விமான நிலையம் போல் ரயில் நிலையம், ரயில் டிக்கெட்டில் தமிழ்! 'ஆச்சர்ய' ஆசிர்வாதம் ஆச்சாரி

மக்களுக்கு சேவை வழங்கும் மத்திய அரசின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று ரயில்வே. இந்தியா முழுக்க மக்களை ஒருங்கிணைத்தாலும் இந்நிலையில் நாட்டில் ...

மக்களுக்கு சேவை வழங்கும் மத்திய அரசின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று ரயில்வே. இந்தியா முழுக்க மக்களை ஒருங்கிணைத்தாலும்

இந்நிலையில் நாட்டில் முதன்முறையாக ரயில்வே டிக்கெட்டில் தமிழ் இடம்பெறும் என்ற இனிப்பான தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் ஒரு தமிழர்; இந்திய ரயில்வேத்துறையின் முன்னாள் அதிகாரியும், அகில இந்திய ரயில்வே பயணிகள் மேம்பாட்டுவசதிகள் குழுவின் உறுப்பினருமான ஆசிர்வாதம் ஆச்சாரி.

டில்லியில் கடந்த 28ந்தேதி நடந்த அகில இந்திய ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு கமிட்டியின் கூட்டத்தில்தான் இந்த தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே வாரிய அதிகாரிகள் மற்றும் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், ரயில் பயணிகளின் பல்வேறு வசதிகள் குறித்த பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. அப்போது குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ஆசிர்வாதம் ஆச்சாரி, தான் நீண்டகாலமாக வலியுறுத்திவந்த ரயில்வே டிக்கெட்டுகளில் தமிழ் மொழியை இடம்பெறச் செய்யும் கோரிக்கை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு 'அதை செயல்படுத்த முடியாது என்றும் அதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு மறுத்துள்ளது. அடுத்த ஒரு மணிநேரம் அதிகாரிகள் தரப்புக்கும் ஆசிர்வாதம் ஆச்சாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இறுதியில் வென்றது தமிழ்தான்.

ஆம் விவாதத்தின் முடிவில் ரயில்வே டிக்கெட்டில் தமிழ் வாசகங்கள் இடம்பெறச்செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். இதன் முதற்கட்டமாக ரயில்வேத்துறையில் டிக்கெட் அச்சடிக்கப்பயன்படுத்திவந்த பழமையான சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தைத் துார எறியும் முடிவுக்கு வந்துள்ளது ரயில்வேத்துறை.

ஆசிர்வாதம் ஆச்சாரிகுழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியவருமான ஆசிர்வாதம் ஆச்சாரியிடம் பேசினோம். “மகிழ்ச்சியாக உள்ளது ரயில்வேத்துறையின் இந்த முடிவு. இந்தியா முழுவதிலுமிருந்தும் தமிழர்கள் கடந்த 2 நாள்களாக செல்போனில் பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்”  என்றவரிடம் ரயில்வேத்துறையில் தமிழைப் புகுத்தியதன் பின்னணியில் நடந்தது என்ன, என்றோம்.

“அகில இந்திய ரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக் கமிட்டியின் உறுப்பினராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டேன். ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தியது, கோவையில் பதினைந்து ஆண்டுகளாக பயணிகளிடம் பார்க்கிங் என்ற பெயரில் கொள்ளையடித்துவந்த ஒரு அரசியல் பின்னணி கொண்ட நபரின் அட்டூழியத்தை ஒழித்தது என பயணிகள் வசதிக்காக இந்த ஓராண்டில் பல பல விஷயங்களை நான் முன்னெடுத்து வெற்றிகண்டிருக்கிறேன். ஆனாலும் என் தாய் மொழிக்கு அங்கீகாரம் கிடைக்கச்செய்த இந்த பணியையே பெருமிதமாக கருதுகிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஆசிர்வாதம் ஆச்சாரி, “ரயில் டிக்கெட்டில் தமிழை இடம்பெறச் செய்த என் முயற்சிக்கு வயது 1. ரயில்வேத்துறையில் பணியாற்றிய காலத்திலேயே என் மனதில் பூத்த ஆசை இது. பின்னர் ரயில்வே பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக் கமிட்டியில் உறுப்பினராக ஆனபின் அதை செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் சரியான இடம் இது என முடிவெடுத்தேன். தொடர்ச்சியாக ஒவ்வொரு கூட்டத்திலும் இதைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் வாதபிரதிவாதங்களுடன் அது நின்றுபோகும். கடந்த 28ந்தேதி டில்லியில் ரயில்வே போர்டு அலுவலகத்தில் நடந்த அகில இந்திய ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு கமிட்டியின் கூட்டத்தில் மீண்டும் இதை வலியுறுத்தினேன். இம்முறை ஒரு முடிவாகவே என் வாதங்களை முன்வைத்தேன்.

