மக்கள் மன்றத்தினருடன் மீட்டிங்; கறுப்புத் தாடியுடன் ஷூட்டிங்! - ரஜினி பட அப்டேட்ஸ் எம்.குணா

கடந்த சில நாள்களுக்கு முன்பு `இமயமலையில் ரஜினிபட ஷூட்டிங்' என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். குறிப்பிட்டபடி, ஜூன் 6-ம் தேதியான நாளை கார...

கடந்த சில நாள்களுக்கு முன்பு `இமயமலையில் ரஜினிபட ஷூட்டிங்' என்ற செய்தியை வெளியிட்டிருந்தோம். குறிப்பிட்டபடி, ஜூன் 6-ம் தேதியான நாளை கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த்.

வழக்கமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால், அந்தப் படம் ரிலீஸாகும் முன்பே இமயமலைக்குச் சென்று வருவது ரஜினியின் பழக்கம். இப்போதும் `காலா' வெளிவருவதற்கு முன்பாகவே இமயமலை செல்கிறார். தவிர, முன்பெல்லாம் பாபா குகைக்குச் சென்று தியானம் செய்வார், ஆன்மிகப் பயணம் மேற்கொள்வார். இந்தமுறை சினிமா படப்பிடிப்புக்காக இமயமலை செல்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதிபதியும் நடிப்பதால், இந்தப் படத்துக்கு ரஜினி ரசிகர்களைத் தாண்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்தவிருக்கும் லொக்கேஷன்களைத் தேடி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜும் ஒளிப்பதிவாளர் திருவும் இணைந்து இமயமலை, நேபாளத் தலைநகர் காட்மண்ட் ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். கடந்த வாரம் முழுக்க ரஜினி மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுக்கான காஸ்ட்யூம்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இப்படத்துக்கான முதல் ஷெட்யூலை ஒரு மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது, படக்குழு. கடந்த சனிக்கிழமை ரஜினி விதவிதமான காஸ்ட்யூம்களில் தோன்றும் போட்டோஷூட் நடந்தது. `கபாலி' மற்றும் `காலா' படங்களில் தனது ஒரிஜினல் வெள்ளைத் தாடியுடன் தோன்றியவர், இப்படத்தில் கறுப்பு தாடியோடு தோன்றுகிறார்.

இமயமலையில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெறுகிறது. `அவர் ஆன்மிகப் பயணம் செல்லும் இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால், இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்ளுக்கான படம்!' என்கிறார் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாகத் தூத்துக்குடி சென்று திரும்பிய பிறகு, ரஜினிகாந்த் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், அவர் சோர்ந்துவிடவில்லை. முன்பைவிட இன்னும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார். இந்தப் படத்துக்காக ஒரு மாதம் இமயமலைக்குச் செல்வதால், அந்த இடைவெளியில் மக்கள் மன்றம் எப்படிச் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்திருக்கிறார். தமிழகம் முழுக்க மக்கள் மன்றத்தில் பொறுப்பாளர்களாக இருக்கும் முக்கியப் புள்ளிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்திருக்கிறார்.

தூத்துக்குடி சென்றபோது, ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கத்தையோ மாநிலப் பொறுப்பாளர் சுதாகரையோ தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை. தன் உதவியாளரை மட்டும் அழைத்துச் சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து வரவேற்றது தொடங்கி, தூப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது என சென்னைக்குத் திரும்பும்வரை ரஜினியுடனேயே இருந்தது, தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின்.

தூத்துக்குடியில் மக்கள் கூட்டம் நெருக்கியடித்தபோதும், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தனக்குப் பாதுகாப்பாகச்  செயல்பட்டதற்காக ஸ்டாலினை போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து, மாலை அணிவித்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி. ஒருபக்கம் மக்கள் மன்றப் பொறுப்பாளர்களுடன் மீட்டிங், இன்னொரு பக்கம் டார்ஜிலிங்கில் நடக்கவிருக்கும் ஷூட்டிங்... என ரஜினி ரொம்பவே பிஸி!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About