“குடிநீரை விற்கும் அதிகாரம் இவர்களுக்கு யார் கொடுத்தது?”.. ‘அறம்’ கோபி நயினார்!

“அய்யோ! அவர் அப்படித்தான்… நீங்கள் அவருடையதைப் பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்; ஆனால், அடுத்த ஆராய்ச்சிக்குச் செல்ல அவர் தயங்கியதேயில்லை.....

“அய்யோ! அவர் அப்படித்தான்…

நீங்கள் அவருடையதைப் பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்;

ஆனால், அடுத்த ஆராய்ச்சிக்குச் செல்ல அவர் தயங்கியதேயில்லை...

கலகக்கார கலைஞனிடம் பஞ்சம் ஏது..?” - தமிழ்த் திரைக்களத்தில் ‘அறம்’ விதைத்திருக்கிற இயக்குநர் கோபி நயினார் பற்றி அவர் மகன் எழுதியிருந்த வரிகள் இவை. நம்மிடம் அந்தக் ‘கலகக்கார கலைஞன்’ பேசியபின்புதான் தெரிந்தது அவர் மனதில் அடக்கிவைத்துள்ளவற்றில் ஒரு துளிதான் ‘அறம்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. தற்கால அரசியல் முதல் தண்ணீர் அரசியல் வரை அலசுகிறார்...

தாக்கத்தை ஏற்படுத்திய ‘நண்டு’!

“என்னுடைய சிறுவயது மாலை நேரங்கள் முழுவதும் இடதுசாரிகள் வகுப்புகளில்தான் கழிந்தன. எட்டாவது படிக்கும்போது என் கைகளில் கொடுக்கப்பட்ட ‘சிலந்தியும் - ஈயும்’, ‘தாய்’, ‘உலகைக் குலுக்கிய பத்து நாள்கள்’ போன்ற இடதுசாரி இலக்கியங்கள் ஏற்படுத்தியத் தாக்கங்கள்தான் இன்றளவும் என்னுள் எரிந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறந்த ஜனநாயகத்தைக் கலைகள்தான் பேசும் என்பதைப் புரிந்துகொண்ட வயது அது. கிராமங்களில் அரசு வைத்திருக்கும் டி.வி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகப் பக்கத்து ஊர்களுக்குப் பறப்போம். அப்படி நான் ஓடிஓடி பார்த்த படங்களில் ‘நண்டு’ எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. சாதிய ஒடுக்குமுறைகள் நான் படித்த பள்ளிகளிலேயே எனக்கு நன்கு அறிமுகம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான், ஸ்கூலுக்கு ஷூ போட்டுக்கொண்டு போனால், அடுத்த வாரமே மற்ற சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கால்களிலும் ஷூக்களைப் பார்ப்பேன். நான் அலுமினியப் பெட்டியில் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்ததும் மற்ற மாணவர்களும் அலுமினியப் பெட்டிகளைக் கையில் எடுத்துக்கொண்டு வருவார்கள். ‘இந்தச் சாதிய சேர்ந்த இவனே இதெல்லாம் பண்ணும்போது, நாங்க என்ன குறைச்சலா’ என்ற தொணிதான் அவர்களின் பெற்றோரிடம் தெரிந்தது. இதுமாதிரி ஏகப்பட்ட அனுபங்களை வளரவளர பார்க்கத் தொடங்கினேன்.

அலுமினிய டம்ளரில் டீ!

சினிமாதான் எல்லாம் என, திரைத்துறைக்குள் வரும்போது எனக்கு வயது 19. சொந்த ஊரைவிட்டுத் தயாரிப்பாளரைப் பார்ப்பதற்காக வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்துக்கு வந்திருந்தேன். அங்கிருந்த என் நண்பன் சொன்னான், ‘டேய் காலைல எங்கயாவது போகணும்னா என்கிட்ட சொல்லு... நீ தனியா போகாத’ என்று. காலையில் 4.30 மணிக்கு எழுந்து அருகில் இருந்த டீக்கடைக்குப் போனேன். அங்கு சில விசித்திர காட்சிகள். தண்ணீர் நிரம்பிய ஒரு சிமென்ட் தொட்டி முழுக்க இருக்கும் அலுமினிய டம்ளர்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு மூங்கில் தட்டிக்குள் கை நீட்டினால் அதில் டீ ஊற்றினார்கள். அதற்கான காசை அவர்களின் கைகளில் இருந்து வாங்க மாட்டார்கள். சில்லறையாக இருந்தால், அருகில் இருக்கும் தண்ணீர் டப்பாவுக்குள் போட்டுவிட வேண்டும். ரூபாய் நோட்டாக இருந்தால் நீரில் நனைத்துப் பாய்லரில் ஒட்டிவிட வேண்டும். எனக்குக் கடும் அதிர்ச்சி. மேலும், ‘டீ கொடுங்க’ எனத் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருந்த என்னை, அடிக்க வந்துவிட்டார்கள். ‘யார கேட்டு பெஞ்சுல உட்காந்த நீ’ என ஒரே பிரச்னை. ‘பெரியவர் வீட்டுக்கு வந்தவருப்பா’ என அங்கிருந்த சிலர் சொன்னவுடனே அமைதியானார்கள். பெரும் மன உளைச்சலைக் கொடுத்த இந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் சினிமாவுக்குக் ‘குட்பை’ சொல்லிவிட்டு, சமூகம் சார்ந்து இயங்க ஆரம்பித்தேன். தலித் இயக்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இலக்கியக் கூட்டங்கள் என தொடர் பயணங்கள் செய்தேன். மக்களைப் படிக்க இதைவிட வேறென்ன வாய்ப்பு இருந்துவிடப் போகிறது.

