கமலின் "விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை!

"விஸ்வரூபம்" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகரா...


"விஸ்வரூபம்" படத்தின் பகுதி இரண்டாக முதல் பகுதியில் முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களோடு இணைந்து கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நாயகராக நடித்திட, "ஆஸ்கார் பிலிம் பிரைவேட் லிமிடெட்" வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்" வழங்க, "கோல்டன் குளோப் மூவிஸ்" ரிலீஸ் செய்ய வந்திருக்கும் படம் தான் "விஸ்வரூபம் - 2."

"விஸ்வரூபம்" முதல் பாதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து, அந்த தீவிரவாதிகளில் ஒருவராகவே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உண்டு, உறங்கி அமெரிக்காவை காப்பாற்றிடும் கமல், இந்த பகுதி இரண்டில், லண்டன் மாநகரை 1500 டன் ஹிட்லர் காலத்து வெடி பொருட்களில் இருந்து காப்பாற்றுவதோடு, 64 இந்திய நகரங்களை தீவிரவாதிகளின் வெடிகுண்டுகளில் இருந்தும் காப்பாற்றும் "ரா" உளவு அதிகாரியாக அதிரடி செய்திருக்கிறார்.

அவருக்கு காதலி ஆண்ட்ரியாவும், மனைவி பூஜா குமாரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து உதவுவதும் அவர்களுடனான ரொமான்ஸும், கமலின் தேசப்பற்றும் தான் விஸ்வரூபம் - 2" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்... எல்லாம்.


கமல், விஸாம் அகமத் கஷ்மீரி... எனும் விஸ்வநாதனாக வழக்கம் போலவே மிரட்டியிருக்கிறார்.

அதிலும், கமல், "இவர், வழிமொழியிரார்... அவர், கழி மொழியரார்....." எனும் நாரச டயலாக்கில் தொடங்கி, "நீங்க 200 வருஷம் வெள்ளைக்காரன் இந்தியாவை கொள்ளை அடிச்சதை 64 வருஷத்துக்குள்ள அடிச்சவங்க தானே... நீங்க." எனும் அர்த்தம் பொதிந்த "பன்ச்" பேசும் காட்சி வரை சகலத்திலும் அசத்தியிருக்கிறார்.


டாக்டர் நிருபமாவாக வரும் பூஜா குமாரும், அஷ்மிதாவாக கமலின் ஜுனியர் ஆபிஸராக வரும் ஆண்ட்ரியாவும் முதல் பகுதியில் விட்டதை இதில் பிடிக்க முயன்று கமலிடம் நெருக்கமும், கிறக்கமும் காட்டி ரசிகனை ஒரு வழி பண்ணுகின்றனர்.

"நீ, ஒட்டு கேட்டியா எட்டிப் பார்த்தாயா..? "என சந்தேகமாக ஆண்ட்ரியாவை கேட்கும் பூஜா குமாரும் சரி, வில்லனின் ஆளை "பீஸ் பீஸா கழட்டிடுவேன் விஸாம் கொடுத்த ட்ரையினிங் இது..." அடித்து உதைக்கும் ஆண்ட்ரியாவும் சரி போட்டி போட்டு நடித்து படத்திற்கு பலம் கூட்டியிருக்கின்றனர்.

கமலின் சுப்ரீயர் ஆபிஸராக வரும் சேகர் கபூர், தீவிரவாதி ஒமர் உள்ளிட்டவர்களும் ஏனைய இணை, துணை நடிகர்களும் பாத்திரத்திற்கேற்ற பக்கா தேர்வு!

படத்தொகுப்பும், படத்தொகுப்பாளரும் கமலுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், ஒளிப்பதிவாளர் ஓவராகவே கமலுக்கு ஒத்துழைத்திருப்பது படத்திற்கு பெரிய ப்ளஸ்!

ஜிப்ரானின் இசையில், "சாதி மதம் எனும் வியாதியை போக்கிட....", "மாயத் திருடன் காம கலைஞன்..." உள்ளிட்டப் பாடல்களும், பின்னணி இசையும் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்திருக்கின்றன.

கமலின் எழுத்து, இயக்த்தில், "எதிரியை நேருக்கு நேர் பார்த்துட்டே சாகணும்....", ".சாதகமா நடக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு..." "பொம்பளை மாதிரி பேசாத... பொம்பளைக் கூட அதிகமா பேசாத...." உள்ளிட்ட வசனங்களில் பளிச் பளிச் எனத் தெரியும் கமல் ஹாசன், திரைக்கதை, இயக்கத்தில், சில, பல இடங்களில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக செய்ய முயற்சித்து, ரசிகனின் பொறுமையை சோதித்திருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

மற்றபடி, "கடவுள், கண்டிப்பா உன்னை தண்டிப் பார்... உன் கடவுளைத் தவிர வேற இல்லைன்னு நம்பறவன் தானே நீ.... அப்ப அவரே தண்டிப் பார்... "எனும் போது கமல் என்டரி கொடுத்து வில்லனின் ஆட்களை புரட்டி எடுக்கும் இடங்களில் தன் கடவுள் மறுப்பு கொள்கையை காண்பிக்க முயன்ற அளவிற்கு கமல் கதை, திரைக்கதையில் கவனம் செலுத்தாததும், "இங்க தீவிரவாதின்னு யாருமே இல்ல.." தீவிரவாதத்திற்கு நியாயம் சேர்க்க முயல்வதும், ஈஸ்வர் ஐயர்... பாத்திரத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களை தொடர்ச்சியாக நோகடிக்க முயன்றிருப்பதும் தேவைதானா? என சாமான்ய ரசிகனையும் யோசிக்க வைக்கும்.

மொத்தத்தில், கமலின் "விஸ்வரூபம்' - இரண்டு, ஒன்று அளவிற்கு இல்லை!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About