அம்மா வளர்த்த ஈமுக் கோழி! ஜெ. பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்!

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், ல...

கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெ.வுக்கு சூட்டிய பெயர் அது. ஆனால் சில காலங்களுக்கு பின் ஜெயலலிதா ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித்தோழிகளால் அழைக்கப்பட்டவர். ஆனால், அவரது
அம்மாவுக்கு “அம்மு”. அதிமுகவினருக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர்களுக்குக் கூட “அம்மா”.

சர்ச் பார்க் பள்ளி மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால்,மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில் படித்தார். “இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சர்ச் பார்க்கில் படிக்க வேண்டும்” என்பதை தனது ஆசையாகச் சொல்லியிருந்தார்.

போயஸ் கார்டன், சிறுதாவூர், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், ஊட்டி கொடநாடு எஸ்டேட் ஆகிய நான்கும் ஜெ. மாறி மாறி தங்கும் இடங்கள். சமீபகாலங்களாக ஹைதராபாத் செல்வதை நிறுத்தியிருந்தார். திடீர் ஓய்வுக்கு சிறுதாவூர். மாதக்கணக்கில் ஓய்வென்றால் கோத்தகிரியில் உள்ள கோடநாடுதான் அவரது விருப்பம்.

சினிமா காலத்தில் இருந்தே இவரை “வாயாடி”என்று அழைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இதுபற்றி நிருபர் ஒருவர் ஜெ.விடம் கேட்டதுக்கு, “அவர் கலகல, நான் லொட லொட” என்றாராம் சிரித்தபடி.

இவர் நடித்த மொத்தப்படங்கள் 115. எம்.ஜி.ஆருடன் நடித்தவை 28. இருவரும் இணைந்து நடித்த முதல்படம் “ஆயிரத்தில் ஒருவன்”.

“சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா” என்ற “அரசிளங்குமாரி” படப்பாடல் தான் எனக்கு எப்போதும் பிடித்த நல்ல பாடல் என்பார். அப்பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கினார்.

“அரசியலில் நான் என்றைக்குமே குதிக்க மாட்டேன் “என்று பேட்டி கொடுத்தவர் ஜெயலலிதா. “நாடு போகிற போக்கை பார்த்தால் ஜெயலலிதா கூட முதலமைச்சராகி விடுவார் போல ” என்று இவர் நடிக்க வந்த காலத்தில் பேட்டியளித்தார் முரசொலிமாறன். காலம் போட்ட கணக்கை யார் தீர்மானிப்பது?

ஜெயலலிதா முதலில் குடியிருந்தது தி நகர் சிவஞானம் தெருவில். பிறகு அடையாறில் சிலகாலம் இருந்தார். படங்கள் குவிந்து நடிப்பில் கொடிகட்டிய காலத்தில்தான் போயஸ் வீடு கட்டப்பட்டது. அதன் ஒவ்வொரு செங்கல்லையும் பார்த்து கட்டியவர் இவருடைய அம்மா சந்தியா. அதனால் “வீட்டுக்குள் என்ன மாற்றமும் செய்யலாம். ஆனால் அம்மா வைத்த வாசலை மட்டும் மாற்றக்கூடாது” எனக் கூறியிருக்கிறார்.

எப்போதும் அம்மா செல்லம்தான். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட அந்த நினைவுகள் இல்லை.

போயஸ் வீட்டுக்குள் நுழையும் இடத்தில் இவரது தாயார் சந்தியா, எம்.ஜி.ஆர்.ஆகிய இருவரின் படங்கள் மட்டுமே இருக்கும்.

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற விழாவில் ஆறடி உயரமுள்ள வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா வழங்கினார். இவருக்கு மிகவும் பிடித்த படம் இதுதான்.

பெருமாளை விரும்பி வணங்கி வந்தார். மன்னார்குடி இராஜகோபாலசாமி இதில் முதன்மையானது. மயிலை கற்பகாம்பாளையும், கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவியையும் சமீப காலமாக வணங்கி வந்தார்.

தினமும் காலையில் நிஷாகாந்தி எனப்படும் இருவாட்சி மலர்களை பறித்து பூஜைக்கூடையில் தயார் நிலையில் வைத்திருப்பார்கள் கார்டன் பணியாளர்கள். அதை எடுத்தபடியே பூஜையறைக்குள் நுழைவார். சமீபமாக துளசியும் பூஜையில் தவறாமல் இடம்பெற்று வந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

யாகம் வளர்ப்பதிலும்,ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயலலிதாவிற்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாக மந்திரம் சொன்னாலோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேதஞானம் உண்டு.