‘அறம்’ படத்துக்கான அடிப்படை!

கிட்டத்தட்ட 15 வருடம் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்துவிட்டு, என்னுடைய 35 வயதுக்கு மேல் மீண்டும் சினிமாவுக்குள் வந்தேன். அப்போதே என் ஐடியா மாற்றுச் சினிமாதான். ஒருநாள் நான், டி.வி-யில் பார்த்த செய்திதான் இந்த ‘அறம்’ படத்துக்கான அடிப்படை. தொடர்ந்து குழந்தைகள் ஆழ்துளைக் கிணறுகளில் விழுவது தொடர்பாக புருஷோத்தமன் என்ற நண்பர் செய்த உதவியில் ஆரணி பகுதியில் சுற்றி ஆய்வு செய்தேன். குழந்தைகளை மீட்க நம்மிடம் ஒரு கருவிகூட இல்லை என்பது பெரும் அதிர்ச்சி. தீயணைப்பு வீரர்கள் செய்வதை நேரில் இருந்து பார்த்தபடியே இருப்பேன். படத்தில் காட்டிய அந்தக் ‘கயிறு டெக்னிக்’ அங்கு பார்த்ததுதான். சினிமா எடுப்பதற்காக அதைச் செய்யவில்லை. ஆனால், அந்தப் பாதிப்பு என்னை ‘அறம்’ படத்தை நோக்கித் தள்ளியது.

அரசியல் பேசிய புத்தகம்!

அடுத்து, சமூகத்தில் நிலவும் இந்தத் ‘தண்ணீர் அரசியல்’. நாம் குடிப்பது தண்ணீரே கிடையாது. எங்கள் கிணற்றில் இருந்து நீர் எடுத்தால், அதைத் தண்ணீர் என்று சொல்லலாம். இவர்கள் பிளாஸ்டிக் கேனில் அடைத்து விற்பதைத் தண்ணீர் என எப்படிச் சொல்வீர்கள்? உலகில் நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருள்களைக் காசுக்கு விற்கும் கொடுமையைவிட வேறு இருந்துவிட முடியுமா என்ன? இந்த நொடிவரை கெட்டுப்போகாத நம் தண்ணீரை வியாபாரமாக்கியதை எதிர்த்துக் கேட்பதற்கு வக்கற்று வாங்கிக் குடிக்கிறோம். நான் உள்பட இதற்கு விதிவிலக்கு இல்லையே. நான் எழுதிய, ‘நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்’ புத்தகம் மூலம் சூழலியல் அரசியலைப் பேசினேன். இங்கு எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் அரசியல் கட்சி என்ற ஒன்றே கிடையாது. கல்வி, சுகாதாரம் என எல்லாவற்றையும் கூறு போட்ட அரசியல்தான் இங்கு நடந்திருக்கிறது. இங்கு நம்மை ஆண்ட யார் ஆட்சியும் பொற்காலம் கிடையாது.

இந்த அவல அரசியலை என் படங்கள் குறிவைக்கும். மேலும், இந்தியாவில் இருட்டடிப்பு செய்யப்படும் இஸ்லாமியர்கள் பற்றி படம் எடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். பெண்களைப் பற்றி நிறைய பேச வேண்டும். என் படங்களின் மூலம் இனி நிறைய ‘மதிவதனிகள்’ வெளிப்படுவார்கள். என் கோபத்தை நான் கலையாக மாற்றியிருக்கிறேன். நான் வாங்கிய அடிகளைத்தான் என் படத்தில் பிரதிபலித்திருக்கிறேன். அது, மக்களுக்கு வலித்ததனால்தான் இன்று ‘அறம்’ திரைப்படம் அவர்கள் மனதில் நின்றிருக்கிறது” என பேசிமுடித்த கோபி நயினாரிடம் அத்தனை அரசியல் வாசம்.

எளியவர்கள் தங்களுக்குள் நீண்டநாள்களாக அடக்கி வைத்திருக்கும் கோபங்கள் நிச்சயம் பரியேறும் என்பது ‘அறம்’ மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About