மழைக்காலத்தில் காபியைவிட டீ நல்லது. ஏன்? Coffee, Tea

மழைக்கு ஒதுங்கும்போதும், குளிர்ந்த காற்றுவீசும்போதும் `சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்குமே...’ என்று நமக்குத் தோன்றும். `அப்பப்போ டீ, காபி க...

மழைக்கு ஒதுங்கும்போதும், குளிர்ந்த காற்றுவீசும்போதும் `சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்குமே...’ என்று நமக்குத் தோன்றும். `அப்பப்போ டீ, காபி குடிச்சாத்தான் ஃபிரெஷ்ஷா இருக்கு... வேலை ஓடுது’ என்று அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் சொல்லக் கேட்டிருப்போம். சிலர் மணி அடித்தாற்போல் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு டீயோ காபியோ குடிக்கும் பழக்கத்தைவைத்திருப்பார்கள். கேட்டால், `டீ, காபி குடிச்சாத்தான் மூளை வேளை செய்யுது’ என்பார்கள். இது உண்மையா? ஓரளவுக்கு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் நம்மைப் புத்துணர்ச்சியோடுவைத்திருக்க டீ, காபி பானங்கள் உதவுகின்றன. சரி... டீ, காபி இரண்டில் எது பெஸ்ட்... இவற்றை அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன... டீயோ, காபியோ ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்... யார் குடிக்கலாம்... யாரெல்லாம் தவிர்க்கலாம்? டயட்டீஷியன் பத்மினி விளக்குகிறார்.

காபிடீ

டீ - காபி... என்னவெல்லாம் இருக்கின்றன?
* டீயில் ஃப்ளேவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபினால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. வைட்டமின் சி, டி, கே மற்றும் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், மாங்கனீஸ், அயர்ன், ஜிங்க், சோடியம் மற்றும் ஃபுளூராய்டு (Fluoride) போன்றவை நிறைந்துள்ளன.
* காபியில் கஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருள், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் மற்றும் பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவை நிறைந்துள்ளன.

ஒரு நாளைக்கு எத்தனை கப் அருந்தலாம்?
* ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு கப் டீ குடிக்கலாம். அதிலும், வெறும் தேயிலை டீயாக அல்லாமல் மூலிகை டீ, கிரீன் டீ போன்றவற்றை மாற்றி மாற்றிக் குடிப்பது நல்லது.
* ஒரு நாளைக்கு இரண்டு கப் வரை காபி குடிக்கலாம். ஒரு நாளைக்கு 250 மில்லிகிராம் வரை காபியில் இருக்கும் கஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது காபியின் அளவு, வயது, உடல்நிலை, நம்மைச் சுற்றியுள்ள சூழல் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.

நன்மைகள்
* டீ, இதயம், நுரையீரல், நரம்பு மண்டலம், ரத்தம், செல்கள், தசை, பற்கள், தோல் என உடல் முழுவதுக்கும் பலனளிக்கிறது. குறிப்பாக, புற்றுநோய், இதய நோய் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. நாள் முழுவதும் எனர்ஜியுடனும் மனஅழுத்தமின்றியும் இருக்கச் செய்கிறது. இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
* அல்சைமர், பார்க்கின்சன் நோய் (Parkinson’s disease - PD), இதயநோய், சர்க்கரைநோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism), குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. இன்னும் காபியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மூலிகை தேநீர்

அளவுக்கு மீறினால்?!
* நான்கு கப்புக்கு மேல் ஒரு நாளைக்கு டீ குடித்தால், நரம்புமண்டலக் கோளாறுகள், தூக்கமின்மை, வாந்தி, பித்தம், சீரற்ற இதயத் துடிப்பு, தலைவலி போன்றவை ஏற்படும்.
* காபியில் உள்ள கஃபைன் அளவு அதிகரிக்கும்போது படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைசுற்றல், பசியின்மை போன்றவை ஏற்படும்.

