'பறந்திருக்கிறார்களா?' - 'பறந்து செல்ல வா' விமர்சனம்

'காதலுக்காக ஏங்கும் ஹீரோவுக்குக் காதலி கிடைத்தாளா' என்கிற கதையே 'பறந்து செல்ல வா'. சிங்கப்பூரில் வேலைக்காகச் செல்கிறார்...

'காதலுக்காக ஏங்கும் ஹீரோவுக்குக் காதலி கிடைத்தாளா' என்கிற கதையே 'பறந்து செல்ல வா'.

சிங்கப்பூரில் வேலைக்காகச் செல்கிறார் ஹீரோ லுத்ஃபுதீன். அவரின் நண்பரான சதீஷின் வீட்டில் தங்குகிறார். வந்த வேலையைப் பார்ட்டைமாகப் பார்த்துக் கொண்டு ஃபுல்டைமாகத் தனக்கு ஒரு காதலியைத் தேடி அலைகிறார். சதீஷின் காதலி தொடங்கிப் பார்க்கும் பெண் மீதெல்லாம் லவ்வோ லவ். இதற்கு இடையில் உனக்கெல்லாம் லவ்வா என நண்பர்கள் கலாய்க்க தனக்கென ஒரு காதலி இருப்பதாகப் பொய் சொல்கிறார்.

அலுவலக நண்பன் ஆர்.ஜே.பாலாஜி உதவியுடன் சீனப் பெண் ஒருத்தியின் ஃபேக் ஐடி உருவாக்கி ஆதாரத்தையும் காட்டுகிறார். தன் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஃபேக் ஐடி உருவாக்கியதை தெரிந்து கொள்ளும் அந்தச் சீனப் பெண் லுத்ஃபுதீன் மேல் கோபமாகி ஃபாலோ செய்கிறார். காதலை வைத்து நண்பர்களிடம் சீன் போடும் நேரத்தில் லுத்ஃபுதீனின் வீட்டில் அவருக்கு ஒரு பெண் பார்க்கிறார்கள் அந்தப் பெண்ணும் சிங்கப்பூரிலேயே இருக்கிறார். அவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ்.. இருவரும் நட்பாகப் பழகி காதலிக்க ஆரம்பிக்கும், அதே நேரத்தில் லுத்ஃபுதீனை ஃபாலோ செய்து அவரது குணம் பிடித்துப் போய் நரைல்-க்கும் அவர் மேல் காதல் வருகிறது. ஐஸ்வர்யாவுடன் டூயட் பாடி முடித்து வரும் லுத்ஃபுதீன் முன் திடீரென என்ட்ரி கொடுக்கிறார் நரைல். ஃபேக் ஐடி மேட்டர் நரைல்-க்கு எப்படித் தெரிந்தது? லுத்ஃபுதீனுக்குக் காதல் அமைந்ததா? சதீஷ் சொல்லும் காமெடிகளுக்குச் சிரிப்பு வந்ததா என்பது மீதிக் கதை.

படத்தை தாங்க வேண்டிய முக்கியமான ரோல் லுத்ஃபுதீனுக்கு. சில இடங்களில் அதை சரியாக செய்தாலும், இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டுமோ மொமெண்ட்ஸ் தான் அதிகம். காதல், சோகம், சிரிப்பு என நடிக்க நிறைய வாய்ப்பு இருந்தும் ’பாயிண்ட் வரட்டும் பாயிண்ட் வரட்டும்’ என வெயிட் செய்து கொண்டே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதெல்லாம் ஜுஜுபி. மிக இயல்பாக நடித்து நகர்கிறார். சீனப் பெண் நரைல் கெங் அழகு. ஆங்கிலம் கலந்த தமிழ் டப்பிங் என்று சொல்லி சமாளித்தாலும் நடிப்பில் ஆவரேஜ் தான். காமெடியன்கள் நிறைய. ஆனால், காமெடி பெரிதாக இல்லை. வசனங்கள் கூட, "இப்போ எல்லாம் வீட்ல சம்பளம் கேட்கறாங்க, ஏன் அம்மா, அப்பாவையும் வேலைக்கு வெச்சுருக்கியா?", அந்தப் பொண்ணு பின் பேண்ட்ல ஒட்டின பபுள்கம் மாதிரி எங்க போனாலும் பின்னாலயே வரும்" என ரொம்ப சுமார்தான். இதையும் மீறி ஆர்.ஜே.பாலாஜியின் மாடுலேஷன் மட்டும் தான் சிரிப்பு வர வைக்கிறது.

சில சீன்களில் குரல்கள் அதிக வால்யூமில் ஒலிப்பது, ஜம்ப் ஆகும் எடிட்டிங் என டெக்னிக் குறைகளைக் கடந்தாலும் கூடக் கதையிலேயே சொதப்பியிருப்பது பெரிய மைனஸ். ஹீரோ காதலிக்கும் பெண் ஐஸ்வர்யா ராஜேஷ், ஹீரோவைக் காதலிக்கும் பெண் நரைல். அந்த ஏர்போர்ட் முடிவுக்குப் பிறகு எந்த ஃபீலிங்கும் இல்லாமல், "வாங்க காபி சாப்பிடலாம்" என்பது போல ஹீரோ காதலை ஷிஃப்ட் செய்வதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். காதல் படத்தில் காதலுக்கான எந்த அர்த்தமும், அழுத்தமும் இல்லாமல் இருப்பது என்ன நியாயம்?  ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் 'நதியில் விழுந்த' பாடல் மட்டும் ஓகே. சந்தோஷ் விஜய்குமார், பிரபாகரன் ஒளிப்பதிவில் சிங்கப்பூர் அழகை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள்.

திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருந்தால் எல்லொலோரையும் திரும்பி பாக்க வைத்திருக்க கூடிய களம் தான்.ஆனால் பறக்கலாம் என அழைத்து ஹை ஜம்ப் தாண்ட வைக்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About