'அனைவருக்கும் ஊதியம்!' - உலக 'பிக்பாஸ்'களின் திட்டம்!

எல்லோருக்கும் சுபிக்‌ஷம் தரும், எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் கொண்டுபோய் நிறுத்தும் என்றெல்லாம் பொருளாதார வல்...

எல்லோருக்கும் சுபிக்‌ஷம் தரும், எல்லோரது வாழ்க்கைத் தரத்தையும் யாரும் எதிர்பார்க்காத அளவில் கொண்டுபோய் நிறுத்தும் என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்களால், போற்றிப் புகழப்பட்ட  ‘உலகமயமாக்கல்’ இன்று திசை வழி தெரியாமல், முட்டுச் சந்தில் மோதி நிற்கிறது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பளபளப்பாக அனைவரையும் ஈர்த்த உலகமய பொருளாதாரக் கொள்கை, இன்று வளர்ந்த நாடுகளிலேயே தன் அனைத்துப் பளபளப்புகளையும் இழந்து பரிதாபமாக நிற்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பை உலகமயம் உண்டாக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், பணப்புழக்கம் அதிகரிக்கும், பொருளாதாரத்துக்கு இறக்கை முளைக்கும் என்று வர்ணிக்கப்பட்ட கொள்கை இன்று தரை தட்டி தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையை சுவீகரித்துக்கொண்ட நாடுகளிலெல்லாம், பொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வுகளைத்தான் பரவலாக்கி இருக்கிறது. அதனால்தான், ஜெர்மனியில் G 20 மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற இந்தக் கொள்கையின் பிரதிநிதிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. உலகமயமாக்கலின் பலன்களையும் நாம் மறுத்துவிட முடியாது. தொழிற்நுட்பத்தை செம்மைப்படுத்தியது... கடைக்கோடி மனிதனிடமும் அதைக்கொண்டு சேர்த்தது நிச்சயம் உலகமயக் கொள்கைதான். ஆனால், இதுகுறித்தெல்லாம் பெருமைப்பட முடியாத அளவுக்கு உலகமயமாக்கல் மிக மோசமான ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கியிருக்கிறது. எந்தப் பொருளாதார வல்லுநர்கள் இந்த தாராளப் பொருளாதாரக் கொள்கையைப் பரிந்துரைத்தார்களோ... அவர்களே இன்று, “தேசங்களின் இந்த வீழ்ச்சிக்கு உலகமயப் பொருளாதாரக் கொள்கை மட்டும் காரணமில்லை. அதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இருந்தாலும் உலகமயமாக்கலில் சில பிரச்னைகள் இருக்கின்றன” என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

'மோசமான ஏற்றத் தாழ்வுகள்'

உலகமயக் கொள்கையில் உள்ள பிரச்னையென்று அவர்கள் சொல்வது, முதலீடு ஓர் இடத்தில் நிற்காமல், எந்தத் தேசத்தில் முதலீடுக்கான நல்ல வருவாய் இருக்கிறதோ, எங்கு உற்பத்திச் செலவு குறைவாக இருக்கிறதோ அங்கு முதலீடு பயணிக்கிறது. இதனால் இப்போது முதலீடுகள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலிருந்து பயணித்து ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றுவிட்டது. சரி... அங்காவது இந்த முதலீடு அறத்தோடு நடந்துகொண்டதா என்றால்... நிச்சயமாக இல்லை. லாபம், மேலும் லாபம் என்பதற்காகத் தொழிலாளிகளையும், இயற்கையையும் சுரண்டி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

இன்னொருபக்கம் பொருளாதார அறிஞர்கள், 'உலகமயமாக்கலில் சிக்கல் இல்லை; உயர் - உலகமயமாக்கலில்தான் பிரச்னை' என்று அறமுடன் சுரண்டுவது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, சக மனிதர்கள், இயற்கை என யாருக்கும் விசுவாசமாக இருக்கத் தேவையில்லை. 'முதலீட்டுக்கு விசுவாசமாக இரு; பணத்துக்கு விசுவாசமாக இரு' என்று இதுநாள்வரையிலும் கற்பித்துவிட்டு, அதற்கு ஏற்றாற்போலக் கொள்கைகளையும் வடிவமைத்துவிட்டு அறத்துடன் உலகமயமாக்கலை அணுகு என்று இப்போது அறிவுறுத்தினால்... யார்தான் கேட்பார்கள்...?

பொருளாதாரத்தை ஆய்வு செய்யும் அறிஞர்கள் உலகமயமாக்கல் ஏற்படுத்தி இருக்கும் சிக்கலான ஏற்றத்தாழ்வுகளுக்கு நிவாரணியாக முன் வைப்பது, 'Universal Basic Income'. அதாவது, அனைவருக்கும் அடிப்படை ஊதியம்.

