பிரசவத்தின் போது கணவர் அல்லது உறவினர் உடனிருக்கும் போக்கு அதிகரிப்பு!

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள...

உலக அளவில் கடந்த 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரசவ மரணங்களில் மூன்றில் ஒருபங்கு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மருத்துவ வார இதழான லேன்செட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், உலக அளவில் நடக்கும் பிரசவங்களில் 25 சதவீத பிரசவங்கள் சரியான மருத்துவரின் துணையின்றியே நடப்பதாகக்
கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 2015-ல் பிரசவத்தின் போது மரணித்த தாய்மார்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலக அளவில் மூன்றில் ஒருபங்கு இறப்பு இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 45,000 பேர் பிரசவத்தின்போது மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இதனிடையே“பிரசவ நேரத்தில் அனுமதிக்கப்படும் சொந்தங்களால், வலியால் துடிக்கும் பெண்ணுக்கு தொடர்ச்சியான நேரடி ஆதரவை வழங்க முடியும். குறிப்பாக, பெண்களை உடன் அனுமதிக்கும் போது, வசதியாக உணரச் செய்து, இயற்கையான முறையில் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கின்றன” என மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. சிசேரியன் அறுவைசிகிச்சையை தவிர்த்து, குறைந்த செலவிலான இயற்கை பிரசவத்தை ஊக்குவிக்கும் வகையில்,  அரசாங்கமே ‘Birth companionship’ திட்டத்தை பொது மருத்துவமனைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி அறிய மூத்த மகப்பேறியல் மருத்துவர்களிடம் பேசினோம்.

“இத்திட்டத்தை தனியார் மருத்துவமனைகளில் முன்பே அறிமுகப்ப டுத்தி விட்டனர். வசதியானவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்பதால் பயனாளிகள் மிகக் குறைவே. இப்போது இதை பொது மருத்துவமனை களில் அறிமுகப்படுத்தியுள்ளது சந்தோஷமான செய்தி. பழங்காலத்தில் உறவுப் பெண்களின் உதவியோடு வீட்டிலேயே  பிரசவம் பார்க்கும் முறை நம் நாட்டில் இருந்து வந்தது. அது ஒரு வகையில் கர்ப்பிணிகளுக்கு ஆதர வளிக்கும் வகையில் இருந்தது.

குழந்தைப்பேறில் ஏற்பட்ட அதிக அக்கறை மற்றும் மருத்துவத்துறையின் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்குப் பிறகு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெறுவது அதிகரித்தது. ஆனாலும், வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது மகப்பேறு இறப்பு விகிதம் நம் நாட்டில் சற்று அதிகமாகவே இருக்கிறது. கிராமப்புற ஏழை கர்ப்பிணிகள் பெரும்பாலும் நவீன வசதிகளற்ற பொது சுகாதார நிலையங்களில் அனுமதிக்கப்படுவதால் அதிக அளவில் இறக்கின்றனர். அரசு மருத்துவமனைகளிலும், பொது சுகாதார மையங்களிலும் உள்ள பணியாளர்கள் கடுமையாக நடந்து கொள்வதால் மனஅழுத்தத்துக்கும் உள்ளாகிறார்கள்.

இதனால் பிரசவத்தில் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர். தனியார் மருத்துவமனைகளின் அதிக செலவுக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. பிரசவத்துக்கு முன்னான பாதுகாப்பு சிகிச்சைகளையும் அப்பெண்கள் பின்பற்றுவதில்லை. இது தவறான போக்கு. நகர்ப்புறங்களில் இப்போது பிரசவத்துக்கு முந்தைய ‘குழந்தை பிறப்பு கல்வி’ வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த வகுப்புகளில் அனுபவம் மிக்க குழந்தை பிறப்பு கல்வியாளர்கள், மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவர்களைக் கொண்டு, சுவாச நுட்பங்கள், வலி மேலாண்மை, இயற்கைப் பிரசவம் மற்றும் சிசேரியன் முறை உள்பட அனைத்து பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் வகையில், கர்ப்பிணிகளுக்கும் கணவர்களுக்கும் கற்றுத் தரப்படுகிறது. இதுபோல கிராமத்துப்  பெண்களுக்கும், பிரசவத்தைப் பற்றிய முன்னறிவை போதிக்கும் வகையில் வகுப்புகளை நடத்தினால் சிறப்பாக இருக்கும். பிரசவத்தைப் பற்றிய முன்னறிவு, எப்படி பிரசவத்துக்கு ஒரு பெண்ணை தயாராக்குகிறது என்பதை விளக்கும் வகையில், விரிவான கையேடு ஒன்றை நான் வெளியிட்டுள்ளேன்.

லேபர் வார்டில் கர்ப்பிணியின் கணவ னையோ, உறவுப் பெண்களையோ அனுமதிப்பதால், அப்பெண் பிரசவத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை தன்னுடன் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். கணவரின் ஆதரவான ஸ்பரிசங்களும், வார்த்தைகளும் அப்பெண்ணுக்கு பிரசவத்தில் ஏற்படும் அசவுகரியங்களை குறைக்கிறது. இதனால் மருத்துவரோடு தன் முழு ஒத்துழைப்பையும் தரும்போது சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஆனால், கர்ப்பிணியின் தாயை சிலர் அனுமதிப்பதில்லை. ஏனெனில், ஒரு தாயால் தன் குழந்தை படும் கஷ்டத்தை சகித்துக் கொள்ள முடியாது. அதனால், டாக்டரிடம் ‘என் மகள் கஷ்டப்படாமல் குழந்தையைப் பெற்றெடுக்க ஏதாவது செய்யுங்கள்’ என்று கூறுவார். இது அப்பெண்ணின் தைரியத்தை குறைத்துவிடும். இதுவே, கணவனோ, மற்ற உறவுப் பெண்களாகவோ இருந்தால் தைரியமான வார்த்தைகளைச் சொல்லி அப்பெண்ணுக்கு உதவுவார்கள்.

ஏழைக் குடும்பங்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருப்பதால், Birth Companionship திட்டத்தை அனைத்து அரசு மருத்துவமனைகளில் முழுமையாகச் செயல்படுத்துவதோடு, தகுந்த வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும். இத்திட்டம் முழுமையாக வெற்றிபெறும்பட்சத்தில் நம்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு இறப்பு விகிதம் கணிசமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை” என்கிறார் மல்லிகா சாமுவேல்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About