மன்மோகன் சிங்கை பேராசிரியர் ஆக்கிய மோடி! -ஆச்சரிய பின்னணி

நீண்டகாலமாகவே பேராசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும் என உறுதியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரிய...

நீண்டகாலமாகவே பேராசிரியர் பணிக்குத் திரும்ப வேண்டும் என உறுதியாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரிய இருக்கிறார். " மாநிலங்களவை எம்.பியாக இருப்பதால், ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் விண்ணப்பித்தார். அவரது வேண்டுகோள்
ஏற்கப்பட்டுவிட்டது" என்கின்றனர் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில்.

காங்கிரஸ் அரசில் பத்தாண்டு காலம் பிரதமராக கோலோச்சிய டாக்டர் மன்மோகன் சிங், சிறந்த பொருளாதார அறிஞராகப் பார்க்கப்பட்டவர். 1971-ம் ஆண்டு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டே நிதித்துறை தலைமை பொருளாதார ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்டார். நிதி அமைச்சக செயலாளர், திட்டக் குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என அவர் வகிக்காத பதவிகளே இல்லை. பிரதமர் நரசிம்மராவ் காலத்தில், மத்திய நிதியமைச்சராகப் பதவி வகித்தார். சிறந்த சிந்தனையாளராகவும் எளிதில் யாரும் அணுகக் கூடிய வகையில் அவரது நடவடிக்கைகள் இருந்தன. 'அவரது மென்மையான சுபாவமே அவருக்கான பதவிகளைக் கொண்டு வந்து சேர்த்தது' எனவும் காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் 35 ஆண்டுகாலம் இருந்தாலும், அவர் நேசித்த பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார்.

"1948-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில்தான் மெட்ரிகுலேசன் தேர்வுகளை முடித்தார் மன்மோகன். பொருளாதாரத்துறையில் 1957-ம் ஆண்டு முதல் ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வாசிப்பாளர், மூத்த பேராசிரியர் உள்பட சில பதவிகளை வகித்தார். அவருடைய பொருளாதார அறிவுக்கான தேடல்கள் அனைத்தும், பஞ்சாப் பல்கலைக்கழகத்திலேயே கிடைத்தது" என நெகிழ்ச்சியோடு விவரித்தார் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர், தொடர்ந்து நம்மிடம், " பிரதமர் பதவிக்காலம் முடிந்த பிறகு, 'பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிய வேண்டும்' என விரும்பினார். இதற்கு காங்கிரஸ் மேலிடமும் ஒப்புதல் அளித்தது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன்பிறகும், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மன்மோகன் சிங்கைப் பரிந்துரைத்தார் சோனியா.

காங்கிரஸ் தலைமை வைத்திருந்த நம்பிக்கைக்காக, அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராகப் பணியாற்ற வருமாறு மன்மோகன் சிங்குக்கு அழைப்பு வந்தது. ஆனால், எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்கக் கூடாது என அரசியல் சாசனச் சட்டம் கூறுவதால், 'கெளரவப் பேராசிரியர் பொறுப்பை ஏற்பதன் மூலம் ஆதாயம் தரும் பதவி வகிப்பதாக குற்றச்சாட்டு வருமா' என மாநிலங்களவைத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட கடிதத்தை, நாடாளுமன்ற நிலைக்குழு கூடி விவாதித்தது. ஒருகட்டத்தில், 'இந்தப் பதவியை ஆதாயம் தரும் பதவியாகப் பார்க்க முடியாது. மன்மோகன் சிங் தாராளமாகப் பணிபுரியலாம்' என மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் உத்தரவால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார் மன்மோகன் சிங்" என விவரித்தார் அவர்.

"பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்குகளில் மன்மோகன் பங்கேற்பார். ஆசிரியர்களுக்கும் அவர் வகுப்பு எடுக்க இருக்கிறார். இதில், அவர் சென்று வருவதற்கான விமான டிக்கெட், விருந்தினர் மாளிகைச் செலவு, வகுப்பு எடுப்பதற்கான கட்டணம் ஆகியவற்றை பல்கலைக்கழக நிர்வாகம் அளிக்கும். ஒருவகையில், இது ஆதாயம் தரும் பதவியாகப் பார்க்கப்பட்டாலும், மன்மோகனின் ஆசிரியர் கனவை நிறைவேற்றுவதற்கு மத்திய அமைச்சரையும் விரும்பியது. எனவே, அவருடைய கோரிக்கை எளிதாகவே நிறைவேற்றப்பட்டது. அவருடைய ஆட்சிக் காலத்தில், மாற்றுக் கட்சிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளிக்கக் கூடியவராகவே விளங்கினார். அவருடைய மென்மையான சுபாவமும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் எதிரிகளை உருவாக்கவில்லை என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர்.

முப்பதாண்டு காலத்துக்கும் மேல் இந்திய அரசியலைச் சுற்றி வந்த மன்மோகன் சிங்கை, இனி பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வகுப்பறைகளில் பார்க்கலாம். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About