அதிகம் நம்புவார்... அதிரடியாய் மாற்றுவார்... ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி!

உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே  ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்...

உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே  ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். இவ்வளவு கம்பீரமான பெண் ஆளுமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால் தான் மூன்றாவது அணி இவரை பிரதமாராக்கிப் பார்க்க ஆசைப்பட்டது. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் அல்டிமேட் ஆளுமை முகம். விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆளுமை காண்போரை ஆச்சர்ய மூட்டும். 

ஜெ. வின் முதல் 20 வருடங்கள் அம்மாவின் வளர்ப்பு என்றால், அடுத்த 20 வருடங்கள் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. சினிமா மற்றும் அரசியலில், முதல் 40 வருடங்கள் யாரோ ஒருவரின் கண்காணிப்பிலேயே இருந்த ஜெயலலிதா, பின்னர் அனைவருடனும் சகஜமாக பழகி, கட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் பதில் கூறி, ஒரே மூச்சில் 20 மேடைகளில் பேசி... 1990-க்குப் பிறகு, குறுகிய வட்டம், சிலரோடு மட்டுமே நெருக்கமான பழக்கம் என பெரும்பாலும் தனியாகவே இருந்திருக்கிறார். ஜெயலலிதாவின் மேடைப்பேச்சுகளோ... கட்சி பொதுக்கூட்டங்களோ அவர், பேசும்போது குறுக்குப் பேச்சுக்கு இடமிருக்காது... சரியோ, தவறோ? ஜெயலலிதாவின் சில தீர்க்கமான முடிவுகள்... யார் என்ன சொன்னாலும் இறுதி வடிவம் ஜெயலலிதா என்ற தனி ஒரு நபரால் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில், ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான். தீர்க்கமான முடிவுகளை எடுப்பவர். இதுதான் இலக்கு என்றால் அதை அடைந்தே தீரவேண்டும் என்பது எப்போதும் ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்திருக்கிறது. அவமானப்பட்டு சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்ட போது முதலமைச்சராகத்தான் இந்த அவைக்குள் நுழைவேன் என்று கூறியவர் முதலமைச்சராகத்தான் நுழைந்தார். ஜெயலலிதாவுக்கு தன்னம்பிக்கை அதிகம் அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார். அப்படி எடுத்த ரிஸ்க் தான் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டி. 39 தொகுதிகளை ஜெயித்து வொயிட்வாஷ் கொடுத்தது ஜெயலலிதாவின் ஓவர் ரிஸ்க் எடுக்கும் மனம் தான்.

நல்லதோ...கெட்டதோ அதீத நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு உண்டு. எல்லாமே மிகச்சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பவர் ஜெயலலிதா.. ஆடை துவங்கி ஆட்சி வரை இதை எதிர்பார்ப்பவர் ஜெயலலிதா. வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர். தமிழ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்தவர். இவரது ஆங்கிலப்புலமை எந்த அளவுக்கு என்றால் சில நேரங்களில் அரசு அறிக்கையையே ஆங்கிலத்தில் தயார் செய்து தருவாரம். அதை அதிகாரிகள் தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைப்பார்களாம் அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் ஆங்கிலம் சிறப்பானது. ஆங்கிலம், தமிழ் தவிர மலையாளம், கன்னடம், ஹிந்தி, சமஸ்க்ருதம் நன்றாக அறிந்தவர் ஜெயலலிதா.

45 நாட்கள் காலையில் எழுந்து துளசி மாடத்தை சுற்றி வந்து சுந்தர காண்டம் படிப்பது ஜெயலலிதாவின் ஆத்மார்த்தமான பிரார்த்தனைகளில் ஒன்று.  அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் குணம் படைத்தவர். அதேசமயம் பிடிக்கவில்லை என்றால் அருகே சேர்க்காதவர். உறவினர்கள் ஜெயலலிதா சொத்தின் மீது கொண்ட ஆசையால் தான் சொந்தங்கள் என்று யாரையுமே ஜெயலலிதா கூட சேர்க்கவில்லை.

1984 தேர்தலின் போது எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லை. அமெரிக்காவில் இருக்கிறார். தமிழகத்தில் பிரசாரம் செய்ய ஜெயலலிதாவை தவிர வேறு யாருமில்லை. ஜெயலலிதா ஒற்றை ஆளாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது வீடியோவாக பிரசாரங்களை பதிவு செய்ய கடலூர் பிஆர்ஓ நடராஜன் தான் வினோதகன் வீடியோ விஷனை அறிமுகம் செய்கிறார். சசிகலாவும் ஜெயலலிதாவுக்கு பின்னாளில் அறிமுகமாகிறார்.

