சர்க்கரை நோயாளிகளின் குழிப்புண்ணை குணப்படுத்தலாம்! - வாட்ஸ்அப்பில் வைரலாகும் செய்தி சாத்தியமா?

சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதிலும் குழிப்புண் என்றால், சர்க்கரை நோ...

சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதிலும் குழிப்புண் என்றால், சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் நிலைமை பரிதாபம். என்னதான் மருத்துவம் வளர்ந்திருந்தாலும், சில நோய்களுக்கு சிகிச்சை பலனளிப்பதில்லை. ஆனால் நமது பாரம்பர்ய வைத்தியம் சில நோய்களுக்குக் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
'சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்களை இயற்கை வைத்தியத்தால் குணப்படுத்த முடியும்' என்று சமீபகாலங்களாக வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் உலவிக்கொண்டிருக்கிறது. அது சாத்தியம்தானா என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர் சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் ஏற்படுவது ஏன் என்பது பற்றி அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

சர்க்கரை நோய் என்பது வளர்சிதை மாற்ற நோய்களின் ஒரு தொகுப்பே. உடலானது தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாத நிலையிலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பயன்படுத்த இயலாத நிலையிலோ பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆக, இது ஒரு நோயல்ல, இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடே.


பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அது எளிதில் குணமாகாது. சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாகக் குறைந்துவிடும். ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளால் இதை உணர முடியாது. ஆனால், காலப்போக்கில் கால்கள் விரைத்தது போன்ற உணர்வு தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஏதோ மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும். கால்களில் மாட்டிய செருப்பு கழன்றாலும்கூட அது நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் கல், முள் அல்லது ஆணி குத்தினால்கூட அதை உணர முடியாது. காரணம் கால்கள் மரத்துப்போயிருக்கும்போது காயம் ஏற்பட்டால் வலி தெரியாது. அது உணரப்படாத பட்சத்தில் காயம்பட்ட இடத்தில் மேலும் அழுத்தி அழுத்தி நடப்பதால் புண் மேலும்மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்.

அதேபோல், சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய ரத்தம் பாய்ச்சப்படாமல் போகும். அப்போது காயமோ, புண்ணோ ஏற்பட்டால் போதிய ரத்தம் கிடைக்காமலும் புண்கள் ஆறுவதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் போய்விடும். இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், பெருகவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக்கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.


சர்க்கரை நோயும் அதனால் ஏற்படும் புண்களின் பாதிப்பும் இப்படியிருக்க, வாட்ஸ் அப்பில் பரவிவரும் அந்தத் தகவல் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

``சா்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களைக் குணப்படுத்த அலோபதி மருத்துவர்களிடமே பெரும்பாலும் சிகிச்சை எடுத்து வருகிறார்கள். அதற்காக சிலநாட்கள் சிகிச்சை செய்து பார்த்தும் அந்தப் புண்கள் ஆறவில்லை என்றால் கைவிரித்து விடுகிறார்கள். அதாவது, விரலில் புண் இருந்தால் விரலையே துண்டித்து விடுவதும், காலில் புண் காணப்பட்டால் காலைத் துண்டித்து விடுவதும் தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகளின் தனித்திறமையாக இருக்கிறது.

சிகிச்சைக்காக சென்றவர்களின் காலையும், விரலையும் இழப்பதோடு அவர்களிடம் காசையும் இழந்தவனுக்குத்தான் தெரியும், அதன் வலி. ஆனால், இந்த குறைபாட்டுக்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது, எனது தாயாருக்கு காலில் ஏற்பட்ட குழிப்புண்ணுக்கு டாக்டா்கள், புண் ஏற்பட்ட இடத்தில் விரல் கறுப்பாகிவிட்ட காரணத்தால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டார்கள். அப்போது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாத இவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் ரணத்தை எப்படி ஆற்றப்போகிறார்கள் என்று. கடைசியில் அப்படிப்பட்டவர்கள் மரணத்தைத்தான் தழுவ வேண்டும். இதுதான் இன்றைய நிலை. இதற்கு நமது இயற்கை மருத்துவத்தில் கண் கண்ட மருந்து இருப்பதாக எனக்குத் தெரியவந்தது.

அது ஆவாரம் இலை. இந்த இலையை அம்மி அல்லது மிக்ஸியில் மையாக அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் வைத்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு சிறுதணலில் வதக்கி அதை சுத்தமான பருத்தித்துணி வைத்து கட்டிவிட வேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஒருநாள் கட்டிவந்ததில் குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிட்டன. இது எனது தாயாருக்கு என் கையாலே செய்து, அதில் கிடைத்த பலன். அந்த புண்கள் ஆறியபிறகு நான்பெற்ற மனநிறைவை நீங்களும் செய்து பயனடையுங்கள். இதை அதிகம் பகிர்ந்து பலரின் கால்களை காப்பாற்றுவோம்.''

சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளான பலர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் புண்களைக் குணப்படுத்த வழி தெரியாமல் இருக்கும் இந்தச் சூழலில், வாட்ஸ்அப்பில் வந்த இந்த வைத்தியத்தைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை? அது நடைமுறைக்குச் சாத்தியமா? என்பதுபற்றி ஆராயாமல் ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை உண்மையென்று நம்பி கண்மூடித்தனமாகப் பின்பற்றும்பட்சத்தில் அது சில நேரங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


உண்மையில், ஆவாரம் இலைக்கு சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் குழிப்புண்களை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறதா? 
சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் கேட்டோம்.

``ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு நீங்கள் சொன்ன வைத்தியம் நிச்சயம் பலனளிக்கும். ஆனால் சில நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். அதில் சரியாகாத பட்சத்தில் ஊமத்தை இலையில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலத்தைப் பூசலாம். இதுவும் பலனளிக்கவில்லை என்றால், மேகவிரணக் களிம்பு (Mercury, Calomel, Mercuric Chloride, Cinnabar) என்ற ஒரு களிம்பு உள்ளது. அதைப் பூசுவதன்மூலம் ஆறாத புண்களும் ஆறிவிடும்.

பொதுவாக சித்த மருத்துவத்தில் இது மட்டுமல்ல... மற்ற மருத்துவ முறைகளால் கைவிடப்படும் நோய்கள் அனைத்துக்கும் சிறப்பான மருத்துவம் உள்ளது'' என்றார்.

மருத்துவம் என்பது உயிருடன் தொடர்புடையது. எனவே அதுதொடர்பான தகவல்கள் மக்களுக்கு பலனளிக்க வேண்டும். அதைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த சிறிய விளக்கத்தை இங்கே தந்திருக்கிறோம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About