தமிழகத்தில் நடந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்ன?!

சட்டைப்பையில், பர்ஸில், வங்கியில், சுருக்குப்பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் தாள்கள், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்...

சட்டைப்பையில், பர்ஸில், வங்கியில், சுருக்குப்பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் தாள்கள், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து மிகச் சரியாக ஒரு ஆண்டு முடிந்து விட்டது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் சொன்னது. ஆனால், எளிய மனிதர்கள் வெறும் 500 ரூபாய் தாளை மாற்றுவதற்கு மணிக்கணக்காக வங்கிகளின் முன்பும், ஏ.டி.எம்-கள் முன்பும் காத்துக் கிடந்தனர். சாதாரண மனிதர்களிடம் பணமுடக்கத்தின் தாக்கம் 6 மாதங்கள் வரை நீடித்தது. சிறுதொழில்கள், வியபார நிறுவனங்கள் பல மூடப்பட்டன. பணமுடக்கத்தின் விளைவாக கறுப்புப் பணத்தை ஒழிக்க பினாமி சட்டத்தின்படி நாடு முழுவதும் வருமானவரி புலனாய்வு பிரிவு சார்பில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. தமிழகத்திலும், தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டுகள் நடந்தன. குறிப்பாக தமிழகத்தில் ரூபாய் நோட்டுகள் முடக்கத்துக்கு முன்பிருந்தே கூட ரெய்டுகள் நடந்தன.  பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு மத்தியில் பதவி ஏற்றது முதல் தமிழகத்தில் ரெய்டுகள் என்பது வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது. 

முதல் ரெய்டு நடத்தப்பட்ட அன்புநாதன் தமிழகத்தில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் போது ரெய்டுகள் நடந்தன. 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி கரூர் அய்யம்பாளையத்தில் உள்ள அன்புநாதன் என்பவரின் வீட்டில் ரெய்டு நடைபெற்றது.

ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த ‘ஐவரணி’ அமைச்சர்களுக்கு நெருக்கமானவர் இந்த அன்புநாதன் என்று கூறப்பட்டது. பத்து மாவட்டங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவுக்கு முன்பாக அ.தி.மு.க சார்பில் விநியோகிக்கும் நோக்கத்துடன் அன்புநாதனிடம் பணம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. ரெய்டு நடந்தபோதே அன்புநாதன் எஸ்கேப் ஆகிவிட்டார். இரண்டு நாள்கள் நடந்த சோதனையில், ரூ. 4.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசின் சின்னத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆம்புலன்ஸில் பணத்தை கடத்தினார் என்ற குற்றசாட்டின் கீழ் அன்புநாதன் கைது செய்யப்பட்டார். இப்போது அவர் ஜாமீனில் இருக்கிறார்.

 2011 அ.தி.மு.க ஆட்சியில் அதிகாரம் மிக்க அமைச்சராக விளங்கியவர், நத்தம் விஸ்வநாதன். 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி இவரது வீடு மற்றும் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வீடு உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி காட்டினர். நத்தம் விசுவநாதன் கைதுசெய்யப்படுவார் என்று பரபரப்பு நிலவியது. அதன் பிறகு, இந்த ரெய்டு குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து, டிசம்பர் 8-ம் தேதி அ.தி.மு.க ஆட்சியின் அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமான மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.  அப்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவராகவும் இவர் இருந்தார். சோதனையின் போது, சேகர் ரெட்டியின் இடங்களில் இருந்து, பழைய ரூபாய் நோட்டுகள், புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், தங்கம் என்று 142.81 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டன. சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பின்னர், அவர் வருமானவரி புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது.  அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் எங்கிருந்து வந்த து என தெரியாது என்று ரிசர்வ் வங்கி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட ஆச்சர்யம் எல்லாம் நடந்தது.

வரலாற்றில் முதல் முறை

தமிழக அரசியல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் வீட்டில் 2016 டிசம்பர் 21-ம் தேதி வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு சோதனை நடத்தியது. சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில், ராம மோகன ராவுக்கு எதிராக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டு நடந்தது என்றும் கூறப்பட்டது. தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
தலைமைச் செயலாளர் பதவியை ராம மோகன ராவ் இழந்தார். சில மாதங்களுக்குப் பிறகு, தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். இப்போது அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ராம மோகன ராவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்பது வருமானவரி துறைக்குத்தான் வெளிச்சம்.

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் வீடுகளில்  2016 டிசம்பர் 24-ம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மணல் குவாரிகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட ராமச்சந்திரனும், ரத்தினமும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த இருவரும், சென்னையில் உள்ள வருமானவரிப் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டனர்.
நடவடிக்கை இல்லை

உச்சகட்டமாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 2017 ஏப்ரல் 7-ம் தேதி  வருமானவரித் துறை சோதனைவிஜயபாஸ்கர் போட்டது.  ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடந்ததாகச் சொன்னார்கள்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள், விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப் பட்டன.

இந்த புகார் காரணமாகத் தேர்தலே தள்ளி வைக்கப்பட்ட பிறகும்,  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை.  வருமான வரித்துறை  புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டும் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடந்தது. விஜயபாஸ்கரின் குவாரியைச் சுற்றிய 97 ஏக்கர் நிலங்களின் ஆவணங்களை, வருமான வரித்துறை வழக்கோடு இணைத்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டாக நடந்து வரும் ரெய்டுகள் தமிழகத்தில் பரபரப்பை மட்டுமே கிளப்பின. விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்படதைத் தவிர, மற்றவர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவே இல்லை. என்ன நோக்கத்துக்காக ரெய்டுகள் நடத்தப்பட்டது என்பது மக்களுக்குத் தெரியாத புதிராக இருக்கிறது.

ஆனால், ரெய்டுக்கு உள்ளானவர்களுக்கும், ரெய்டு நடத்த உத்தரவிட்ட மேலிடத்துக்கு மட்டுமே அதற்கான விடை தெரிந்திருக்கக் கூடும். வழக்கம் போல சாமான்யர்களுக்கு ஒண்ணுமே புரியல. இப்போதைய ரெய்டுகளும் அப்படியான ஒன்றுதான்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About