உருவமில்லை... உலகத்தில் இல்லை... ஆனால், கரன்ஸிகளின் கடவுளா 'பிட்காயின்'?

சமீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உ...

சமீபகாலமாக இணையத்தில் அதிகமாகப் பார்க்க முடிந்த சொல் “பிட்காயின்”. இது ஒரு டிஜிட்டல் கரன்ஸி என்பதால் நிஜ உலகில் இருப்பதை விட, விர்ச்சுவல் உலகில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. “எதிர்காலம் இவைதான். நிஜ கரன்ஸிகளை விட இவை பலம் வாய்ந்தவை” என்கிறார் பில் கேட்ஸ்.

இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் மதிப்பு 7000 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 4,80,000. 2016ல் இதன் மதிப்பு 60,000 மட்டும்தான். ஒரே ஆண்டில் 8 மடங்கு முன்னேற்றம்.

அடிப்படையில் டிஜிட்டல் கரன்ஸிக்கும் பிட்காயின் போன்ற க்ரிப்டோகரன்ஸிக்கும் வித்தியாசம் உண்டு. இந்தியா கூடத்தான் டிஜிட்டல் கரன்ஸிக்கு மாறிவிட்டது என நினைக்க வேண்டாம். அது நிஜ கரன்ஸியின் டிஜிட்டல் வடிவம். அதாவது, 100 ரூபாய் நோட்டை கையில் எடுத்துச் செல்லாமல் டிஜிட்டலாக பரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், 100 ரூபாய் என்பது தாளாலான நோட்டுதான். ஆனால், க்ரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை.

உலக அளவில் பிட்காயின்கள் அதிகப் புழக்கத்தில் இருப்பது அமெரிக்காவில்தான். அடுத்த இடத்தில் சீனாவும், மூன்றாமிடத்தில் இந்தியாவும் இருக்கிறது. "இந்தியாவில் பிட்காயினா" என்ற ஆச்சர்யம் எழுந்ததும், சென்னையில் யாராவது இருக்கிறார்களா எனத் தேடினேன். விஷ்ணு என்ற இளைஞர் பிட்காயின் டிரேடிங்கில் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் பேசினேன்.

பிட்காயினின் ஆகச் சிறந்த அம்சமே அதை யார் வைத்திருக்கிறார்கள் என்பதை டிராக் செய்ய முடியாது என்பதுதான். இந்தியாவில் இதற்கென இருக்கும் ஏஜென்சிகள் மூலம் வாங்கினால் நம் பான் கார்டை கேட்கிறார்கள். அதன் மூலம் இந்திய அரசு எவ்வளவு ரூபாய்க்கு யார் பிட்காயின்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். ஆனால், இந்த முறையில் வாங்குபவர்கள் சொற்பமானவர்கள்தான். மேலும், ஒருவர் அப்படி வாங்கி இன்னொருவருக்கு விற்றுவிட்டால் அந்த பிட்காயின் அப்போது யாரிடம் இருக்கும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. இந்தச் சிதம்பர ரகசியம்தான் பிட்காயினில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்குகிறது.

டிஜிட்டல் கரன்ஸி என்றால் எப்படி இருக்கும். புகைப்படமாகவா, பிடிஎஃப் ஆகவா என்ற சந்தேகத்தை விஷ்ணுவிடம் கேட்டேன்.
"பிட்காயின் என்பது ஒரு ஆல்ஃபா நியூமரிக் நம்பர்தான். இதை வாலட்ல சேமிச்சு வைக்கலாம். எக்ஸேஞ்ச் மூலமா வாங்கினா அவங்களோட வாலட்ல்யே ஸ்டோர் பண்ணி வைக்க வசதி உண்டு. இல்லைன்னா, பாதுகாப்பான ஆன்லைன் வாலட்ல சேமிச்சு வைக்கலாம். பென் டிரைவ் மாதிரியான ஆஃப்லைன் வாலட்டும் இருக்கும். நிறைய பிட்காயின் கைவசம் வெச்சிருக்கிற நிறுவனங்கள் தங்களோட காயினை அந்த ஸ்டோரேஜ் டிவைஸ்ல ஸ்டோர் பண்ணி லாக்கர்ல வெச்சுப்பாங்க. ஹேக்லாம் பண்ணி பிட்காயினை எடுக்க முடியாது. மீறி எடுத்தாலும் அதை ரெகவர் பண்ணவும் வழியிருக்கு" என்றார்.

டிஜிட்டல் கரன்சிகள்

பிட்காயின் முதலீடு பங்குச்சந்தையை விட பாதுகாப்பானது எனச் சொல்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் பங்குகளை சில ஆயிரம் பேர்தான் வைத்திருப்பார்கள். அதன் விலையை ஏற்ற இறக்க நினைத்தால் செய்துவிடலாம். வரலாற்றில் அதற்கான பதிவுகளும் உண்டு. காரணம் அந்த டிரேடிங்கில் பங்குகொள்ளும் மதிப்பும், நபர்களும் ஒப்பீட்டளவில் குறைவு. ஆனால், பிட்காயின் உலகம் முழுவதும் புழங்கும் ஒரு விஷயம். ஒவ்வொரு நொடியும் பல கோடிகளில் பரிவர்த்தனை நடக்கிறது. அவ்வளவும் ரகசியமாக நடக்கிறது. அதனால், இதன் மதிப்பை ஒரு சிலராலோ அல்லது ஒரே நாளிலோ மாற்றுவது என்பது முடியாத காரியம்.