' ரயில்வே என்பது ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான வாகனம். இதில் பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் படிக்காத பாமர மக்கள். ரயில்வேயின் வளர்ச்சிக்குக் காரணமான அந்த எளிய மனிதர்கள் தங்களின் மொழியில் ஒரு தகவல் இருந்தால் பெரிதும் மகிழ்வார்கள். மொழிவழி வசதி செய்து தருவது பயணிகளுக்கு நாம் செய்துதரும் அடிப்படை வசதிதானே தவிர அது பெரிய சலுகை அல்ல என்றதோடு, அதைக் கூட செய்துதரமுடியவில்லை என்றால் சேவை நிறுவனம் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை' என்றேன்  அதிகாரிகளிடம்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. உங்களின் ஒரு கோரிக்கைக்காக பெரிய சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தை மாற்றமுடியாது. அதற்கான செலவு அதிகம் என உறுதியாக மறுத்தனர்.  ரயில்வேயில் டிக்கெட் அடிக்கப் பயன்படுத்தப்படும் கோபோல் எனப்படும் சாப்ட்வேர் தொழில்நுட்பம் 80 களில் அறிமுகமானது. நான் கல்லுாரியில் படித்த காலத்தில் உருவாக்கப்பட்ட சாப்ஃட்வேரையே ரயில்வேத்துறை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உலகில் வேறு எங்கும் இந்த சாஃப்ட்வேர் புழக்கத்தில் இல்லை. இவர்கள் பயன்படுத்தும் டாட்மேட்ரிக்ஸ் பிரின்டரும் இன்று வழக்கொழிந்துவிட்ட மாடல். தொழில்நுட்பத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்ரிக்காவில் கூட இன்றைய நவீன சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா என எங்கும் எதிலும் மோடி இந்தியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவரும்வேளையில் இன்னும் அரதப்பழசான சாஃப்ட்வேரை பயன்படுத்துவது முரணான விஷயம். அதனால் அதை மாற்றி புதிய சாஃப்ட்வேரை உருவாக்குங்கள்' என்றேன் கோபமாக.

“உங்களால் முடியாது என்றால் சொல்லுங்கள். நானே ஒரு மேனேஜ்மென்ட் கன்ஸல்டன்ட்தான். என் சொந்தச் செலவில் மென்பொறியாளர்கள் குழுவை அமைத்து  புதிய சாஃப்ட்வேரைத் தயாரித்து ரயில்வேத்துறைக்கு வழங்குகிறேன்” என்றேன். இந்த வார்த்தை அதிகாரிகளுக்குச் சங்கடமாகிவிட்டது. பின்னர்தான் அதிகாரிகள் இதற்கு முக்கியத்துவம் அளித்தனர். பின்னர்தான் புதிய சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஓடும் ரயில்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கிலம் இவற்றுடன் தமிழையும் இடம்பெறச்செய்வதாக உறுதியளித்தனர். அதேசமயம், 'தமிழுக்கு மட்டும் அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் மற்ற மாநிலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும்' என்றனர். 'அப்படியானால் பாரபட்சமின்றி இந்தியா முழுக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 மொழிகளுக்கும் அதை நீட்டித்தால் இன்னும் மகிழ்ச்சி' என்றேன். அதற்கு அதிகாரிகள் தரப்பு ஒப்புக்கொண்டது.

இதே துறையில் பணியாற்றியவன் என்பதும், இந்த முயற்சி வெற்றிபெற்றதற்கு ஒரு முக்கியக் காரணம். அந்த வகையில் ரயில்வேத்துறையில் சாதக, பாதகங்கள் அனைத்தும் அத்துப்படி என்பதால் நான் வைத்த வாதங்களை அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. வேறு யாராக இருந்தாலும் எதையாவது சொல்லி நிராகரித்திருப்பார்கள்.

