"ரஜினியுடனான 'நட்பு' அரசியல்... அக்கறையற்ற அவர்கள்... நாளை நமதே!" 'ஹார்வர்டு' கமல்

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்றினார். வேட்டி சட்டை அணிந்து இந்த நிகழ்வில்  கலந்துகொண்டார் கமல். 'வணக்கம்'...

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்றினார். வேட்டி சட்டை அணிந்து இந்த நிகழ்வில்  கலந்துகொண்டார் கமல். 'வணக்கம்' என்று ஆரம்பித்தவருக்குப் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பு கிடைத்தது. பத்திரிகையாளர் பர்கா தத், பார்வையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, "நான் வித்தியாசமானவன் எனக் கூறவில்லை. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் நிச்சயம் காவியாக இருக்காது. எனக்கும் ரஜினிக்கும் நோக்கம் என்பது அரசியலில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். ஆனால் அரசியல் களம் என்பது வேறு. அரசியலில் வித்தியாசப்பட்டு இருக்கவே விரும்புகிறேன்” என்றார். பெருவாரியான மக்களை சென்றடைய தொடர்ந்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார்.

அதன் தமிழாக்கத்தை கமல் நேற்று இரவு ட்விட்டரில் வெளியிட்டார். அதில் குறிப்பிட்டவை பின் வருமாரு:-  

"பாரம்பர்யம் கலாசாரம், மூத்த மொழியான தாய்த்தமிழ், கட்டடக் கலையின் முன்னோடி, சமூக நீதி காத்தல், உலக வணிகத்தில் வழிகாட்டி எனப் பெருமைப்படத்தக்க சாதனைகளுக்கு உரிமை கொண்டாடும் சிறப்பு கொண்ட தமிழகத்திலிருந்து உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

வெவ்வேறு விதமான கிராமங்களை உள்ளடக்கிய வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா என்பதில் எனக்குப் பெருமை உண்டு.

ஆனால் தற்போது அங்கே அனைத்தும் சீராக இல்லை; இன்னும் காலம் கடக்கக் கூடாது என்ற தொலைநோக்கோடு உறுதியான குறிக்கோளோடு புத்துலகம் காண வேண்டுமென விரைவில் அரசியல் பயணம் புறப்படவிருக்கிறேன்.

என்னுடய உண்மையான நோக்கம் சாதாரண நிலையிலுள்ள தமிழகத்தின் நிலையை மாற்றிக் காட்டுவதே ஆகும். ஏனென்றால் அங்கு அரசியல்வாதிகள், வர்த்தகம் செய்பவர்களில் பலர் தெளிவற்ற அணுகுமுறையைக் கொண்டவர்களாக உள்ளனர் எனக் கருதப்படுகிறது.

தமிழகத்திற்கு தக்க அணுகுமுறையோடு கூடிய வழிகாட்டுதல் அவசியமாகிறது. இதையொட்டியே எனது நோக்கமும் அமைந்துள்ளது. அங்கு கடைப்பிடிக்கப்படும் சீரற்ற கொள்கைகள் திருத்தப்படுவது முக்கியமாகும்."

"குறிப்பாக தமிழகத்தில் அரசியல்வாதிகளின் போக்கு மக்கள்நலனில் அக்கறையற்றதாக இருக்கிறது மாநிலத்தின் மொத்தவருவாய் நிலை பற்றாக்குறையாக உள்ளது. 2016-17 - ம் ஆண்டில் அகில இந்திய நிலையில் தமிழகம் நிதிநிலைப் பற்றாக்குறையில் மூன்றாம் இடத்தை வகிக்கிறது.

இதற்குக் காரணம் அரசின் வீணான செலவுகள் திட்டமிடாத நிதிச்சுமைகள், தொலைநோக்கோடு மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தாத அலட்சியப் போக்கு ஆகியவை ஆகும்.

மேலும் தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பற்ற தன்மை நிலவுகிறது; குறிப்பாக பல்லாண்டுகளாக நீர்நிலைகளைச் சீரமைக்காமல் விட்டதால் தண்ணீர்ப் பஞ்சத்தை சந்திக்கவேண்டியுள்ளது. நீர்நிலைகளைத் தூர் வாரி தண்ணீரைச்  சேமித்தாலே நமது தேவைகள் பூர்த்தியாக வாய்ப்புண்டு.

கல்வி, மக்கள்நலன் காத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், அநீதி இழைக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்தல் என்பது உள்ளிட்ட அம்சங்களில் தமிழகம் தன் கடமையைச் சரியாகச் செய்ததா என்பது கேள்விக்குறியே.

