சொன்ன சொல்லை காப்பாற்றிய விஜய் சேதுபதி!

ஏணியோ, ஸ்டூலோ…. இலக்கை அடைந்தவுடன் எட்டி உதைக்கப்படும் ஒரே ஜீவன்… ஏற்றி விட்ட இவைதான்! அரசியலிலும் சினிமாவிலும் ஆழப் பதிந்துவிட்ட இந்த சி...

ஏணியோ, ஸ்டூலோ…. இலக்கை அடைந்தவுடன் எட்டி உதைக்கப்படும் ஒரே ஜீவன்… ஏற்றி விட்ட இவைதான்! அரசியலிலும் சினிமாவிலும் ஆழப் பதிந்துவிட்ட இந்த சித்தாந்தம் சிலருக்கு மட்டும் வேப்பங்காய். தன்னை எப்போதும் ஒரே மாதிரி வைத்திருக்கும் குணம் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்த்த வரம்.

‘நம்பிக் கெடுவதில்லை. நம்பியோரை கெடுப்பதுமில்லை’ என்றிருக்கும் அந்த ஒரு சிலரில் விஜய் சேதுபதி முக்கியமானவர். அதற்கு உதாரணம் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படம். ஆன்ட்டனி, காயத்ரி கிருஷ்ணா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை லெனின் பாரதி இயக்கியிருக்கிறார். தயாரிப்பு ? வேறு யார்… நம்ம விஜய் சேதுபதிதான். இப்படம் உருவான கதையில்தான் இருக்கு விஜய் சேதுபதியின் பெரிய மனசு.

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் சின்னதாக ஒரு ரோலில் நடித்திருப்பார் விஜய் சேதுபதி. அப்போது அவருடன் நடித்த இன்னொரு சின்னவர் ஆன்ட்டனி. அப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் லெனின் பாரதி. அந்த நேரத்தில்தான் இந்தக் கதையை விஜய் சேதுபதிக்கு சொன்னாராம் லெனின். “நான் பின்னாடி பெரிய ஆளா ஆகிட்டேன்னா நானே இந்தப்படத்தை தயாரிக்கிறேன் ”என்று அப்போது வாக்குறுதி கொடுத்த விஜய் சேதுபதி, சொன்ன மாதிரியே தன் சொல்லை காப்பாற்றி விட்டார்.

அதுமட்டுமல்ல… அப்போது தன்னுடன் சின்ன ரோலில் நடித்த ஆன்ட்டனிதான் இந்த படத்தில் ஹீரேவாக நடிக்கிறார் என்று லெனின் சொன்னதையும் ஆட்சேபணை சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். தேனி- கேரளா எல்லை பகுதியிலிருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையிலிருக்கும் விவசாயிகளின் பிரச்சனை. அங்கு நடக்கும் அரசியல் இவற்றை மையப்படுத்திய கதைக்காக சுமார் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறார்கள் எல்லாருமாக.

விரைவில் திரைக்கு வரப்போகும் மேற்கு தொடர்ச்சி மலை, இப்போதே நாடு நாடாக திரையிடப்பட்டு கொள்ளை கொள்ளையாக விருதுகளை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. விஜய் சேதுபதியின் நல்ல மனசுக்காக இந்தப்படம் தமிழ்நாட்டிலும் கலெக்ஷனை அள்ளட்டும்…!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About