'அனைவருக்கும் அடிப்படை ஊதியம்'

மார்க் உலகமயமாக்கல், அதன் உச்சத்தில் பிறந்த ஆட்டோமேஷன் சிலிக்கான் வேலியிலேயே பலரை வேலை இழக்கச் செய்திருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், முதலில் பெரும்பான்மையினோருக்குப் பசி வரும். அதைத் தொடர்ந்து பிணி வரும். பின்னாலேயே கோபமும் கலகமும் வரும் என்று உணர்ந்த நிறுவனங்களும், நிறுவன நலன் அரசுகளும் தீவிரமாக ‘அனைவருக்கும் அடிப்படை ஊதியம்’ குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டன. அதாவது, சமூக அந்தஸ்து, பணியில் இருக்கிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்காமல், மாதம் மாதம் தங்கள் குடிகளுக்கு ஊதியம் தருவது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் முதல் டெஸ்லாவின் முதன்மை நிர்வாகி இலோன் முஸ்க் வரை அனைவரும் இந்தத் திட்டத்தை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். சிலிக்கான் வேலியில் சில நிறுவனங்களும், ஃபின்லாந்த் தேசமும் அனைவருக்கும் அடிப்படை ஊதியம் தருவதற்கான சோதனைத் திட்டத்தைத் தொடங்கிவிட்டது.  இந்தியாவும் இந்தத் திட்டத்தை சுவீகரித்துக்கொள்ள விரும்புகிறது.

இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்  இந்தத் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அவர், “இந்தத் திட்டம் நிச்சயம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும். ஏழ்மையில் உழல்பவர்களின் வலிகளை இது குறைக்கும்” என்கிறார்.

சிலர் எல்லை மீறி இதை ‘உட்டோபியா’ கருத்தியலுடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டார்கள். தாமஸ் மோர் எழுதிய நாவல்,  ‘உட்டோபியா’. இதில் வரும் கனவு தேசத்தில் வறுமை என்பதே இருக்காது. அனைவருக்கும் அனைத்தும் இருக்கும். அனைத்தும் சரிசமமாகப் பகிர்ந்து தரப்படும். எல்லோருக்கும் அனைத்தின் மீதும் உரிமை இருக்கும் என்பதால்... யாருக்கும் எந்தத் தேவையும் இருக்காது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தேசங்கள் இதுபோல ஆகிவிடும் என்று புனையத் தொடங்கிவிட்டார்கள்.

'உட்டோபியாவும்... அடிப்படை ஊதியமும்'

உட்டோப்பியா

உண்மையில்... அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்பது எளிய மக்களின் வாழ்வை மேன்மையாக்கும் திட்டமா...? உட்டோபியா தேசம் போல ஏற்ற இறக்கங்கள் இல்லாத சமநிலை உருவாகுமா... என்றால் நிச்சயம் இல்லைதான்.

ஓர் அரசுக்கு ஏன் ஏற்ற இறக்கங்கள் உண்டாகிறது என கண்டறிந்து... வேரில் விழுந்துள்ள விரிசலை சரிசெய்ய வேண்டும். வேரை சரி செய்யாமல், இலைகளின் துயரத்துக்கு மருந்திடுவது பயனற்றதுதான். அது மட்டுமல்ல... அனைவருக்கும் அடிப்படை ஊதியம் என்ற இந்தத் திட்டத்தில் உள்ள நுண்ணரசியல் ‘மானியம்’ குறித்தது. மாதம் ஒரு தொகையை நம் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, ரேஷன் முதல் கல்வி மானியம் வரை அனைத்தையும் வெட்டும் அபாயமும் இருக்கிறது. எப்போதும் அரசுக்காகவும் பெருநிறுவனங்களுக்காகவுமே மட்டும் சிந்திக்கும் பொருளியல் அறிஞர்கள், 'நமது ஜி.டி.பி-யில் பெருந்தொகை மானியங்களுக்கே செல்கிறது... அனைவருக்கும் ஊதியம் அளிக்கும் திட்டம் வந்தால், பெரும் தொகை மிச்சமாகும்' என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். உலக வர்த்தக அமைப்பு, 'மானியத்தைக் குறை' என்று நம் அரசுகளை வலியுறுத்துவதுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தால், இதன் நோக்கம் தெளிவாகப் புரியும். ரேஷன் கடைகளில் மானியத்தில் அரிசி தருவதையும் வேளாண்மைக்கு மானியத்தில் உரம் தருவதையும் நிறுத்திவிட்டு ஒரு தொகையை மாத ஊதியமாகத் தருவது எந்த விதத்திலும் பயனளிக்காது; ஏழ்மையையும் ஒழிக்காது. இன்னொரு பக்கம் தீவிர வலதுசாரிய பொருளியல் அறிஞர்கள் முன்வைக்கும், ‘இது மக்களை சோம்பேறி ஆக்கிவிடும்’ என்ற கருத்தையும் நாம் சுலபமாக கடந்து சென்றுவிட முடியாது.

உட்டோபியா போல உண்மையில் ஒரு தேசம் எல்லா மக்களுக்குமான தேசமாக விரும்பினால், அது தன் வேரின் தவறுகளை சரி செய்ய வேண்டும். கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்பு முன்மொழியும் அனைத்தையும் அப்படியே உள்வாங்கி செயல்படுத்தாமல், மக்களுக்கு எது உண்மையில் நன்மைபயக்கும் என்று பகுத்தாய வேண்டும். அதைச் செய்யாமல், வேறு எந்தத் திட்டத்தை முன் வைத்தாலும் அது நிச்சயம் மக்களுக்கான திட்டமாக இருக்காது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About