`ஜெயலலிதாவோடு நடித்திருப்பேன்..!’ - அவையில் சிரிப்புவெடிகளைக் கொளுத்திப்போட்ட துரைமுருகன்

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமூகவலைதள ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். அவர் எது பேசினாலும் வைரலாகிவிடுகிறது. சட்டப்பேரவையில் அவ...

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமூகவலைதள ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். அவர் எது பேசினாலும் வைரலாகிவிடுகிறது. சட்டப்பேரவையில் அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு சிரிப்பலைகள் எழும். அவையில் தான் கூறவரும் விஷயங்களை நகைச்சுவை கலந்து முன்வைப்பதுதான் இவரின் தனிச்சிறப்பு.

சட்டப்பேரவையில் இன்று கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து துரைமுருகன் பேசினார். அப்போது கிராமியப் பாடல்களைப் பாடிக்காட்டினார். அவரின் பாட்டைக் கேட்டு அசந்துப்போன சபாநாயகர் தனபால்,  `நீங்கள் நாடகங்களில் நடித்தது உண்டா?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த துரைமுருகன்  `நான் சிறுவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல் இந்த உலகமே நாடக மேடை. இங்கு நாம் அனைவருமே நடித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நடிக்கிறோம். சபாநாயகர் ஆகிய நீங்களும் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்றார். அப்போது உறுப்பினர்களின் சிரிப்பலையில் அவையே அதிர்ந்தது.

துரைமுருகனைப் பாராட்டும்விதமாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  `மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு அவையில் பேசும்போது, துரைமுருகன் நவரசம் வெளிப்படும் விதமாகப் பேசுவார் என்று புகழ்ந்திருக்கிறார்’ என்று சுட்டிக்காட்டினார்.

அதற்கு தன்னடக்கத்துடன் பதிலளித்த துரைமுருகன்  `நான் சினிமாத் துறைக்குப் போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும். நானும் சிவாஜி கணேசன் போன்று ஆகியிருப்பேன்’ என்றார். அவரின் இந்த ஸ்டேட்மெண்டை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சிரிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விழிபிதுங்க, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆர்ப்பரித்து மேஜையைத் தட்டிச் சிரித்தனர். இப்படியே இவர் பேசிக் கொண்டிருந்தால் ட்விட்டரில் விரைவில் `துரைமுருகன் ஆர்மி’ உருவாகிவிடும்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About