கூட்டத்திலேயே இதை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தையும் சொல்லும்படி வலியுறுத்தினோம். 6 மாத அவகாசம் அளித்தனர் அதிகாரிகள். இதன்படி இனி டில்லியில் ஓடும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளில் இனி இந்தி, ஆங்கிலம் இடம்பெறும். செகந்தராபத்தில் ஓடும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கிலம் இவற்றுடன் தெலுங்கு மொழி அச்சிடப்பட்டிருக்கும். சென்னையை மையமாகக்  கொண்டு ஓடும் ரயில்களில் இந்தி, ஆங்கிலம் இவற்றுடன் தமிழ் மொழி இடம்பெறும். இப்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் ஓடும் ரயில்களில் அந்தந்த மாநில மொழி இந்தி ஆங்கிலத்திற்கு அடுத்ததாக இடம்பெறும்” என்றார்.

“தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி பொருத்தாதது பெரும் சர்ச்சையானது. அதன் எதிரொலியாக ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு இந்தியா முழுக்க ரயில்நிலையங்களில் சிசிடிவி அமைக்க உள்ளதாக உறுதியளித்ததே...ஆனால் நுங்கம்பாக்கத்தில் இன்னமும் சிசிடிவி பொருத்தப்படவில்லையே என்றோம்.
“ இதற்கு முழுக்க முழுக்க அதிகாரிகளின் மெத்தனமே காரணம். சுவாதி கொலையைத் தொடர்ந்து அவர்களின் தந்தையைச் சந்தித்துப் பேசிய சில மணிநேரங்களில் தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட நிர்வாகி அனுபம் ஷர்மாவைத் தொடர்பு கொண்டு பேசினேன். நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இந்தியா முழுக்க இதுபோன்ற சிசிடிவி இல்லாத ரயில்நிலையங்களைக் கணக்கெடுத்து நிர்பயா நிதியிலிருந்து அங்கு சிசிடிவி அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதற்காக உடனடியாகப் பணம் ஒதுக்கப்பட்டது. ஆனால் டெண்டர் விடுவதில் குழப்பம் உருவானது. முதன்முறை விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு ரீ டெண்டர் விட முடிவெடுத்த பின்னரும் அதிகாரிகள் இறுதி முடிவை எடுப்பதில் காலதாமதம் செய்தனர். கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அதுபற்றியும் நான் கடுமையான வலியுறுத்தியபின் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் இன்னும் சில நாள்களில் சிசிடிவி அமைக்கப்பட்டுவிடும்.

ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டுக்குழு எதிர்காலத்தில் பயணிகளுக்கு செய்துதர உள்ள திட்டங்கள் என்னென்ன?

இந்தியாவில் பெரும்பாலான ரயில்நிலையங்கள் துர்நாற்றம், மின்விசிறி, மின்விளக்கு இல்லாமல் உள்ளே நுழையவே அருவருப்பு ஏற்படும் விதகமாக அடிப்படை சுகாதார வசதிகளின்றி உள்ளன. அப்படிப்பட்ட ரயில் நிலையங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தால் ஒரு விமானநிலையத்திற்குள் வந்ததுபோன்ற பிரமை பயணிகளுக்கு வரவேண்டும். அத்தகைய ஒரு நவீனமயமானவைகளாக ரயில்நிலையங்கள் மாறும் நாள்கள் வெகுதொலைவில் இல்லை” என்றார்.
ரயில்வேத்துறைக்குத் தமிழ்மொழி மீது கொஞ்சம் ஓரவஞ்சனை உண்டு எப்போதும். வட இந்திய மக்களிடம் உள்ள தமிழ் மொழி மீதான வெறுப்பு மனநிலைக்குச் சான்று ரயில்வேத்துறை. அந்தளவுக்குத் தமிழ்மொழி அங்கு இரண்டாந்தரமாகவே இன்றுவரை மதிக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே தமிழகத்தில் மொழிப்பிரச்னை தீவிரமாகிற சமயங்களில் முதலில் தாரும் கையுமாக தமிழ் உணர்வாளர்கள் செல்வது ரயில் நிலையங்களை நோக்கித்தான். அந்தளவுக்கு ரயில்வே நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகக் கடந்த காலத்தில் புகைச்சல் இருந்ததுண்டு.

மேலும் பல...

1 comments

  1. மகிழ்ச்சி தரும் தகவல். மிக்க நன்றி.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About