யார், எதைத் தவிர்க்கலாம்?
* ரத்த சோகை உள்ளவர்கள், தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் டீ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் முடிந்தவரை டீயைத் தவிர்க்கலாம். விரும்புபவர்கள் மூலிகை டீ அல்லது கிரீன் டீ அருந்தலாம்.
* வளரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்தவரை காபி குடிப்பதைத் தவிர்க்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் காபி குடிக்கலாம்.

எந்த நேரத்தில் குடிக்கலாம்... எப்போது கூடாது?
* சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னரும், சாப்பிட்டு முடித்து இரண்டு மணி நேரம் கழித்தும் டீ குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்கக் கூடாது.
* காபி, காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரோ, பின்னரோ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம்.  தூங்குவதற்கு முன்னதாக  காபி குடிக்கக் கூடாது.

காபியும் டீயும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான பலன்களைக் கொண்டிருந்தாலும், காபியைவிட டீ சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதற்குக் காரணம், காபியில் உள்ள கஃபைன். நாம் குடிக்கும் ஒரு கப் காபியில் 80 முதல் 165 மில்லி கிராம் அளவு கஃபைன் இருக்கும். இது காபியின் வகையைப் பொறுத்து மாறுபடும். அதேபோல், ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் அளவு கஃபைன் உட்கொள்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

க்ரீன் டீ

டீயின் வகைகள்...
கிரீன் டீ, பிளாக் டீ, மசாலா டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, எலுமிச்சை டீ, புதினா டீ, துளசி இலை டீ போன்றவை.

டீ நமக்குள் நிகழ்த்தும் அற்புதங்கள்!
* டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உடல் மாசடைவதைச் சரிசெய்ய உதவும்.
* இதயத்துக்கும் நுரையீரலுக்கும் பலமளிக்கும்.
* நரம்பு, தசை சுறுசுறுப்பாக இயங்க உதவும். உடல் புத்துணர்வு பெற உதவும்.
* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். உடல் எடையைக் குறைக்கும்.
* இதில் உள்ள வைட்டமின் மற்றும் கால்சியம் சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும்.
* மூளைச் செயல்பாட்டைச் சீராக்கும். ஒரு நாளைப் புன்னகையுடன் எதிர்கொள்ள உதவும்.
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும்.
* கிரீன் டீ, மூலிகை டீ மற்றும் பிளாக் டீ புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்க உதவும். பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்.
* டீயில் உள்ள ஃபுளோரைடு (Fluoride) பற்களின் ஆரோக்கியத்தைக் காக்கும்.  உடலின் நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும்.
* டீயில் உள்ள ரிபோஃப்ளேவின் (riboflavin) உடலுக்குத் தேவையான எனர்ஜியை அளிக்கும்.
* ரத்தத்தில் உள்ள செல்களின் இழப்பைத் தடுக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.
* இளமையைத் தக்கவைக்க உதவும்.
* இதில் உள்ள அமினோ அமிலம், உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கும்.

சூடாகக் குடிக்கலாமா?
மிகச் சூடாக தேநீர் பருகினால் வயிற்றின் உட்சுவர் புண்ணாகும். நரம்பு மண்டலத்தையும் வயிற்றையும் பாதிக்கும். வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், குடல் பாதிப்படையும். டீ குடிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக தண்ணீர் குடிக்கலாம்.

டீ, காபி பழக்கம் இல்லாதவர்கள் சாப்பிட...
* இளஞ்சூடான பால் குடிக்கலாம். மஞ்சள், இஞ்சி, சுக்கு ஆகியவற்றைப் பாலுடன் சேர்த்துக் குடிக்கலாம்.
* பெருஞ்சீரகத்தை சூடான தண்ணீரில் போட்டுவைத்துக்கொள்ளலாம். பிறகு ஆறிய பின்னரோ மிதமான சூட்டிலோ குடிக்கலாம்.
* ஐஸ் சேர்க்காத பழச்சாறுகளைப் பருகலாம். உடலுக்கு குளிர்ச்சிதரும் பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About