‘ரஜினியையே ஓட்டுப்போட விடாம பண்ணிட்டாங்களே!’

இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும்...

இது வரையிலும் நடந்த அனைத்து நடிகர் சங்கத் தேர்தல்களிலும் வாக்களித்த ரஜினிகாந்த், முதன் முறையாக வாக்களிக்க முடியாமல் போனதற்காக அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இன்று நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நேரில் வர இயலாதவர்களுக்காக, முன்கூட்டியே தபால் வாக்குகள் அனுப்பப் பட்டன. திருச்சியில் பெருமளவில் உள்ள நாடக நடிகர்கள் சென்னை வந்து வாக்களிக்கும் பொருளாதார சூழ்நிலை இல்லை என்பதால் தபால் வாக்குகளையே நம்பி இருக்கின்றனர்.

மும்பையில் தர்பார் படப்பிடிப்பில் இருப்பதால், நேரில் வர இயலாது என்று தபால் வாக்கு கோரியிருந்தார் ரஜினிகாந்த். அதற்காக அவர் ஏற்கனவே நடிகர் சங்க தேர்தல் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். ஆனால் நேற்று (சனிக்கிழமை) மாலை 6:45 க்குத்தான் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு வாக்குச் சீட்டை இன்று தேர்தல் முடியும் நேரத்திற்குள் அனுப்ப இயலாது என்பதால், வெளிப்படையாக தனது அதிருப்தியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு மட்டுமல்லாமல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் செல்லவில்லை அல்லது தாமதமாக சென்றுள்ளதாகக் நடிகர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குப் பதிவு நடைபெறும் இடம் எது என்பதில் பிரச்சினை என்றாலும், தபால் வாக்குகளை அனுப்பி வைக்க தாமதம் செய்யத் தேவையில்லையே.

திருச்சியில் உள்ள நாடக நடிகர்கள் விஷால் அணி மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. தனது சொந்தப் பணத்தில் நாடக நடிகர்களுக்கு உதவி செய்வேன் என்று பாக்யராஜ் கூறியிருந்தார். இது வாக்குகளைப் பெறுவதற்கான லஞ்சம் என்று பதிவாளரிடம் விஷால் அணியினர் புகார் அளித்தனர். ஆனால் அந்தப் புகார் எடுபடவில்லை. 61 உறுப்பினர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்யவும் பதிவாளர் உத்தரவிட்டார்.

எந்த அணியையும் சாராத நடிகர்கள் மத்தியிலும் இந்தத் தேர்தல் குறித்து கடும் அதிருப்தி எழுந்துள்ளதாகத் தெரிகிறது. சமூகத் தளங்களில் சுபா வெங்கட் உட்பட நடிகர்கள் சிலர் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்கள்.

ஒரு பக்கம் கமல் முன் மொழிந்த நாசர் – விஷால் பாண்டவர் அணியினர். இன்னொரு பக்கம் ரஜினியின் ஆதரவுடன் கே.பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியினர் என்ற நிலையில் ரஜினிகாந்தையே வாக்குப் பதிவு செய்ய விடாமல் செய்துள்ளனர் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் தேர்தலை நடத்த அனுமதி வாங்கிய விஷால் தரப்பினர், தபால் வாக்குகளில் ரஜினிகாந்த் உள்பட கிட்டத்தட்ட 500 வாக்குகள் பதிவாகாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், வழக்கு மீண்டும் ஜூலை 8ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ரஜினிகாந்த் உட்பட தபாலில் வாக்களிக்க முடியாதவர்களின் குற்றச்சாட்டும் விசாரணையின் போது எழுப்பப்படும் என்று தெரிகிறது. ரஜினிகாந்த் தனது அதிருப்தியை மிகவும் வெளிப்படையாகவே குறிப்பிட்டு இருப்பதால், அவருடைய ட்வீட் கூட விசாரணையில் சாட்சியாக இடம் பெற வாய்ப்புள்ளது.

மூத்த நடிகர், இதுவரையிலும் அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்தவர், “தபால் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி எடுத்தேன். மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தது. இது நடந்திருக்கக் கூடாது. மிகவும் துரதிர்ஷ்டமானது, வருந்துகிறேன்” என்றெல்லாம் கூறியிருப்பது நீதிபதி கவனத்திற்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிகிறது.

முன்னாள் தலைவர் சரத்குமார், முன்னாள் செயலாளர் ராதா ரவி உள்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கும் வாக்குரிமை இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

நடிகர் சங்கத் தேர்தல் இன்று நடந்து முடிந்தாலும், சிக்கல் நீடிக்கும், சட்டப் பிரச்சனைகள் வலுக்கும் என்றே தெரிகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About