விடுமுறைக்குப் பின் கர்ப்பப் பரிசோதனை அவசியம்! அதிர்ச்சியளிக்கும் பள்ளி நிபந்தனை

விடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை.... மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை.... - பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்...

விடுமுறைக்கு சென்று திரும்பினால் மருத்துவப் பரிசோதனை....
மாதவிலக்கு தள்ளிப் போனால் கர்ப்பப் பரிசோதனை....
- பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்கிற கொடுமைகள்!

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனையோ, அவளது மாதவிலக்கு தேதிகளோ உதவாது. ஆனாலும் இந்த இரண்டும் பள்ளிக்குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிற நிலையில், இப்படியொரு வழக்கம் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிற செய்தி, அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பழங்குடியின விடுதிப்  பள்ளிகளை  'ஆஷ்ரம்ஷாலா' என அழைக்கிறார்கள். ஆஷ்ரம்ஷாலாக்களில் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள்...அவற்றின் பின்னணியில் பாலியல் வன்கொடுமைதான் காரணமாக இருக்கும் என்கிற யூகத்தைத் தொடர்ந்து, 2 வாரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் அறிக்கை ஒன்றை அளித்திருக்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டி. ஆஷ்ரம்ஷாலாக்களில் இதுவரை நடந்துள்ள 1077 மரணங்களில்,  31 தற்கொலைகள். 67 சதவிகித மரணங்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.  ஆனாலும் பள்ளி மாணவிகளிடம் நடத்தப்படுகிற பாலியல் அத்துமீறல்களே அவர்களது அகால மரணங்களுக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதையடுத்து 2 நாட்களாக இருந்தாலும் விடுதியை விட்டு வீட்டுக்குச் சென்று திரும்புகிற பெண் குழந்தைகள், திரும்ப வரும்போது கர்ப்பமில்லை என்பதை உறுதி செய்கிற மருத்துவப் பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டுமாம்.

மகாராஷ்டிராவில் உள்ள ஆஷ்ரம்ஷாலா பள்ளிகள் அனைத்திலும் இதுவே நடைமுறையாம். அது மட்டுமல்ல, விடுதியில் தங்கியிருக்கிற பெண்களில் யாருக்காவது 2, 3 நாட்கள் மாதவிலக்கு தள்ளிப் போனால், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்தை அணுகி கர்ப்பத்தை உறுதி செய்கிற பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டுமாம்.

கர்ப்பப் பரிசோதனை

இவை எல்லாம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான செயல்கள் என்பது தெரிந்தாலும் பத்து வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளில் தொடர்ந்து கொண்டிருக்கிற நடைமுறை என்பதையும் ஒப்புக் கொள்கிறார்கள் பள்ளி நிர்வாகத்தினர். பள்ளிகளுக்கு ஆய்வுத் துறையினர் வரும்போது இந்த மருத்துவ ஆதாரங்கள் எதுவும் அவர்களிடம் காட்டப்படுவதில்லை என்கிறது டாக்டர் சலுங்கே கமிட்டியின் அறிக்கை.

ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதைக் கண்டுபிடிக்க சிறுநீர் பரிசோதனையோ, மாதவிலக்கு கேலண்டரோ ஆதாரங்களாக இருக்க முடியாது. தவிர சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கவுன்சலிங் கொடுக்காமலும்,  பெற்றோரின் சம்மதம் இல்லாமலும் இது போன்ற பரிசோதனைகளை செய்யக்கூடாது என்பதையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

பள்ளி வளாகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு கண்காணிக்கப்படவும் பலப்படுத்தப்படவும் வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை முன்வைத்திருக்கிறது. பள்ளி வளாகங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர். தவிர, மேற்கூறிய மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான சர்ச்சைக்கும் 3 வாரங்களில் பதில் அளிக்கவும்  கெடு விதித்திருக்கிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About