ஞாபக சக்தி, எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், முதுமை தள்ளிப்போகும்... ‘பிக் பாஸ்’ ஆயுர்வேத சிகிச்சை!

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய பத்து நாள்களிலேயே பங்கேற்ற பலரும் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கஞ்சா கருப்பு, "என்னை உடனடியாக வ...

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கிய பத்து நாள்களிலேயே பங்கேற்ற பலரும் புலம்பத் தொடங்கிவிட்டார்கள். கஞ்சா கருப்பு, "என்னை உடனடியாக வெளியேற்றுங்கள்" என்கிறார். ஏற்கெனவே இருவர் வெளியேறிவிட்டார்கள். `பங்கேற்பாளர்களை உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி’ என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, வயது முதிர்வைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைப்போலவே ஓர் ஆயுர்வேத சிகிச்சை முறை இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

உண்மைதான்.

ஆயுர்வேதம்

“வெளியில் அதிகம் பிரபலமாகாத `குடி பிரவேசிஹா’ என்ற இந்தச் சிகிச்சை முறை ஏராளமான பலன்களைத் தரக்கூடியது" என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். மேலும், இந்தச் சிகிச்சையின் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விளக்குகிறார் அவர்.ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்

“ஆயுர்வேத மருத்துவத்தில் ஆதி காலத்திலேயே ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனித்தனி பிரிவுகள் இருந்திருக்கின்றன. அதில் ஒரு சிறப்புப் பிரிவுதான் 'ரசாயன தெரபி' எனப்படும் சிகிச்சைத் துறை. இந்தத் துறை, நோய் வராமல் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வயது முதிர்வைத் தடுக்கவும் உதவக்கூடியது. இது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மனரீதியாக பல்வேறு பலன்களைத் தரக்கூடியதாகும். இந்தச் சிகிச்சை குறித்து 'சரஹ சம்ஹிருதை' என்கிற ஆயுர்வேத நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தெரபிகளில் இரண்டு வகை உள்ளன. ஒன்று குடி பிரவேசிஹா, மற்றொன்று வாதாபிஹா. இதில், குடி பிரவேசிஹா தெரபிதான் சிறந்த ஒன்று. இந்த சிகிச்சை முறைதான் கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஒரு சில இடங்களில் அளிக்கப்படுகிறது. இந்த தெரபி, மற்ற சிகிச்சைபோல அல்லாமல் சிகிச்சை பெறும் நபர்களைத் தனி அறையில் அடைத்துத் தரப்படும்.

அதாவது, குடி பிரவேசிஹா - குடி என்றால் குடில் அல்லது குடிசை என்று பொருள். பிரவேசிஹா என்பதற்கு 'உள்ளே நுழைதல்' என்று பொருள். அதாவது, வெளி உலகத் தொடர்பு இல்லாமல், ஓர் அறையின் உள்ளே அடைத்துவைத்து அளிக்கப்படும் சிகிச்சை முறையாகும்.

சிகிச்சை எப்படி அளிக்கப்படும்?

இந்தச் சிகிச்சையில் முக்கியமானது சிகிச்சை அளிக்கப்படுவதுக்கு முன்பான பத்தியங்கள். கூடவே சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். இதனால், சிகிச்சைக்கு முன்னர் உடலில் உள்ள அழுக்குகள், கழிவுகள் வெளியேறி சிகிச்சைக்கு உடல் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும். அதன் பின்னர், பிரத்யேகமாக வடகிழக்கு பார்த்த வாசல் உடைய ஒரு வீடு அமைக்கப்படும். அந்த வீடு தூசி, மாசு இல்லாத மிகவும் தூய்மையானதாகவும், சுத்தமான காற்று உள்ளே நுழையுமாறும் அமைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில், வெளியிலிருந்து வரும் சத்தங்கள், இரைச்சல் உள்ளே நுழையாதவாறு மூன்று அடுக்கு சுவர் கொண்டதாகவும் இருக்கும். வீட்டில் மெழுகுவர்த்தி போன்று சிறிய அளவில் வெளிச்சம் இருக்குமாறு பராமரிக்கப்படும். உள்ளே உள்ள நபருக்கு உணவு வெளியிலிருந்து கொடுக்கப்படும். உணவுடன் 'சயாவானா பிரஹாசன்' என்ற லேகியம் கொடுக்கப்படும். சிகிச்சையில் இருக்கும்போது, தொலைபேசி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு பொருள்களோ, செய்திதாள்களோ, புத்தகங்களோ தரப்படாது. வெளியுலகத் தொடர்பே இருக்காது. இது சித்தர்கள் மேற்கொள்ளும் தியானநிலையைப் போன்றது. ஒரு மாதம் முதல் அதிகபட்சமாக 240 நாள்கள் வரை நபருக்கு ஏற்றவாறு இந்த சிகிச்சை அளிக்கப்படும்.

பலன்கள்...

இந்தச் சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் தாதுகள் சீராகும். உடலில் உள்ள மாசுக்கள், உடல் உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஐம்புலன்களின் திறன் மேம்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும். முதுமை தள்ளிப் போகும்..."

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About