மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

`கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் கா...

`கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் காலத்தில் இருந்து நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சமீப காலமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் கீரைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

 ஊட்டச்சத்து மூலம் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில் ,குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட்,  பர்கர், பீட்சா  எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

மைக்ரோ் கீரை என்றால் என்ன?

காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது. முளைகளும் மைக்ரோ கீரையும்  ஒன்றல்ல.  முளைகள் பொதுவாகச் சுமார் இரண்டு முதல் மூன்று அங்குல உயரம் வரை வளரும். மைக்ரோ கீரை எட்டு முதல் பத்து அங்குலம் வரை வளர்க்கப்படுகிறது. முளை வளர்வதற்குச் சூரிய ஒளியும் மண்ணும் தேவையில்லை. ஆனால், மைக்ரோ கீரை மண்ணில் வளர்க்கப்படுவதால் சூரிய ஒளியும் தண்ணீரும் தேவைப்படுகின்றன. மைக்ரோ கீரைகளின் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும். இதுதவிர உண்ணும் உணவுக்கு மொறுமொறுப்பான (Crunchy) தன்மையைக் கொடுக்கிறது.  கொத்தமல்லி, வெந்தயம், புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, கடுகுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை மற்றும் கோதுமைப்புல் ஆகியவை நம் வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மைக்ரோ கீரைகள்.

மைக்ரோ கீரைகளின் நன்மைகள்

மைக்ரோ கீரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் என்சைம்களும் நிறைந்தவை. என்சைம்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் செய்யப்பட்டவை. மைக்ரோ கீரைகளை என்சைம்களின் `ஸ்டோர் ஹவுஸ்’ என்று கூறலாம். செல்களின் சரியான வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் அபிவிருத்திக்கும் அத்தியாவசியமானவை.

மைக்ரோ கீரைகளில் நீண்டநாள் இளமையாக இருப்பதற்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடல் எடை இழக்க விரும்புபவர்கள், தினமும் தங்கள் உணவுப் பட்டியலில் ,  ஒரு சிறிய  அளவு  சேர்த்துக்கொள்ளலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிரம்பிய மைக்ரோ கீரைகள், உண்பவரின் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துவதோடு, சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுபவை. நோய் வருவதையும் தடுக்கும். இவற்றிலுள்ள புத்தம் புதிய குளோரோபில், சக்தி வாய்ந்த ரத்தச் சுத்திகரிப்பானாகச் செயல்படும்.

சிவப்பு முட்டைகோஸின் இளம் கீரைகளில் வைட்டமின் சி, கே மற்றும் இ நிறைந்துள்ளன. கொத்தமல்லியில் கண்களுக்கு நலம் புரியும் லுடீன் (Lutein) மற்றும் பீட்டா கரோட்டின் (Beta Carotene) மிகுதியாக உள்ளன. மேலும், புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், புற்றுநோய்ச் செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயக் கீரை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் சிறந்தவை. வெந்தயக் கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்தச்சோகை  சரியாக உதவுகிறது.

மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், சிவப்பு முட்டைகோஸ், கொத்தமல்லி மற்றும் முள்ளங்கி போன்ற மைக்ரோ கீரைகளில் முதிர்ந்த கீரைகளைவிட 40 மடங்கு அதிகளவு சத்துகள் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மைக்ரோ கீரை இரண்டு, மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால், அவை வளரும் மண்ணுக்குப் பூச்சிக்கொல்லிகளோ அல்லது  களைக் கொல்லிகளோ பயன்படுத்தத் தேவையில்லை. இது ரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகளை உட்கொள்ள வழி செய்கிறது.

மைக்ரோ கீரைகளை நம் வீட்டில் வளர்ப்பது மகிழ்ச்சியைத் தரும் ஒரு பொழுதுபோக்கும்கூட. அதிக இடமோ நேரமோ, பணமோ இதற்குத் தேவையில்லை .

ஆரோக்கியமாக இருக்க, நீங்களும் உங்கள்  இல்லங்களில் மைக்ரோ கீரைகளை வளர்க்க முயற்சி செய்யலாமே!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About