'கிட்டுவின் தியாகம், ரசிகர்களை ஈர்த்ததா..?' - மாவீரன் கிட்டு விமர்சனம்

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்ச...

கற்பி, ஒன்றுசேர், புரட்சிசெய் என்கிற விஷயத்தை நோக்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் பயணமும், அந்த மூன்று விஷயங்களையும் தடுக்கிற ஆதிக்கசாதி சூழ்ச்சியும்தான் மாவீரன் கிட்டுவின் கதை.

கதை முழுக்கவும் 1987ல் நடக்கிறது. பொதுவழியில் பிணத்தைக்கூட கொண்டு செல்லவிடாமல் தடுக்கிற ஆதிக்கசாதியினர் ஒருபக்கம், கல்விகற்று முன்னேறி தங்களுடைய வாழ்வை மாற்றிக்கொள்ள துடிக்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இன்னொருபக்கம். என்றாவது ஒருநாள் அந்தப் பொதுவழியில் நிமிர்ந்து நடப்பது ஒன்றுதான் ஒடுக்கப்பட்டமக்களின் ஒரே லட்சியம்.

பனிரெண்டாம் வகுப்பில் தமிழகத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, முதல்தலைமுறை பட்டதாரியாக கல்லூரிக்குச் செல்கிறார் தாழ்த்தப்பட்ட சாதியைசேர்ந்த விஷ்ணு விஷால்.அவரை படிக்கவைப்பவர் ஊர்மக்களின் பிரச்னைகளுக்கெதிராகவும் குரல்கொடுக்கும் பார்த்திபன். தம் மக்களின் நிலை மாற வேண்டுமானால், விஷ்ணு விஷால் படித்து கலெக்டராக வேண்டும் என்ற பார்த்திபனின் வார்த்தைகளை சிரமேற்கிறார் விஷ்ணுவிஷால்.

இதற்கிடையே ஆதிக்கசாதி மக்களால் விஷ்ணுவிஷாலுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக அவர்களை முடக்க பல சதிவேலைகள் தீட்டப்படுகின்றன. பார்த்திபன் உதவியோடு மக்கள் போராட்டம் தொடங்க... பொதுவழியில் செல்வதற்கான கோரிக்கை நிறைவேறியதா? எளிய மாணவன் கிருஷ்ணகுமார் எப்படி மாவீரன் கிட்டுவாக ஆகிறான்? என்பதெல்லாம் மீதிக்கதை.

தமிழ்சினிமாவில் இந்த அளவுக்கு நம் கிராமங்களில் நிகழும் தீண்டாமை கொடுமைகள் பற்றி எந்தத்திரைப்படமும்  விரிவாகவும் ஆணித்தரமாகவும் பேசி இருக்குமா தெரியவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிணங்களை தங்களுடைய வீதிகளின் வழியே எடுத்துச்செல்லவும் கூட அனுமதி மறுக்கிற ஆதிக்க சாதித்திமிர். பெற்ற மகளையும் கழுத்தை அறுத்து கொன்று போடுகிற சாதி ஆணவப்படுகொலைகளின் பின்னணி. படித்து முன்னேறிவிடக்கூடாது என கல்விக்கு தடைபோடுகிற ஆதிக்கசாதி சூழ்ச்சிகள், தலித்துகளை அடக்க தன் சாதிக்காரனையே பலிபோடவும் தயங்காத கொலைவெறி என தலித்துகள் மீதான ஆதிக்கசாதியினரின் அத்தனை அடக்கு முறைகளையும் நுணுக்கமாக ஆராய்கிறது சுசீந்திரனின் ''மாவீரன் கிட்டு''. இப்படி ஒரு கதையையும் பின்னணியையும் தேர்ந்தெடுத்தற்காக சுசீந்திரனை நிறையவே பாராட்டலாம்.

கிருஷ்ணகுமார் என்கிற கிட்டுவாக விஷ்ணுவிஷால். உடலை முறுக்கேற்றிக்கொண்டு உறுதியான இளைஞனாக படம் நெடுக வருகிறார். முந்தைய படங்களை காட்டிலும் நடிப்பிலும் உடல்மொழியிலும் நல்ல முன்னேற்றம். ஆனால் சில முக்கியமான காட்சிகளில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞனின் கோபமும், ஆவேசமும், உணர்ச்சி கொந்தளிப்பான மனநிலையும் சரியாக வெளிப்படவில்லை என்பது பெரிய குறை.

