சார் இங்க 200.. அப்டியா எனக்கு 400ப்பா... பரவாயில்லையே சடகோபன் வீட்டுல 600ஐ தாண்டிருச்சாம்!

சென்னையில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவே உள்ளது. எங்க வீட்டுல தண்ணி இல்லை, உங்க வீட்டு நிலவரம் என்ன என்று கவலையுடன் சென்னை மக்கள் புலம்ப...

சென்னையில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சாகவே உள்ளது. எங்க வீட்டுல தண்ணி இல்லை, உங்க வீட்டு நிலவரம் என்ன என்று கவலையுடன் சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர்.

பணத்தை தண்ணீராக செலவழிக்காதே என்பார்கள் பெரியவர்கள். ஆனால் இன்று தண்ணீரை பணம் போல பார்த்து பார்த்து செலவழிக்கும் பரிதாப நிலைக்கு சென்னை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். காரணம் அந்த அளவுக்கு தலைநகரை தண்ணீர்ப் பஞ்சம் தெறிக்க விட்டு வருகிறது.

நிலைமை இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக சென்னை மாறி விடும். அந்த அளவுக்கு அதல பாதாளத்திற்குப் போய் விட்டது நிலத்தடி நீர். தண்ணீர் இல்லை என்ற குரல்கள் கூக்குரல்களாக மாறி வருகின்றன.

தறி கெட்ட வளர்ச்சி

சென்னை நகரின் தறி கெட்ட வளர்ச்சியும், அந்த வளர்ச்சிக்கேற்ப திட்டங்கள் தீட்டப்படாததுமே இந்த தண்ணீர்ப் பஞ்சத்திற்கு முக்கியக் காரணம். நகரம் இத்தனை வேகமாக வளர்கிறதே, அதைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையிலான திட்டங்களைத் தீட்ட வேண்டுமே என்ற எண்ணம் உதிக்காமல் போனதை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

துணை நகரங்கள் இல்லை

பல்கிப் பெருகி வரும் தலைநகரின் தேவைகளை சமாளிக்கும் வகையில், அதன் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் துணை நகரங்கள் திட்டமிடப்படவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களும் கூட பாதியேலேயே செத்துப் போய் விட்டன.

பலாத்காரம் செய்யப்பட்ட ஏரிகள்

சென்னை நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான அருமையான ஏரிகள் இருந்தன. அவற்றில் இன்று விரல் விட்டு எண்ணும் வகையிலான சில ஏரிகளே உயிரோடு உள்ளன. அவையும் கூட எப்போதும் காலயாகி விடும் அபாயகரமான நிலையில்தான் உள்ளன. ஏரிகளை காக்கத் தவறி, அதையும் குடியிருப்புளாக்கி மனிதன் நடத்திய வெறியாட்டத்திற்குத்தான் இன்று அவனை தெறித்து ஓட விட்டுக் கொண்டிருக்கிறது இயற்கை.

கட்டடக் காடு

எங்கு திரும்பினாலும் கட்டடங்கள், குடியிருப்புகள், சீட்டுக் கட்டு போல அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் என சென்னை படு வேக வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் அத்தனை பேருக்கும் தண்ணீருக்கு என்ன செய்வது என்ற சிந்தனை யாருக்குமே இல்லை. அதை விட மோசமாக பொய்த்துப் போன பருவ மழை. எல்லாம் சேர்ந்து மக்களை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.

மோசமான நீர் மேலாண்மை

நீர் மேலாண்மையும் படு மோசமாக உள்ளது. அரசு ஒரு பக்கம் அலட்சியமாக இரு்நதால் மக்கள் அதை விட மோசமான அலட்சியத்தில் உள்ளனர். யாருக்குமே தண்ணீர் ஆதாரத்தைக் காக்க வேண்டும் என்ற உணர்வே இல்லை. குடிக்க தண்ணி கிடைச்சா போதும் என்ற அளவுக்குத்தான் மக்களின் விழிப்புணர்வு உள்ளது. அதைத் தாண்டி யோசிக்க மறுக்கிறார்கள்.

கொடூரமான ஆக்கிரமிப்புகள்

சென்னையில் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள கட்டடங்கள், குடியிருப்புகளை இதுவரை யாருமே முறைப்படி அகற்ற முனையவில்லை. அப்படியே அமுதா, கஜலட்சுமி போன்ற நேர்மையான அதிகாரிகள் முயன்றால் கூட ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தடுத்து நிறுத்தி விடுகின்றன அரசியல் சக்திகள். இதனால் பெருமழைக் காலங்களில் ஏரிகளில் நீரை சேமித்து வைக்க முடியாமல் அத்தனையும் குடியிருப்புகளுக்குள் போய் வீணாகி பெரும் சேதத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

ஆழ்துளை கிணறுகளின் பரிதாபம்

இப்போது சென்னையில் ஆழ்துளைக் கிணறுகள் எல்லாம் வற்ற ஆரம்பித்து விட்டன. நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துபோனதாலும், மழை இல்லாததாலும், கடும் வறட்சி காணப்படுவதாலும் தண்ணீர் இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் வற்றி வருகின்றன. இதனால் புதிய போர் போடும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

பல நூறு அடிகள் தாண்டி

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் பல நூறு அடிக்குக் கீழ் போய் விட்டது தண்ணீர் மட்டம். பெரும்பாலும் லாரி தண்ணீரை நம்பியே மக்கள் உள்ளனர். இந்த அவல நிலை இப்போது புறநகர்ப் பகுதிகளையும் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இதுதான் அதிர்ச்சி தருகிறது.

திருடப்படும் தண்ணீர்

புறநகர்கள் எப்போதும் செழுமையுடன் இருக்கும். தண்ணீருக்குப் பிரச்சினை வந்ததில்லை. ஆனால் மக்கள் தொகை பெருக்கம், அதிகரிக்கும் கட்டுமானங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் காரணமாக இங்கும் தற்போது குடிநீருக்கும், போர்வெல் தண்ணீருக்கும் பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது. அதை விட விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீரை விற்க ஆரம்பித்து விட்டனர். இதனால் நிலத்தடி நீர் வேகமாக குறையும் அபாயம் அதிகரித்துள்ளது.

என்ன ஆகப் போகுதோ

இப்போதெல்லாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் எங்க வீட்டில் 200 அடிக்கு கீழே லெவல் போயிருச்சு உங்க வீட்டுல என்று கேட்டுக் கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். மேலும் நிலத்தடி நீர் குறைந்து போர்வெல் கிணறுகள் வற்றி வருவதால் சென்னையிலும், புறநகர்களிலும் புது போர் போடும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதனால் போர் போடும் வண்டிகளும், ஆட்களும் சென்னையை ஆக்கிரமித்து வருகின்றனர்.

என்னாகப் போகுதோ.. எங்க போய் முடியப் போகுதோ!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About