"2.0 படத்தின் சில காட்சிகளும், 'காலா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பும்!"

முதலில் 'எந்திரன் -2' என்று வர்ணிக்கப்பட்ட  '2.0' படத்தின் பூஜை போடப்பட்டு கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று எல்ல...

முதலில் 'எந்திரன் -2' என்று வர்ணிக்கப்பட்ட  '2.0' படத்தின் பூஜை போடப்பட்டு கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென 2015-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று 'கபாலி' படத்துக்கு  பூஜை போடப்பட்டு, சென்னையில் படப்பிடிப்பும் துவங்கியது. அதன்பின் '2.0' படத்தின் ஷூட்டிங் நைல்நதியாய் நீ...ண்டு கொண்டே இருந்தது. 'கபாலி' படத்தைப் பொசுக்கென முடித்து விசுக்கென வெளியிட்டார்,  பா.ரஞ்சித். 'எங்கள் தயாரிப்பில் எத்தனையோ இயக்குநர்கள் எத்தனையோ படங்களை இயக்கி இருக்கின்றனர். எஸ்.பி.முத்துராமனுக்குப் பிறகு என் இதயம் கவர்ந்தவர், தம்பி ரஞ்சித்' என்று பாராட்டுமழை பொழிந்து உச்சிமுகர்ந்தார், 'கலைப்புலி' எஸ்.தாணு. ஒரே நேரத்தில் ஒரே இயக்குநருக்கு இரண்டு படங்களுக்குக் கால்ஷீட் கொடுப்பதை தவிர்த்துவந்த ரஜினி, 'கபாலி'க்கு பிறகு 'காலா'வை கொடுத்து ரஞ்சித்துக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார். மும்பை பின்புலத்தில் அமைந்த கதை என்பதால், அங்கே தாராவியில்  'காலா' படப்பிடிப்பு துவங்கியது  ரஜினி ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கவந்த  மக்கள் கூட்டத்தின் நெருக்கம் அதிகமாகவே போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. 'கபாலி' படத்தை மலேசியாவில் படமாக்கியபோது இதேமாதிரி மக்கள் அலைஅலையாய் வந்தனர். அந்த நிலையை மாற்றுவதற்காக சென்னை மோகன் ஸ்டுடியோவில் மலேசியாவைப் போலவே செட்போட்டுப் படமாக்கினார்கள். அதுபோலவே, 'காலா'வில் இடம்பெறும் முக்கியமான காட்சிகளை மும்பையில் படமாக்கும்போது ஜனநெரிசல் இடையூறாக இருந்ததைத் தவிர்க்கும் பொருட்டு சென்னையில் ஈவிபி ஸ்டுடியோவில் தாராவியைப் போலவே செட்போட்டுப் படமாக்கினார், ரஞ்சித். இப்போது 'காலா' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இன்னும் '2.0' படத்தின்  கிராஃபிக்ஸ் வேலைகள் சீனப்பெருஞ்சுவர் ரேஞ்சுக்கு உயர்ந்துகொண்டே செல்வதாகச் சொல்கிறார்கள்.

தனுஷ் தயாரிப்பாளராக இருக்கும் 'காலா' படத்தை '2.0' படத்துக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்தால் '2.0' படத்தின் தயாரிப்பாளர் 'லைக்கா' சுபாஷ்கரன் கோபித்துக் கொள்வாரே... என்று யாராவது வருத்தப்பட்டால் அவர்களின் அறியாமைக்கு 'வெரி ஸாரி' பதிலைத்தான் தரமுடியும். ஏனென்றால் 'சிவாஜி' படத்தில் 'சிவாஜியும் நான் தான்... MGRம் நான் தான்...' என்று  ரஜினி ஸ்டைலாக  சொல்வது போல் இப்போது 'காலா'  தயாரிப்பாளரும் நானே... '2.0' தயாரிப்பாளரும் நானே...' என்று கூலாக கூவிக்கொண்டு இருக்கிறார், 'லைக்கா' சுபாஷ்கரன். '2.0' படத்திற்கு முன்பாக, 'காலா' ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஆனால், இதை முன்கூட்டியே திட்டமிட்டது, 'லைக்கா' நிறுவனம்தான். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே  'காலா' படத்துக்கு முன்கூட்டியே அட்வான்ஸ் பணம் கொடுத்து உலகம் முழுக்க வெளியிடும் விநியோக உரிமையைப் பெற்றுவிட்டது லைக்கா. அதுசரி '2.0'  ப்ளஸ் 'காலா' படங்களின் உண்மை நிலை என்ன?

