உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்த நான்கு அணிகள்தான்!

கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்...

கிட்டத்தட்ட பாதியைத் தாண்டிவிட்டது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் மொத்தம் 48 லீக் ஆட்டங்கள். இவற்றில் 26 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. மீதம் 22 ஆட்டங்கள் நடக்கவேண்டியுள்ளன.

லீக் ஆட்டங்கள் முடிந்ததும் அரை இறுதி ஆட்டங்கள். அடுத்து இறுதி ஆட்டம்.

இதுவரை இந்த 10 அணிகளும் ஆடிய ஆட்டங்கள், பெற்ற வெற்றி தோல்விகளை வைத்துப் பார்க்கும் போது, அரை இறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்பது குறித்து இப்போதே ஓரளவு கணிக்க முடிகிறது.

இங்கிலாந்து: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்திலிருந்தே அனைத்துத் தரப்பினரின் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் அணி இங்கிலாந்து. பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் நல்ல நேர்த்தி, ஒழுங்கை அந்த அணியில் பார்க்க முடிகிறது. நல்ல கிரிக்கெட்டுக்கு இரண்டும் மிக முக்கியம். அந்த வகையில் இங்கிலாந்து மிகச் சுலபமாக அரை இறுதியை எட்டிவிடும். அந்த அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 8 புள்ளிகள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோற்றது. இன்னும் இலங்கை, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த நான்கு ஆட்டங்களில் நிச்சயம் 2 அல்லது மூன்றில் ஜெயித்துவிடும் சூழல் என்பதால் அரை இறுதிக்கு இங்கிலாந்து நிச்சயம் வந்துவிடும்.

ஆஸ்திரேலியா: இப்போதைக்கு 10 புள்ளிகளுடன் டாப்பில் இருப்பது ஆஸ்திரேலியாதான். ஆடிய 6 ஆட்டங்களில் இந்தியாவிடம் மட்டும்தான் தோல்வி. மீதி ஆட்டங்களில் அட்டகாசமாக வென்றுள்ள அணி அது. இன்னும் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் மோத வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு ஆட்டங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

இந்தியா: இதுவரை ஆடிய எந்த ஆட்டத்திலும் தோற்காத அணி இந்தியா. இந்த உலகக் கோப்பையில் அத்தனை அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாகத் திகழும் அணியாக உள்ளது. இதுவரை 4 ஆட்டங்கள்தான் ஆடியுள்ளது இந்தியா. அதில் மூன்றில் வெற்றி. ஒன்று மழை காரணமாக ரத்து. இன்னும், ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த 5 ஆட்டங்களில் 3 அல்லது நான்கில் இந்தியா வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. எனவே அரை இறுதிக்குள் நுழைவதில் இந்தியாவுக்கு சிரமமிருக்காது.

நியூசிலாந்து அல்லது வங்காள தேசம்

உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழையும் நான்காவது அணி எதுவாக இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. காரணம் நியூசிலாந்து அணி இதுவரை தோல்வியே காணாத அணியாக 9 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சிம்ம சொப்பனமாக உள்ளன. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டம் வேண்டுமானால் அந்த அணிக்கு சாதகமாக அமையக்கூடும்.

அதேபோல எவ்வளவு பெரிய ஸ்கோரையும் சேஸ் செய்யும் அளவுக்கு தயாராக உள்ள வங்காள தேச அணியையும் புறக்கணிக்க முடியாது. அந்த அணி இன்னும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவுடன் மோத வேண்டியுள்ளது. நியூசிலாந்து தனது அடுத்த நான்கு ஆட்டங்களிலும் தோற்று, வங்காள தேசம் தனது மூன்று போட்டிகளிலும் வென்றால் மட்டுமே அந்த அணி அரை இறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

மற்ற 5 அணிகளும் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலைதான் இப்போது.

முதல் அரை இறுதிப் போட்டி ஜூலை 09

இரண்டாம் அரை இறுதிப் போட்டி ஜூலை 11

இறுதிப் போட்டி ஜூலை 14

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About