உலக நாடுகள் செய்ய நினைப்பதை செய்து முடித்த கேரள கிராமம்..!

கேரள மாநிலம் வயனாடு மாவட்டத்தில் இருக்கும் அழகான குட்டி கிராமம்தான் மீனாங்கடி. திரும்பும் திசை எங்கும் பசுமை போர்த்திய மலைகளும் அதில் முளைத...

கேரள மாநிலம் வயனாடு மாவட்டத்தில் இருக்கும் அழகான குட்டி கிராமம்தான் மீனாங்கடி. திரும்பும் திசை எங்கும் பசுமை போர்த்திய மலைகளும் அதில் முளைத்துக்கிடக்கும் மரங்களுமாக ரம்மிய தோற்றம் கொண்ட பகுதி. இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலையை (CARBON NEUTRALITY) தன்னகத்தே கொண்டிருக்கும் கிராமம் என்ற பெருமையை தற்போது மீனாங்கடி கிராமம் பெற்றிருக்கிறது.

குளோபல் வார்மிங் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரெம்ப் வெளியேறியுள்ள இந்தச் சூழலில், நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா? என்று போட்டி போட்டுக்கொண்டு கார்பன் -டை- ஆக்ஸைடை வெளியிடும் வல்லரசு நாடுகளுக்கு மத்தியில், கார்பன் வெளியீட்டை எப்படி தடுப்பது என உலக நாடுகள் மாதம் தோறும் மீட்டிங் மட்டுமே போட்டு பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மீனாங்கடி கிராமத்தை பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கார்பன் நடுநிலை:

ஒரு குறிப்பிட்ட பகுதியில், பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படும் கார்பன் – டை- ஆக்ஸைடு,  மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, ஹைட்ரோ புளூரோ கார்பன் போன்றவை வெளியாகும் அளவு கணக்கிடப்பட்டு கார்பன் நடுநிலை கணிக்கப்படும். அந்த வகையில், மீனாங்கடி கிராமத்தில் பூஜ்ஜிய சதவீத கார்பன் வெளியீடு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இயற்கை சமநிலைக்கு அதிகமாகவோ, குறைவாகவோ கார்பனை வெளியிடாத ஒரு அற்புதமான பகுதியாக மீனாங்கடி கிராமம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது ?

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காட்சி கொடுக்கும் இந்த அழகிய கிராமம், ஒரே நாளில் இந்த நிலைக்கு வந்துவிடவில்லை. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் இணைந்து, பல வருடங்களாக தங்கள் பகுதியை கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வழியில் கட்டமைத்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் 'கார்பன் நடுநிலை' என்ற இலக்கு. அதன்படி கடந்த வருடம் சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5, 2016ல் கிராம சபை கூட்டப்பட்டு, 'நம் கிராமத்தை கார்பன் நடுநிலைக்  கிராமமாக மாற்ற வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தோடு நின்றுவிடாமல் அதற்காக அவர்கள் காட்டிய வேகம் அளப்பறியது.

கிராமத்தில் யாரும் ரசாயன செயற்கை உரங்களை பயன்படுத்தக்கூடாது என்று முதலில் முடிவெடுத்தார்கள். அதன்படி `அட்டகொல்லி` என்ற பெயரில் இயற்கை வேளாண் பூங்காவை உருவாக்கினார்கள். அதில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி காய்கனிகள் விளைவிக்கப்பட்டு கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. உணவு முறையை சரி செய்த கிராம மக்களின் பார்வை அடுத்ததாக வனத்தின் பக்கம் திரும்பியது. கிராம பஞ்சாயத்து, உள்ளூர் தேவஸ்தான போர்டு, சமூக வனத்துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து 'புனிதக் காடு' என்ற பெயரில் ஒரு திட்டத்தை கொண்டுவந்து சுமார் 38 ஏக்கர் வன நிலத்தை கையகப்படுத்தி அதில் உள்ள மரங்களை பாதுகாத்தது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மரக் கன்றுகளையும் வனத்திற்குள் நடவு செய்தனர்.

