’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ - 'அஜித் - கார்த்தி' காம்போ பற்றி விக்ரமன்

1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்...

1998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன் இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம் பேசினோம்.

``நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'. ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத் தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம் சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும். இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில் எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த `பாசம்', `ஒளிவிளக்கு' திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை; அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத் திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன். லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ் காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே கதையை உருவாக்கினேன். என் உதவி இயக்குநர்களிடம் இந்தக் கதையைச் சொன்னேன். `என்ன சார் இது திருடன்னு சொல்றீங்க, அப்புறம் திருந்துறான்னு சொல்றீங்க ரொம்பப் பழசான கதையா இருக்கே சார்' என்று எல்லோரும் கோரஸாகச் சலித்துக்கொண்டனர். ஒருவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை. `நீங்க சொல்றபடி திருடன் கதை பழசுதான். ஆனால், இந்தக் கதை `நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்கிற திருக்குறளை அடிப்படையாகக் கொண்டது என்று நான் சொன்னேன்

கஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார். ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கும். நான் சொன்ன கதையைக் கேட்டு யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. எல்லோருமே மறுத்துப் பேசினார்கள். ரவிக்குமாரிடம் இருந்த ரமேஷ்கண்ணாவிடம் கதையைச் சொன்னவுடன் `சார் க்ளைமாக்ஸ் எக்ஸ்டார்டினரி' என்று பாராட்டினார். கார்த்திக் சாரை ஒப்பந்தம் செய்துவிட்டு `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். வாகிணி ஸ்டுடியோவில் நான்காவது நாள் ஷூட்டிங் ரோஜா `வானம்பாடி..' என்கிற பாடலைப் பாடும்போது கங்கை அமரன் `நல்லா பாடுறியேம்மா நீயே பாடு...' என்று சொல்வார். அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தேன். அப்போது மேக்கப் ரூமிலிருந்து கார்த்திக் சார் திடீரென என்னை அழைத்தார். `சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு. ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு' படத்தோட கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு வருமா. எனக்கு நடிக்கலாமா... வேணாமான்னு ஃபீலிங்கா இருக்கு' என்று சொன்னார்.

எனக்கு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம். உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும் வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு நம்பிக்கை இருக்கு' என்று சொன்னவுடன் திடீரென என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக், `உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப் படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்' என்று நெகிழ்ந்தார். அப்போது `கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' சில்வர் ஜூப்ளி விழாவுல நிச்சயமா சொல்வேன்' என்று சொன்னவுடன் கலகலவெனச் சிரித்தார் கார்த்திக். இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம் போனேன் கதையைக்கூட கேட்கவில்லை, `சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்' என்று சொன்னார். ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்' படத்தை டைரக்‌ஷன் செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன். ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை. 

`உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம் 42 நாள்களிலேயே முடிந்துவிட்டது. அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும் `ஜென்டில்மேன்' என்றே அழைப்பேன். அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங் தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில் `ஏதோ ஒரு பாட்டு...' காட்சியைப் படமாக்கினோம். இந்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர். இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது. எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல் வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும்.  `வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, `சார் நான் வெளியூர் போகும்போதெல்லாம் ஒரு கேசட் முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு' பாடலைத்தான் ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன். அதனால் அதுபோல `வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அதில் இடம்பெற்ற `மைனாவே மைனாவே' பாடல் விஜயகாந்த்தின் ஃபேவரைட். எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்‌ஷன் ஹீரோவாகப் பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன் என்பது பலபேருக்குத் தெரியாது. ஒரு வகையில் `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும் `வானத்தைப்போல' படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்'' என்று பழைய நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About