மக்கள் இயக்கம் ஆகுமா மழைநீர் சேகரிப்பு…?

கடந்த கால் நூற்றாண்டில் காணாத பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலகளாவிய நட்சத்திரங்கள்...

கடந்த கால் நூற்றாண்டில் காணாத பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை தலைநகர் சென்னை சந்தித்துள்ளது. உள்ளூர் தலைவர்கள் தொடங்கி உலகளாவிய நட்சத்திரங்கள் வரை தண்ணீருக்காக குரல் கொடுத்துள்ளனர். தலைநகரில் மட்டுமல்ல ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் சந்தித்து வரும் பிரச்னைதான். இந்த ஆண்டு சற்று கூடுதல் என்கிற குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.

ஆக, தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது உணர்ந்து வரும் உண்மையாக இருக்கிறது. சென்னை மட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மேல் காவிரி தண்ணீர் குடிநீராக செல்கிறது. காவிரிக் கரையோரங்களில் உள்ள 128 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் வீராணம் உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்லும் ஆறுகளுமே இதற்கு ஆதாரம். ஆகையால், காவிரி என்றால் அது விவசாயிகள் பிரச்னை என்று நகர்ந்து சென்று விட முடியாது. குடிநீருக்குமானது என்பதை உணர வேண்டிய தருணம் இது.

இந்த ஆண்டும் காவிரி தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகம். அதைக் கேட்டுப் பெற்றிருந்தால் இந்த தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் மூத்த பொறியாளர்கள். பருவ மழை தொடங்கி விட்டது. தண்ணீர் தட்டுப்பாடு தீர்ந்து விடும் என்கிற நம்பிக்கை துளிர்த்துள்ளது. ஆனால், பெய்யும் மழையை சேமிக்கிறோமா…? என்கிற கேள்விக்கு மவுனமே பதிலாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டுக்கான ஆண்டு சராசரி மழையளவு 960 மி.மீ. கடந்த ஆண்டு 811 மி.மீ பெய்து சராசரிக்கு குறைவாகவும், 2017ல் 1008 மி.மீ பெய்து சராசரிக்கு அதிகமாகவும் பெய்துள்ளது. நடப்பாண்டில் சராசரியை விட குறைவாகத்தான் மழைப் பொழிவு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளது போல் தட்டுப்பாடும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்கிற எச்சரிக்கையாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைக்கு, சராசரியாக 17.5 மீட்டருக்கு கீழ் நிலத்தடி நீர் மட்டம் போய் விட்டது. பல கிராமங்களில் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. எனவே காவிரி தண்ணீரைக் கட்டாயம் பெற்று, குடிநீருக்காக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டியது அவசியம்...

நிரந்தர தீர்வாக...

தண்ணீரை பூமியில் தேடக் கூடாது. அதை வானத்திலிருந்து வரவழைக்க வேண்டும் என்கிற நம்மாழ்வாரின் வார்த்தைகள் நடைமுறைக்கு வர மரங்களை நட்டு, பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும்.

மறுபக்கம்,
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 40 ஆயிரம் ஏரி, குளங்களையும் தண்ணீரை சேமிக்கும் ஆதாராங்களாக பராமரிக்க வேண்டும். நடப்பாண்டில் 1, 829 நீர் நிலைகளைத் குடிமராமத்து மூலம் தூர் வார ரூ. 499 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி உள்ளூர் இளைஞர்கள் திரண்டு ஏரி, குளங்களைத் தூர் வாரி வருவதும் நம்பிக்கையளிக்கின்றன.

அதே நேரத்தில், மழைநீர் சேகரிப்பும் மிக முக்கியம். கடந்த 2001 -06 ஆட்சிக் காலத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கினார். அதனால் பலனும் கிடைத்தது. குறிப்பாக சென்னை அந்த பலனை நன்றாகவே அப்போது உணர்ந்தது. ஆனால், காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், மீண்டும் ஒரு தண்ணீர் பஞ்சத்தை சந்தித்துள்ளோம்.

இனியாவது, அனைத்து வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பை பெயரளவில் இல்லாமல், உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். குடிநீர், வடிகால் வாரியத்தினர் வலியுறுத்துவது போல், மழைநீர் சேகரிப்பு அரசின் பணி மட்டுமல்ல, மக்களுக்கும் பங்குள்ளது. அரசுக்கு மட்டுமே பொறுப்பு என்று ஒதுங்கிக் கொள்ளாமல், மழைநீர் சேகரிப்பு மக்கள் இயக்கமாக வேண்டும். நாம் சேமிக்கும் பணம், சிரமத்தை தீர்க்கும் போது ஆனந்தம் தானே.?

மழை நீரும் அப்படித்தான். மழை நீர், நாம் சேமிக்க வேண்டிய செல்வம்…

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About