சின்னராசுவாக கருப்புச்சட்டையிலேயே படம் முழுவதும் வருகிறார் பார்த்திபன். தன்னுடைய ஜாலிகேலிகளை விட்டுவிட்டு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஶ்ரீதிவ்யாவில் தொடங்கி பார்த்திபனுக்கு மனைவியாக வருகிற பெண் வரை அசலான கிராமத்து முகங்களை பார்த்து பார்த்து செய்திருக்கிற காஸ்டிங் கச்சிதம். குறிப்பாக கௌரவக்கொலை செய்கிற அந்த பெரியவர். பத்து நிமிடங்களே வந்தாலும் பதறவைத்திருக்கிறார். “சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க” என்று மிரட்டுகிற சாதிவெறி வில்லன் நாகிநீடுவும் போலீஸ் அதிகாரியாக கோபம் காட்டும் ஹரிஸ் உத்தமனும் நிறையவே அச்சமூட்டுகிறார்கள். சூரி படத்தில் இருக்கிறார்... ஆனால் அவரை சுத்தமாக பயன்படுத்தவே இல்லை. ஒரே ஒருகாட்சியில்தான் நடிக்கிறார் அதுவும் பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை! காமெடியும் இல்லை...

“ஓட்டுப்போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு. அடிக்கிறவன் அடிச்சிட்டே இருப்பான், திருப்பி அடிச்சா திமிருனு சொல்லுறான்”, “விட்டுக்கொடுத்துட்டே இருங்கங்கறீங்க. விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை” ''ஆண்டாண்டு காலமா அடிச்சுட்டு இருக்கான், திருப்பி அடிச்சா திமிருங்குறான்!'' என்று பார்த்திபனின் கேள்விகளில் வசனகர்த்தா யுகபாரதி பளிச்சென தெரிகிறார்.

பாடல்களில் இமானின் டிரேட் மார்க் பாடலாக ‘இளந்தாரி பொண்ணு’ ஜிவ்வடிக்கிறது. ஏற்கனவே ஸ்லோவான திரைக்கதையில், மற்ற பாடல்கள் சோதிக்கிறது. படத்தின் இரண்டாம்பாதியின் பெரிய சறுக்கலே அடுத்தடுத்து வருகிற இரண்டு பாடல்கள். கேட்க நன்றாக இருந்தாலும் படத்தின் 'மூட்'ஐ காலிபண்ணுதே பாஸ்! 80களில் கதை நடப்பதால் அதற்கான அமைப்புகளை துல்லியமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.சூர்யா. பறவைப்பார்வையில் கிராமத்தைக் காட்டும்போது கூடுதலாக உழைத்திருக்கிறது காமிரா.

கிராம மக்கள் எல்லாம் போராட்டத்தில் வாடிக்கொண்டிருக்க தலைமறைவாக இருக்கும் விஷ்ணுவிஷால் காதலியோடு டூயட் பாடுவது பெரிய நெருடல். அதுவும் இரண்டுமுறை அடுத்தடுத்து பாடி ஆடி மரத்தை சுற்றும்போது எரிச்சலாக மாறுகிறது.  ஊருக்குள் ஒரு முக்கிய பிரமுகர் கொலை நடக்கிறது, அதைப்பற்றி காவல்துறை பெரிதாக விசாரணை நடத்தாமல் நான்குபேரை பிடித்து உள்ளே போடுகிறது? அதற்குபிறகு அதற்கான சாட்சிகள், விசாரணைகள் என எதுவுமே இல்லையே ஏன்? போராட்டத்திற்காக பார்த்திபன் போடுகிற திட்டத்தில் அவ்வளவு பிரச்சனைகள், இருந்தாலும் எல்லாமே இயக்குனர் விரும்பியபடி நடந்துவிடுகிறது. யதார்த்தத்தில் இதெல்லாம் சாத்தியமாகுமா?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About