சிறுதாவூர் பங்களா இருக்குமிடம் மொத்தம் 116 ஏக்கர். அங்கு புறா, கிளி, காடை, கௌதாரி போன்றவற்றை வளர்த்து வந்தார். இந்திரா, சந்திரா என்ற ஈமூக்களும் வளர்த்தார். இரண்டும் திடீரென இறந்துவிட ஈமு வளர்ப்பதையே விட்டுவிட்டார்.

பரதம், ஓரிண்டல் டான்ஸ் இரண்டையும் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தவர். முதல்வராக இருந்தபோது ஒருமுறை ஊட்டியில் மேடையைவிட்டு இறங்கி வந்து ஆடியதை இப்போதும் அந்த ஜனங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

ஜெ.வின் 100-வது படத்துக்கான பாராட்டு விழாவில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் “நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் ஜெயலலிதா” என்று பாராட்டப்பட்டவர்.

பழைய பாடல்கள் கேட்பதில் அதிக ஆர்வமுள்ளவர். ஜெயா டிவியில் வரும் பழைய பாடல்கள் அனைத்தும் இவருடைய விருப்பங்கள்.

ரயில் பயணம் பிடிக்காது. கார் மற்றும் ஹெலிகாப்டர் பயணங்கள்தான் அதிக விருப்பம்.

போயஸ் வீட்டில் எப்போதும் 7 நாய்க்குட்டிகள் இருக்கும். அவரது பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் ஒரு குட்டி புதிதாக இணைந்து கொள்ளும். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகமானதால் சில குட்டிகள் சிறுதாவூர், கோடநாடு என அனுப்பி வைக்கப்பட்டனவாம்.

இந்தியாவில் உள்ள அத்தனை பிரபலங்களையும் தனது “வாக் அண்ட் டாக் ” பேட்டிக்கு வரவழைத்த NDTV-யால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்றமுடியவே இல்லை. கடைசிவரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்.

ஓஷோவின் புத்தகங்ளை மொத்தமாக வாங்கி படித்து வந்தார். அதற்கப்புறம் ரமணர் பற்றியே அதிகம் படித்து வந்திருக்கிறார். ரமணர் தொடர்பான முக்கிய புத்தகங்கள் அனைத்தும் சமீபகாலமாக அவர் மேஜையில் இருந்தனவாம்

ஜெயலலிதாவின் முழு இருப்பும் போயஸ் கார்டனின் முதல் மாடியில்தான். அங்கு சசிகலா, மற்றும் முக்கியப்பணியாளர்கள் தவிர யாருக்கும் அனுமதி இல்லை.

திரைப்பட துறையை ஜெ. தெரிவு செய்திருந்தாலும் வழக்குரைஞராக வேண்டுமென்பதே அவரது லட்சியமாக இருந்தது. ஆனால் குடும்பச்சூழல் காரணமாக நடிப்புத் தொழிலை முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டது.

பாடசாலை மாணவியாக இருக்கும்போதே ஜெயலலிதா பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளார்.அதில் ஒன்று TEA HOUSE என்ற ஆங்கில நாடகம். அதன் பின்னர் THE EPISTLE என்ற ஆங்கிலப்படத்திலும் நடித்துள்ளார்.

திரையுலகில் அதிக வெள்ளிவிழா திரைப்படங்களை வழங்கிய சாதனை ஜெவுக்கு உண்டு. அவர் நடித்துள்ள 92 தமிழ்படங்களில் 85 படங்கள் வெள்ளிவிழா கண்டவை.

சிவாஜியுடன் இவர் நடித்த தெய்வமகன்  திரைப்படம்தான் ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல்  தமிழ்ப் படம்.

ஜெயலலிதா அறிமுகமான 5 மொழித் திரைப்படங்களும் பெரும் வெற்றிப்பெற்றவை.

“நான் அனுசரித்துப் போகிறவள்தான். ஆனால் எனக்கென்று சில சிந்தனைகள் உண்டு. அதை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று தன் கேரக்டருக்கு விளக்கம் அளித்தவர் அவர்.

தமிழகம், தான் வளர்த்த இரும்புப் பெண்மணியை இழந்துவிட்டு தவிக்கிறது. இனி எக்காலம் பிறப்பார் தமிழகமே கொண்டாடும் அம்மா?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About