கருணாநிதி ஒப்புதலோடு... தலைவராகிறாரா ஸ்டாலின்?

தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாக தொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்திய அளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்ற...

தி.மு.க-வின் தலைவராக அரை நுாற்றாண்டு காலமாக தொடர்ந்து இருந்து வருகிறார் கருணாநிதி. இது, இந்திய அளவில் எந்த தலைவருக்கும் இல்லாத சிறப்பு என்றே சொல்லாம். இந்தியாவில் பல கட்சிகளின் வயதே ஐம்பது ஆண்டுகள் இல்லாத நிலையில், ஒரு கட்சியின் தலைவராக ஐம்பது ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. தொண்ணுறு வயதைக் கடந்தும் இன்னும் கட்சித் தலைவர் என்ற சுமையை அவர் சுமந்து கொண்டிருப்பது போதும் என்று, தி.மு.க-வின் அடுத்தக் கட்ட தலைவர்களே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

'தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை அறிவிப்பது எப்போது?' என்ற கேள்விதான் இப்போது தி.மு.க-வினர் மத்தியில் உள்ளது. தலைவர் பதவிக்கு நான் தயாராகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை தொண்டர்களுக்கும், தி.மு.க வின் அடுத்தக் கட்ட தலைவர்களுக்கும் ஸ்டாலின் பலமுறை உணர்த்தி விட்டார். அவர்களும் அதை வழிமொழிந்து விட்டார்கள். ஆனால் அந்த தலைவர் பதவியை விட்டுத்தர வேண்டிய கருணாநிதியோ இன்னும் அமைதியாக இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வருவதற்கு முன், தான் கட்சியில் சேர்ந்து விடவேண்டும் என்று அழகிரி துடிக்கிறார். அடிக்கடி அப்பாவைப் பார்த்து அதற்கு அச்சாரம் போட்டு வருகிறார் அவர். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே அறிவிக்கப்படாத தலைவர் போலத் தான் ஸ்டாலின் செயல்பட்டு வந்தார்.

கருணாநிதி உடல்நிலை இப்போது நலிவுற்று இருக்கும் நேரத்தில், ஒரு கட்சியின் தலைவராகவே  முழு பரிமாணத்திற்கு கிட்டத்தட்ட ஸ்டாலின் வந்துவிட்டார் என்றே சொல்லலாம். திராவிட இயக்க விழாக்களை தி.மு.க நடத்தினால், அதில் கருணாநிதி இடம்பெறாமல் நடைபெறாது. இதுதான் இத்தனை ஆண்டுகால வழக்கம். ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு தாய்க் கட்சியான நீதிக் கட்சியின் நுாற்றாண்டு நிறைவுவிழா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற, அதில் பேசிய தலைவர்கள் அடுத்தத் தலைவர் ஸ்டாலின்தான் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்கள். அந்த விழாவில், பேசிய தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், “நீ தான் எங்கள் தலைவர்” என்று ஸ்டாலினை சுட்டிக்காட்டிப் பேசி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளார். இதே நிகழ்ச்சியில் பேசிய சுப. வீரபாண்டியன், “முடிசூட்டு விழாவாக தலைவர் பதவி ஏற்பு விழா” நடைபெறும் என்று ஓபனாகவே பேசினார். நீதிக்கட்சியின் நுாற்றாண்டு விழாவில் இவர்கள் பேசியதை மேடைப்பேச்சாக எடுத்துக் கொள்ள முடியாது. காரணம், 'நீதான் எங்கள் தலைவர்' என்று பேசிய துரைமுருகன், தி.மு.க வின் முதன்மைச் செயலாளர். 'கருணாநிதியின் கண் அசைவை வைத்து, அவர் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு கருணாநிதியின் நிழலாக இருப்பவர். அதைத் தாண்டி, கட்சியில் ஸ்டாலினைவிட மூத்தவர். இவரால் முன்மொழியப்பட்டது என்பது தி.மு.க வின் தலைமையின் கண் அசைவில்தான் நடந்துள்ளது' என்கிறார்கள் தி.மு.க-விற்கு நெருக்கமானவர்கள்.

கருணாநிதியோ ஸ்டாலினை தலைவராக்கும் மனநி்லையில்
இருந்தாலும், தனது தலைவர் பதவியை விட்டுத் தரவும் மனமில்லாமல் இருந்து வருகிறார். தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தால், ஒய்வுபெற்று விட்டார் கருணாநிதி என்ற பேச்சு வரும். ஒய்வுக்கே ஒய்வு கொடுத்த இந்த கருணாநிதியால், அப்படி இருக்க முடியாது என்று அன்பழகனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தவர்.

ஆனாலும், 'தலைவராக தன்னால் இப்போது சுறுசுறுப்புடன் செயல்பட முடியவில்லை என்பதால், ஸ்டாலினை செயல் தலைவராக்குவதற்கு என்று இப்போது கருணாநிதி ஒப்புக்கொண்டுள்ளார் ' என்கிறார்கள் அவர்கள். ஆனால் இதற்கு அன்பழகன்தரப்பில் இருந்து பாசிட்டிவ் பதில் இன்னும் வரவில்லை. அதேபோல் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால்தான் இதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள். இந்நிலையில்தான், இன்றுகாலை திடீர் என்று, அழகிரி கோபாலபுரத்திற்கு வருகை தந்தார். சிறிது நேரத்தில் ஸ்டாலினும் அங்கு வந்தார். இருவரும் தனித்தனியாக கருணாநிதியை சந்தித்துள்ளார்கள். அப்போது ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி அளிப்பது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. 'டிசம்பர் மாதத்தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் நடத்தி, செயல்தலைவர் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதும், அந்த பொதுக்குழுவில் இந்த அறிவிப்பை தலைவர் கருணாநிதியே அறிவிக்கும் வாய்ப்பும் உள்ளது' என்பதே கோபாலபுரத்தில் இருந்து வெளியே கசியும் செய்திகள். இந்த டிஸ்கசன் இன்னும் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை வைத்து நடக்கவில்லை. அப்படி நடக்கும் போதுதான், இது முழுவடிவத்திற்கு வர வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் கருணாநிதி குடும்பத்தை நன்கு அறிந்தவர்கள்.

ஸ்டாலின் தலைவரா? அல்லது செயல் தலைவரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About