'2.0' திரைப்படம் 2015-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டோடு முடிந்தது. சென்னை பிரசாத் ஸ்டுடியோவில்  இரண்டே நாளில் டப்பிங்கைப் பேசி முடித்தார், ரஜினி. அதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட '2.0' படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் வெளிநாட்டில் அமெரிக்கா, லண்டன் இடங்களிலும், சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ, நேக் ஸ்டுடியோவிலும் நடந்து வருகிறது. முதலில் ஜனவரி 26-ஆம்தேதி உறுதியாக ரிலீஸ் செய்வதாக முடிவுசெய்யப்பட்டது. புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய டெக்னீஷியன்களைக் கொண்டு ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி உருவாக்கினார், ஷங்கர். இங்கே கோடம்பாக்கம் கதை டிஸ்கஷனில் கலந்து கொள்பவர்கள் அந்தப்பட கதையை வேறு சினிமா கம்பெனியில் உளறுகிற மாதிரி வெளிநாட்டு டெக்‌னீஷியன்களும் டங் ஸ்லிப்பாகி அங்கே சொல்லிவிட, '2.0' படத்தில் இடம்பெற்ற முக்கியமான கிராஃபிக்ஸ் காட்சிகள் போலவே  டிசம்பர் மாதம் வெளியான ஹாலிவுட் படத்தில் வெளிவந்துவிட்டதால் படுடென்ஷன் ஆகிவிட்டதாம் ஷங்கர் டீம். இதனால், கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான நேரம் இன்னும் அதிகம் தேவை என்பதல், ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருந்த படத்தின் வெளியீட்டு தேதி, இப்போது தள்ளிப்போயிருக்கிறது. எனவேதான், தற்போது 'காலா' படத்தை வெளியிடலாம் என்று முடிவில், 'ஏப்ரல் 27' என்ற தேதியையும் அறிவித்திருக்கிறார், நடிகர் தனுஷ்.

'2.0' படத்துக்கு ரஜினி டப்பிங் பேசியதே சினிமாவில் பலருக்கு தெரியாது. நேக் ஸ்டுடியோவுக்கு 'காலா'பட டப்பிங் பேசுவதற்காக வந்தபோது  உலகம் முழுக்க அந்த செய்தியும், போட்டோவும் பரவிவிட்டது. முதல்நாள் காலை 9 மணிக்கு வந்தவர் 'காலா' படத்துக்கான டப்பிங்கை பேசினார், மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் ஒய்வெடுத்தார் அதன்பின் சரியாக  2.30 மணிக்குப் பேச ஆரம்பித்தவர் 5 மணிக்கு முடித்துவிட்டார். தன் வேலை முடிந்துவிட்டது என்று உடனே வீட்டுக்குச் செல்லவில்லை அதன்பிறகு அன்று காலையில் இருந்து தான் பேசிய டயலாக்குகள் சரியாக வந்து இருக்கிறதா? என்று சரி பார்த்த பின்னரே வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இதுவரை மொத்தம் இரண்டரை நாட்களில் முழுப்படத்துக்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார், ரஜினி. 'காலா' படத்தில் நடித்து இருக்கும் நடிகர், நடிகைகளில் பெரும்பாலானவர்கள் தங்களில் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிவிட்டனர். குறிப்பாக சமுத்திரக்கனி, தாஸ்பாண்டியன் பேசினார்கள். 'காலா' படத்தின் முக்கியமான வில்லனான நானா படேகர் இந்தி பதிப்பில் மட்டும் சொந்தகுரலில் பேசுகிறார். தமிழ், தெலுங்குக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசியிருக்கிறார். தற்போது 'காலா' படத்தின் 'ட்ரிம்மிங்' வேலைகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ரஜினியின் '2.0' படத்தின் தெலுங்கு உரிமையை ஆசியன் பிலிம்ஸ்  61 கோடிக்கு விநியோக உரிமையை பெறுவதற்கு முன்கூட்டியே விலைபேசி இருக்கிறது. அதுபோல கேரளாவில் 15 கோடிக்கும், கர்நாடகாவில் 12 கோடிக்கும் விலைபேசி வருகின்றனர். குறித்த நேரத்தில் '2.0' ரிலீஸ் ஆகாமல் போனால் ரசிகர்கள் மற்றும்  திரையரங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதைத் தவிர்க்கத்தான், '2.0' படத்திற்குக் குறித்து வைத்திருந்த தேதியில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் கணக்கில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க, தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியமான தியேட்டர்களை இப்போதே  பரபரப்பாக ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது, லைக்கா நிறுவனம்.     

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About