ஜெயலலிதா சில காரணங்களுக்காக சசிகலாவை ஒதுக்கி வைத்தாலும் மற்றவர்களை போல அல்லாமல் சசிகலாவை மட்டும் திரும்ப அழைத்தார் ஜெயலலிதா. எவ்வளவு மனஸ்தாபம் இருந்தாலும் ஏன் ஜெயலலிதாவால் சசிகலாவை விட்டு பிரிய முடியவில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் முக்கியமானது. முதல் விஷயம் ஒரு முக்கிய தலைவரை பற்றி ஜெயலலிதா ஏதோ மேடையில் கூறிய விஷயம் அப்போது பெரிய சர்ச்சையானது. அந்த வீடியோ பதிவு சசிகலாவிடம் மட்டுமே இருந்தது. அந்த வீடியோ வெளியாகாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா, இரண்டாவது விஷயம் சில சொந்த காரணங்களுக்காக இரண்டு வருடம் சசிகலா ஜெயலலிதாவை பிரியும் சூழல் வந்தும். தனித்து இருப்பதை ஜெயலலிதா விரும்ப மாட்டார் என்பதால் சொந்த காரணங்களை தவிர்த்து ஜெயலலிதாவுக்காக உடனிருந்தார் சசிகலா. இந்த இரண்டு விஷயமும் தான் சசிகலாவை விடமால் ஜெ ஆதரிக்க காரணமாயிருந்தது.

எல்லாவற்றிலும் பர்ஃபெக்‌ஷன் எதிர்பார்த்த ஜெயலலிதாவுக்கு உடல்நிலை பர்ஃபெக்ட்டாக இல்லை. மருத்துவர்கள் பரிந்துரையை சில நேரங்களில் தவிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சிக்கலாக ஆரம்பித்தது. 2008-09களில் வழக்குகள் ஏற்படுத்திய பாதிப்பு உடல்நிலையையும் பாதிக்க ஆரம்பித்தன.

தன் பலவீனத்தை காட்ட விரும்பாதவர் ஜெயலலிதா. அதனால் தான் கலைஞர் வீல் சேரில் கூச்சப்படாமல் வலம் வந்தார். ஆனால் ஜெயலலிதவால் நீண்ட நேரம் நிற்க முடியாததை கூட வெளியில் காட்ட விரும்பாதவர். அதை காட்டிக்கொண்டால் பலவீனமாகிவிடுமோ என்ற கவனம் ஜெயலலிதாவுக்கு எப்போதும் உண்டு. 2016ல் கடைசியாக பதவியேற்ற போது உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை மொத்த அமைச்சரவையும் பதவி ஏற்கும் நிகழ்வையே, சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கடி இருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கு வதைத்தது, சுற்றி என்ன நடக்கிறது என்று கணிக்க முடிடியாத நிலை, சசிகலா குடும்பமும்... இதற்கெல்லாம் நடுவில் பிடிவாத குணமும், ஆணவமும் ஜெயலலிதாவின் மிகப்பெரிய எதிரிகளாக மாறியது. இவற்றில் எது ஒன்றை தவிர்த்திருந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் நன்றாக இருந்திருப்பார் ஜெயலலிதா.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதாவின் கணீர் குரலை இன்று அனைவருமே மிஸ் செய்கிறார்கள்.  கரண் தாப்பரிடம் கடுகடுத்த குரலாகட்டும், சிமி கரேவாலிடம் பாடிய மெல்லிய குரலாகட்டும்.. தமிழக தேர்தல் மேடைகளில் '' அண்ணா நாமம் வாழ்க! எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க! என்று கூறி செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா என்று முழங்கியதாகட்டும் ஜெயலலிதாவை இன்றைய தடுமாற்ற அரசியல் சூழலில் நிச்சயமாக தமிழகம் மிஸ் செய்கிறது என்பது விமர்சனங்கள் தாண்டிய உண்மை.  இன்னமும் ஏதோ ஒரு டீக்கடை அரசியலில் இந்த நீட் தேர்வு, ஜல்லிக்கட்டுகெல்லாம் அந்த அம்மா இருந்திருக்கணும், நிலமையே வேறனு பேசும் சாமானியனின் பேச்சுதான் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு சாட்சி. இந்தியா வியந்த இரும்பு மனுஷி ஜெயலலிதா என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About