இத்தகைய சூழலில் எனது தாயகம் குறித்த எனது கனவை நனவாக்கும் முயற்சியைத் தொடங்கவிருக்கிறேன். இது புதிய பாதையல்ல; மூத்தோர் பலரும் முயற்சி செய்ததை புதிய தலைமுறையோடு இணைந்து வடிவம் கொடுக்கத் தயாராகி வரும் சூழலில் இங்கு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

"கிராமங்கள் புதுவடிவமெடுத்தால் அது நாட்டையே மாற்றும் ; ஒரு நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்கள் சீரமைப்பையே மையமாகக் கொண்டதாகும். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற கிராமங்கள் உருவாகும். அது தேசத்தையே மறுகட்டமைப்பு செய்வதாகவும்" என எனது வழிகாட்டியும் நாடே போற்றக் கூடிய மாமனிதருமான அண்ணல் காந்தியடிகள் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதை மனதில் ஏந்தி பிப்ரவரி 21 - ம் தேதி எனது அரசியல் பயணத்தை 'நாளை  நமதே' என்ற இலக்கோடு தொடங்கவிருக்கிறேன். இதற்கு முன்னோடித்  திட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை ஒட்டுமொத்த வளர்ச்சிகொண்டதாக மாற்ற தத்தெடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு தமிழகத்தில் முன்மாதிரி கிராமங்களை உருவாக்குவது இந்தியாவிற்கே வழிகாட்டுவதாக அமைய வாய்ப்புள்ளது. வளமிகுந்த சமூகக் கட்டமைப்பு உருவாக அனைத்து வசதிகளும் அவசியம். இதற்கான செயல்பாடு 'மாற்றத்தை நோக்கியே என்ற அணுகுமுறையோடு இருக்கும்.

ஒவ்வொரு பயணத்திலும் எடுத்து வைக்கும் முதலடி மாற்றத்திற்குத் தூண்டுகோளாக அமையும் என்பது அனுபவம். கிராமம் தொடங்கி மாநிலத்தை எட்டி, பின்னர் காலப்போக்கில் இந்தியாவிற்கு இத்தகைய முன்னேற்றத்தை கொண்டுவர முடியும் என்பது இதன் நோக்கமாகும்.

இத்தகைய மகத்தான செயல்பாட்டிற்கு உலக நிலையில் பரவியுள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை திட்டங்கள்,வழிகாட்டுதல்களை தெரிவிக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு நான் கூறுவதால் ஏதோ உங்களிடம் நிதி கேட்பதாக கருதிவிடாதீர்கள்; அதைக் காட்டிலும் மேலான மதிப்புமிகுந்த யோசனைகள், தனித்தன்மை கொண்ட உங்களின் கற்பனைகள் எங்களுக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும். இதையே நான் எதிர்பார்க்கிறேன் என்னுடைய அரசியல் பயணம் ஹார்வர்டு பல்கலைகழக மாணவ மாணவியர் வாழ்த்துகளோடு அவர்கள் அறிவாற்றல் ஆதரவோடு தொடங்கவிருப்பதில் மகிழ்கிறேன்.

உடனடிச்  செயல்பாடே உரிய பயனைத் தரும் என்பது எனது உறுதியான நம்பிக்கை. நாற்காலியில் அமர்ந்து அரசியல் பேசுவது அலங்காரமாக இருக்கலாம். அது ஆக்கபூர்வமான செயல்பாட்டுக்கு உதவாது.                           

தேர்தல் அரசியல் எங்களை எதிர் நோக்கியுள்ளது. அதன்முலம்தான் இந்தச் சமுகத்திற்கான கடமையைச் செய்ய முடியும். செயல்படாத அரசை நம்புவதைக்  காட்டிலும் நல்ல அரசை உருவாக்குவது எனது உரிமை என்பதே இன்றைய காலகட்டத்தின் அவசியமாகும்.

இது எனது அரசியல் பயணத்தின் முன்னோட்டப்  பேச்சாகும் ; அடுத்தகட்டமாக எனது மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறேன். என்னை ஒரு செயல்படக்கூடிய நபராகவே கருதி நீங்களெல்லாம் கூர் தீட்ட வேண்டும். தமிழக கிராமங்களுக்கு மறுவடிவம் கொடுக்க உங்கள் அனைவரின் உதவி அவசியம்.

என்னை அரசியல்வாதியாகப்  பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறேன். புதிய மாறுதலுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் சீர்திருத்தவாதியாகவும் செயல்படுவேன்.

பழம்பெருமை மிக்க எங்கள் தாயகத்தை ஆட்சி செய்த அன்றைய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்வாகம், மொழி காத்தலில் முன்னோடியாகத் திகழ்ந்ததை இப்போதும் நினைத்து நாம் பெருமைப்படலாம். அவர்கள் விட்டுச் சென்ற உயர்ந்த யோசனைகள் வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் இப்பொழுதும் நமக்குப் பயன்படக் கூடியவை. ஆனால் தற்போதைய தலைவர்கள் இதிலிருந்து கற்றுக் கொள்வார்களா என்பது விடையில்லா வினா.                  

 வெற்றி தோல்விகள் வரலாம்; சமூக அரசியல் காலஓட்ட மாற்றத்தில் இவையெல்லாம் நமது செயல்பாட்டிற்கான குறியீடுகளாகும்.

தொலைநோக்கோடு நான் தொடங்கவிருக்கும் இந்தப் பயணத்தில் நிறைய கற்றுக் கொள்ளவிருக்கிறேன் . என் பயணத்தில் இணைந்து தமிழகத்துக்குப் புது வடிவம் கொடுக்க உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். நாளை நமதே என்ற பயணத்தின் முடிவு எதிர் காலத்தில் மாறுபட்ட, உயர்ந்த தமிழகத்தை  நமக்குக் காட்டும்" இவ்வாறு கமல் கூறினார்.   

அதே மேடையில் தனது 'நாளை நமதே' வலைதளத்தையும் கமல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About