பண்டிகை - பண வேட்டை! திரைவிமர்சனம்

 பணத்தை இழந்தவரும், தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கத் துடிப்பவரும் சந்திக்கும் புள்ளியே 'பண்டிகை'. குடும்பச் சூழல், கடுமையான நெருக்கட...

 பணத்தை இழந்தவரும், தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கத் துடிப்பவரும் சந்திக்கும் புள்ளியே 'பண்டிகை'.

குடும்பச் சூழல், கடுமையான நெருக்கடியில் சூதாட்டத்தில் நம்பி பணத்தைப் போடுகிறார் சரவணன். அதில் தோல்வியே பரிசாகக் கிடைக்க பணத்தை இழந்து தவிக்கிறார். கர்ப்பிணி மனைவி இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நிற்கும் சரவணன் கிருஷ்ணாவின் வலிமையை நேரில் காண்கிறார். பணத்துக்காக இன்னொருவனை அடிக்கலாம் என்று 'பண்டிகை' ஆட்டத்தை அறிமுகம் செய்கிறார். பாஸ்போர்ட் எடுக்க பணமில்லாமல் தவிக்கும் கிருஷ்ணா அந்த ஆட்டத்தில் கலந்துகொள்கிறாரா, சூதாட்டம் யாரை வென்றெடுத்தது, கிருஷ்ணாவின் காதல் என்ன ஆனது, இழந்ததை சரவணன் மீட்டாரா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பண்டிகை'.

சூதாட்ட உலகில் நடக்கும் நிலவர கலவரங்களை கண்முன் நிறுத்தி இருக்கும் இயக்குநர் ஃபெரோஸுக்கு வாழ்த்துகள். கதைக் களத்துக்கேற்ப நுட்பமான பதிவுகள் மூலம் கவனிக்க வைக்கிறார்.

ரஜினியைப் போல நடிப்பது, நகைச்சுவை என்ற பெயரில் மிகையாக நடிப்பது என எந்த ரிப்பீட்டும் இல்லாமல் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான நடிப்பை கிருஷ்ணா குறையில்லாமல் கொடுத்திருக்கிறார். அடிச்சாதான் கிடைக்கும் என்ற அனுபவப் பாடத்தின் எதிரொலி, உதவி செய்யப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டாலும் கடைசி வரை உதவும் குணம், காதலில் நெகிழும் தருணம், போன் நம்பரைக் கண்டுபிடிக்க மெனக்கெடும் நாட்கள் என எல்லாவற்றிலும் தன் நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். இனி கிருஷ்ணா இதே பாதையில் பயணிப்பது அவருக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆனந்தி குணச்சித்திர கதாபாத்திரத்துக்கே உரிய சில நிமிடங்களில் மட்டும் அவ்வப்போது தென்படுகிறார். அந்த கணங்களில் குறுநகையால் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.

வீடு, சொத்து, கடை அடமானம் எல்லாவற்றையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் கனமான கதாபாத்திரத்தை சரவணன் மிகச் சிறப்பாகக் கையாள்கிறார். தோற்கும் போதெல்லாம் கலங்குவதும், துரோகம் உணர்ந்து கொதிப்பதும், இழப்பதை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்குவதுமாக முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிதின் சத்யா தனித்துத் தெரிகிறார். கவுரவத் தோற்றம் என்றாலும் கருணாஸின் நடிப்பு சிறப்பு. அருள் தாஸ், மதுசூதனன் ராவின் நடிப்பு கன கச்சிதம். அந்த இரட்டையர்கள் யார்? தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

அரவிந்தின் கேமரா சில நேரங்களில் நம் தோள்களில் பரபரக்கிறதோ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. பதற்றத்தையும், பயத்தையும் கடத்திய விதத்தில் விக்ரமின் பின்னணி இசைக்கு பெரும் பங்கு உள்ளது.

சூதாட்ட உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள், சொல்லிவைத்து தோற்பது, யார் வெற்றி பெறுவது என முன்கூட்டியே தீர்மானிப்பது உள்ளிட்ட உள்குத்து வேலைகளும், விவரணைகள் படத்தில் சரியாக உள்ளன.

மதுசூதனன் ராவ் வளர்த்துவிடும் நபர் அவரது பேச்சை மீறி முன் விரோதமே இல்லாத கிருஷ்ணாவை வீழ்த்தத் துடிப்பது ஏன், அவர் ஹோட்டல் காட்சியில் கிருஷ்ணாவை சீண்ட முயற்சிப்பது ஏன், சந்தேகம் வரும் என்று தெரிந்து கருணாஸ் எஸ்கேப் ஆகிறார். ஆனால், மற்றவர்களுக்கு அந்த எண்ணம் வராதது ஏன் என்ற சில கேள்விகள் எழுகின்றன. அந்த செஃல்பி விசாரணைக்கு எந்த விதத்திலும் உதவவே இல்லையா? இரண்டாம் பாதியின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். குத்துப்பாடலைக் கத்தரி செய்திருக்கலாம்.

இவற்றை தவிர்த்துப் பார்த்தால் பண வேட்டைக்காக நடத்தப்படும் ஆட்டமாக 'பண்டிகை' உள்ளது

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About