பிட்காயினை நம்புவதிலும் நிறைய பிரச்னைகள் உண்டு. சமீபத்தில் இதன் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இது உலக அளவிலான மதிப்பு. ஆனால், இந்தியாவில் மட்டும் அதிகம் குறையவில்லை. காரணம், இந்தியாவில் பிட்காயின் சமீபத்தில் புகழ்பெற்றதால் நிறைய பேர் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அதனால், இந்தியாவில் மட்டும் இதன் டிமாண்ட் அதிகரித்தது. பிட்காயினை விற்கும் எக்ஸ்சேஞ்கள் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றன. டிஜிட்டல் கரன்ஸி என்றால் உலகம் முழுவதும் ஒரே விலைதானே இருக்க வேண்டும் என்ற சந்தேகம் இதனால் எழுகிறது. ”பிட்காயினை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்” என தினமும் யாராவது ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதிக்கொண்டேதானிருக்கிறார்.

விஷ்ணுவும் இதைப் பற்றி புரிந்துகொள்ள டெக்னிக்கல் விஷயங்கள் தெரிய வேண்டுமென்றார். "கொஞ்சம் டெக்னிக்கலா விஷயம் தெரிஞ்சவங்க மட்டும்தான் இதைப் புரிஞ்சிக்க முடியும். ஏதாவது ஒரு சந்தேகம்னாலும் இந்த மொத்த புராசஸையும் தெரிஞ்சாதான் அடுத்தகட்டத்துக்கே போக முடியும். அதை ஒரு குறையா சொல்லலாம். சில பேரு இது தீவிரவாதிங்க பயன்படுத்துற கரன்ஸின்னு சொல்றாங்க. நாம பயன்படுத்துற ரூபாய், டாலர்லாம் அவங்ககிட்ட இல்லைன்னு சொல்ல முடியுமா. அப்புறம், இதை டிராக் பண்ண முடியாதுன்றதும் சிலருக்கு நெகட்டிவா தோணலாம். மத்தபடி பிட்காயின்ல எனக்கு எதுவும் குறையா தோணல பாஸ்" என்றார்.


பிட்காயினைப் பற்றிய FAQ:

1) பிட்காயினுக்கு உருவம் உண்டா?

கிடையாது. யாராவது அச்சடிக்கப்பட்ட தாள்கள் அல்லது வில்லைகளைக் காட்டி இதுதான் பிட்காயின் என்றால் நம்பாதீர்கள். பிட்காயின் என்பது முழுக்க முழுக்க டிஜிட்டலால் ஆனது.

2) பிட்காயினைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்ய முடியுமா?

அமெரிக்காவில் விமான டிக்கெட் முதல் பீட்ஸா வரை எதை வேண்டுமென்றாலும் பிட்காயின் கொடுத்து வாங்க முடியும். இந்தியாவிலும் சில இணையதளங்கள் இப்போது பிட்காயினை ஏற்கின்றன.

3) ஒரு பிட்காயினே 3 லட்சம் என்றால், அதற்குக் குறைவாகப் பணம் இருப்பவர்கள் வாங்க முடியாதா?

வாங்கலாம். பைசாவைப் போல பிட்காயினிலும் சில்லறை உண்டு. 10 பிட்டிஷ், 20 பிட்டீஷ் என வாங்கலாம்.

4) பிட்காயின் தடை செய்யப்பட்ட நாடுகள் எவை?

பங்களாதேஷ், பொலிவியா, ஈகுவேடார் மேலும் சில நாடுகள். சீனா சமீபத்தில் தடை விதிக்கப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்தத் தடை உள்நாட்டு எக்ஸேஞ்சில் பிட்காயினை மாற்றுவதற்கு மட்டுமே. டிஜிட்டலாக தடை என இதுவரை சொல்லவில்லை.

5) இப்போது உலக அளவில் இருக்கும் பிட்காயினின் மொத்த மதிப்பு எவ்வளவு?

15 லட்சம் கோடி. பிட்காயினின் மதிப்பு உயர்ந்துக்கொண்டே போவதால் இதன் மதிப்பு நாளுக்கு நாள் உயரும்.

6) நான் எப்படி பிட்காயினை வாங்க முடியும்?

  அ) ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாக வாங்கலாம்
  ஆ) எக்ஸேஞ்சில் பிட்காயினை வாங்கலாம்
  இ) பிட்காயின் வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து வாங்கலாம்.
  ஈ) மைனிங் செய்யத் தெரிந்தால் செய்யலாம் அல்லது செய்யத் தெரிந்தவர்களிடம் கூடுதல் பணம் கொடுத்து வாங்கலாம்.

7) எதிர்காலத்தில் பிட்காயின் மதிப்பில்லாமல் போகுமா?

சாத்தியங்கள் உண்டு. எந்த ஒரு கரன்ஸிக்கும் இந்த நிலை வரலாம். ஆனால், பிட்காயின் என்பது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவதாலும், உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதாலும் அதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About