திரைவிமர்சனம் - தீரன் அதிகாரம் ஒன்றில் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் முடித்தார்.

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வ...

கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டதை பிடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

கார்த்தி DSP ட்ரெயினிங்கில் நல்ல ரேங்கில் தேர்ச்சியாகி வெளியே வருகிறார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளை நடக்கின்றது.

அந்த கொள்ளையும் மிகவும் கொடூரமாக மக்களை கொன்று செய்கின்றனர். கார்த்தி கைக்கு இந்த கேஸ் வருகின்றது.

இவர் இந்த கேஸில் முழு மூச்சாக இறங்க பிறகு தான் தெரிகின்றது இந்த கொள்ளை இந்தியா முழுவதும் நடக்கின்றது என்று.

அதை தொடர்ந்து பல வருடம் அந்த கேஸுக்காக கார்த்தி அலைய, அந்த கும்பல் யார்? கார்த்தி பிடித்தாரா? என்பதை பரபரப்பின் உச்சமாக காட்டியுள்ளார் வினோத்.

படத்தை பற்றிய அலசல்

கார்த்தி பருத்திவீரன், மெட்ராஸ் படத்திற்கு பிறகு நடித்த ஒரு பெஸ்ட் என்று சொல்லிவிடலாம். சிறுத்தை படத்தில் மாஸ் போலிஸாக கலக்கிய கார்த்தி இதில் கிளாஸ் பெர்பாமன்ஸில் அசத்துகின்றார். மக்கள் அனைவரும் இப்படி ஒரு போலிஸ் வேண்டும் என்று விருப்பப்படும் போலிஸாக நடித்துள்ளார். இதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் என்றும் சிலர் கூறுவார்கள்.

அப்படி எளிதில் கூறி கடக்க முடியாத கதை தான் இந்த தீரன். 1995-ல் தமிழகத்தில் நடந்த கொடூர கொலை, கொள்ளை என உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுத்துள்ளார் வினோத். மக்களுக்காக ஊர், சொந்தம் என மறந்து இப்படியும் போலிஸ்கள் இருந்துள்ளார்கள் என்பதை காட்டியவிதம் அவர்களுக்கு ஒரு சமர்ப்பணமாகவே இருக்கும்.

அதிலும் படம் முழுவதும் போலிஸிற்கு மட்டுமே ஜால்ரா அடிக்காமல், லஞ்சம் வாங்குவது, ஆங்கிலம் தெரியாமல் திணறுவது என ஒரு சில குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். படத்தின் பல காட்சிகள் பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

முக்கியமாக இடைவேளையில் கொள்ளை கும்பலை கார்த்தி நெருங்கும் காட்சி சீட்டின் நுனிக்கு இல்லை, சீட்டிலிருந்து எழுந்தாலே ஆச்சரியம் இல்லை. கொள்ளை என்றால் வெறுமென திருடுவதை மட்டும் காட்சிகளாக வைக்காமல், எப்படி இவர்கள் எல்லாம் கொள்ளையர்களாக மாறினார்கள் என்று பின்கதை வைத்து விளக்குவது செம்ம வினோத்.

படத்தின் ஒளிப்பதிவு சத்யன் ராஜஸ்தான், ஹரியானா என இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் படம்பிடித்து காட்டியுள்ளார், கதையோடு நம்மையும் பயணிக்க வைக்கின்றனர். ஜிப்ரான் கடந்த வாரம் அறம், இந்த வாரம் தீரன் இரண்டிலும் சிக்ஸர் தான், விஸ்வரூபம்-2 எப்போது என்பது தான் எல்லோரின் கேள்வியும்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் உண்மை சம்பவம் என்றாலும் அதை கமர்ஷியலாகவும், மிகைப்படுத்தாமலும் எடுத்த விதம்.

கொள்ளை என்பதை போகிற போக்கில் சொல்லாமல் அதற்கு பின்கதை வைத்து விளக்கிய விதம்.

ஒளிப்பதிவும், இசை என டெக்னிக்கல் டீம் அனைத்தும்.

படத்தின் சண்டைக்காட்சிகள், அதிலும் கிளைமேக்ஸில் இரண்டு பஸ்ஸுகளுக்கு இடையே வரும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

ராகுல் ப்ரீத் சிங் நடித்ததிலேயே இதில் தான் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரம் என்றாலும், ஆரம்பத்தில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் கொஞ்சம் படத்தோடு ஒன்றவில்லை.

மொத்தத்தில் தீரன் அதிகாரம் ஒன்றில் பரபரப்பாகவும், வெற்றிகரமாகவும் முடித்தார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About