏற்பட்டால் எலெக்ட்ரானிக் சாதனங்கள் இயங்காது. எனவே விண்வெளியில் இருக்கும் செயற்கை கோள்கள் இயங்காமல் போய்விடும். அதேசமயம் இது பூமிக்குள் அதே வீரியத்துடன் நுழைந்தாலும், இங்கு இருக்கும் மொபைல் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை, மின்மாற்றிகளை எல்லாம் பழுதுபடுத்தி விடும். ஆனால் புவிக்குள் நுழையும்போது இதன் வீரியம் குறைந்து விடும் என்பதால், பெரிய பிரச்னைகள் இருக்காது. ஆனால் விண்வெளியில் பாதிப்பு அதிகம் இருக்கும்.

இதனால் சூரியப் புயல்கள் ஏற்படும். இதுவரை பதிவு செய்யப்பட்ட் மிகப்பெரிய சூரிய புயல் 1859-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்டது. அப்போது பூமியில் இருந்து தந்தி கருவிகள் எல்லாமே தானாக இயங்கின. அப்போது இருந்த எலெக்ட்ரானிக் சாதனம் அது மட்டும்தான் என்பதால், இதை மட்டுமே அப்போது அறிய முடிந்தது. இந்த அயனித்துகள்கள் இப்படி தாறுமாறாக செயல்படுவதால், மொபைல் டவர்கள், கணினிகள், செயற்கைகோள்கள் ஆகியவை பாதிக்கப்படும். ஆனால் அதற்கு பிறகு இந்த சூரியப்புயல் எதுவும் வரவில்லை.

இந்தமுறை வந்த இந்த அயனித்துகள்கள் பூமியை சுற்றி 11 மடங்காக இருந்த காந்தப்புலத்தை 4 மடங்கு என்ற அளவிற்கு குறைத்துவிட்டது. காந்தப்புலம் முழுமையாக சிதையாததால் இந்த துகள்கள் பூமிக்குள் ஓரளவு தான் நுழைந்தது. பின்பு மீண்டும் அந்த காந்தப்புலமானது முழுதாக வளர்ந்துவிட்டது என்பதால் பிரச்னை இல்லை. சூரியனில் இருந்து வெளிவரும் அயனித்துகள்கள் பூமியை மட்டுமின்றி அனைத்து கோள்களையும் தாக்கும். ஆனால் அவற்றில் எதுமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இன்னும் தெரியவில்லை.

இதனைக் கண்டறிந்ததன் மூலமாக, சூரியப் புயல்கள் வருவதற்கு சில நாட்கள் முன்னரே நாம் அதனைக் கண்டறிந்து உஷாராக முடியும். இன்னும் சில நாட்களில் புயல் வருகிறது என்றால், அதற்கு முன்பே, செயற்கை கோள்களை அணைத்து வைக்கவும், மக்களிடம் இது குறித்து எச்சரிக்கவும் முடியும். ஆனால் இது எப்போதோ ஒருமுறை மட்டுமே நடக்ககூடிய நிகழ்வுதான். அச்சப்படத் தேவையில்லை." என்றார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About