ஊரைச் சுற்றி இருக்கும் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டன. பல புதிய குளங்களும் வெட்டப்பட்டன. தற்போது அந்தக் கிராமத்தை சுற்றி சிறியதும் பெரியதுமாக சுமார் 456 குளங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் குளங்களால், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், அருகில் இருக்கும் கிணறுகளும் வற்றாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் மீன்கள் மூலம் கிராமத்திற்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. அந்தவகையில், கிராமம் முழுவதும் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டில் அருகிலும் ஒரு மரக்கன்று நடப்பட்டு அவற்றையும் பராமரிக்கிறார்கள். கிராமச் சந்தைகளில் பிளாஸ்டிக் பைகளை தடை செய்திருக்கிறார்கள். அதற்கு பதில் துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் கிராமத்திற்குள் சைக்கிள் மூலமே பயணம் செய்கிறார்கள்.

இதைக் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் கிராமத்தின் ஒவ்வொரு குடிமகனும் கடைபிடிப்பதிலே உண்மையான சவால் அடங்கியிருக்கிறது. அதனை திறமையாக கையாண்டிருக்கிறது மீனாங்கடி கிராமம். அடிக்கடி கிராம கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும், வெளி மாவட்ட இயற்கை ஆர்வலர்களை அழைத்து பல கருத்தரங்குகள் நடத்துவதன் மூலமாகவும், தங்களின் நோக்கம் அனைவரிடமும் சரியாகப் போய்ச்சேர வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்தப் பணிக்காக, தங்கள் கிராமத்திற்காக தங்களையே அர்பணித்திருக்கிறார்கள் இந்த ஊர்வாசிகள்.

இவர்களின் தொடர் செயல்பாடு காரணமாக உலக கவனம் மீனாங்கடி கிராமத்தின் மீது பட ஆரம்பித்தது. 'கிரீன் கேரளா எக்ஸ்பிரஸ் ரியாலிட்டி ஷோ'வில் வெற்றி பெற்ற முதல் ஐந்து பஞ்சாயத்துகளில் மீனாங்கடி கிராமமும் ஒன்று. மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுகளில், சிறந்த செயல்பாட்டிற்கான பிரிவில் கடந்த மூன்றாண்டுகளாக முதல் இடத்தில் இருக்கிறது மீனாங்கடி கிராமம். கிராமத்தினரின் செயல்பாட்டை கண்ட கேரள அரசு,  சமீபத்திய மாநில வரவு செலவு திட்டத்தில், மீனாங்கடி கிராமத்தின் மேம்பாட்டிற்காக மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். அந்த தொகையானது மீனாங்கடி கிராம கூட்டுறவு வங்கி மூலம், இயற்கை விவசாயத்திற்கும், கிராம மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கிராமம் தன்னைச் சுற்றி இருக்கும் சூழலியல் பிரச்சனைகளை கவனமாக கையாண்டு அதில் வெற்றி பெற்று, ஒரு முன்னுதாரண கிராமமாக மாறியிருப்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த நிலைக்கு வர அந்த கிராம மக்களின் அயராத உழைப்பை அனைத்து நாடுகளும் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. தங்கள் பயணத்தின் சிறிய வெற்றியாகவே கார்பன் நடுநிலை சாதனையை மீனாங்கடி கிராம மக்கள் பார்க்கிறார்கள். உலக அளவில் இயற்கை சமநிலை கொண்ட அற்புதமான கிராமமாக தங்கள் கிராமத்தை மாற்றுவதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. அவர்களின் பயணம் வேகமானது.

கார்பன் வெளியீட்டால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை வரும் என்பது பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படுத்தவே போராட வேண்டியிருக்கிறது. ஆனால், மீனாங்கடி மக்கள் அதற்கு தீர்வு யோசித்து, அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.

ரமணா திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். யூகி சேது விஜய்காந்தை கண்டறிந்து அவரை நெருங்கிவிடுவார். ஆனால், விசாரணை கமிஷன் ஆட்கள் “ஒரு ஆஃபீஸ்ல லஞ்சம் வாங்குறவன போட்டுக் கொடுக்கிறவன், லஞ்சம் வாங்காத ஆளாதான இருக்கும்” என பேசிக்கொண்டிருப்பார்கள். உலக நாடுகள் விசாரணை கமிஷன். மீனாங்கடி மக்கள்தான் யூகி சேது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About