"ஆன்மிக அரசியலுக்கு இந்தப் பயணம் அவசியம்!" - ரஜினி இமயமலை பயண பின்னணி

கோடை விடுமுறை வந்துவிட்டாலே குழந்தைகளுக்குக் குதூகலம் ஸ்டார்ட் ஆகிவிடும். புத்தக மூட்டைகளைத் தூக்கி பரண்களில் போட்டுவிட்டு உற்சாகம் கொப்பளி...

கோடை விடுமுறை வந்துவிட்டாலே குழந்தைகளுக்குக் குதூகலம் ஸ்டார்ட் ஆகிவிடும். புத்தக மூட்டைகளைத் தூக்கி பரண்களில் போட்டுவிட்டு உற்சாகம் கொப்பளிக்க உறவினர்களின் வீடுகளுக்குப் பறந்து விடுவார்கள். குழந்தைகளுக்கு அப்படியென்றால், ரஜினிக்கு இப்படி!

ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால் உடனே மீசையை மழிப்பார், சிம்பிளாக வேட்டி, சட்டையுடன் ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு குஷியாக இமயமலைக்குச் சென்று விடுவார். ஒரு  வகையில் ரஜினியும், குழந்தையும் ஒண்ணு. சினிமா உலகில் நண்பர்கள், தனிப்பட்ட முறையில்  தான்  திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது கஷ்டப்பட்ட காலத்தில் தன்னோடு பழகிய பழைய நண்பர்கள், இமயமலைக்குச் செல்லும்போது ஆன்மிக நண்பர்கள் என்று தன்னுடைய நட்பு வட்டத்தை தனித்தனியாக, தெள்ளத்தெளிவாகப் பிரித்து வைத்து பழகிவருவது ரஜினியின் ஸ்பெஷல். ஒருமுறை ரஜினியிடம் நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப்படுகிறீர்கள்?' என்று கேள்வி கேட்டனர். அப்போது, 'வாழ்க்கையில் எல்லாவற்றையும் முற்றும் துறந்து இமயமலையில்  தனியாக அமர்ந்து தியானம் செய்யும் சாமியார்களைப் பார்த்தால்தான் எனக்குப் பொறாமையாக இருக்கிறது' என்று ஆச்சர்யமான பதில் சொல்லி அசரவைத்தார்.

பொதுவாக முன்னணி ஹீரோக்கள் அவர்களின் படங்கள் ரிலீஸாகும் அன்று நகத்தைக் கடித்தபடி டென்ஷனில் தவித்துக் கொண்டு இருப்பார்கள். தங்கள் மேனேஜர்களை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் போன் செய்யச் சொல்லி 'ரிசல்ட் எப்படி இருக்கிறது? ' என்று படபடப்போடு கேட்பார்கள். ரஜினி மட்டும் விதிவிலக்கு தனது படத்துக்கு  ரசிகர்கள் கட் அவுட் வைப்பதையோ, பாலாபிஷேகம் செய்வதையோ, தியேட்டரில் விசிலடித்து அதகளம் செய்வதையோ பார்க்கமாட்டார். தன் பட ரிசல்ட் என்ன? என்று வீட்டில் இருப்பவர்களிடமோ, நண்பர்களிடமோகூட கேட்டதில்லை. இமயமலையில் இருந்து அவராகவே போன் செய்தால்தான் உண்டு. ஒவ்வொரு திரைப்பட வெற்றிக்கும் இமயமலையில் வசிக்கும் குருமார்களின் ஆசீர்வாதம்தான் முழுமுதற்காரணம் என்று பரிபூரணமாக நம்பிக்கையோடு இருக்கிறார். அதுபோல, அரசியலில் முழுவதுமாக இறங்கி கட்சியின் பெயர், கட்சிக்கொடி என்று அறிவித்தபிறகு தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டிய பொறுப்பு மிகுந்து இருப்பதால், அதற்கு முன்பாக இப்போதே இமயமலை சென்று பாபாவின் குகையில் தியானம் செய்து, தனது குருமார்களின் ஆத்மார்த்தமான ஆசிகளைப் பெறுவதற்குத் திட்டமிட்டு இருந்தார். ஏற்கெனவே முடிவெடுத்த திட்டம்தான் இது என்றாலும், இப்போது திடீரெனப் புறப்பட்டுச் செல்வதற்கு சில காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள், ரஜினி ரசிகர்கள்.

2010 -ஆம் ஆண்டு 'எந்திரன்' ரிலீஸுக்குப் பிறகு ஒருமுறை இமயமலை சென்றுவிட்டுத் திரும்பினார். அதற்குப் பிறகு இடையில் உடல்நலம் இல்லாமல் போனது, சிங்கப்பூர் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பினார். அதன்பின் 'கோச்சடையான்' அனிமேஷன் படத்திலும், 'லிங்கா' ' கபாலி' படங்களிலும் நடித்து முடித்தார். வழக்கமாக வருடா வருடம் இமயமலைக்குச் சென்று திரும்பி வந்தவர், கடந்த எட்டு வருடங்களாகவே இமயமலைக்கு செல்லாமல் இருப்பது ரஜினியின் மனதுக்கு என்னவோ போல் இருப்பதாக தனது நெருங்கிய நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார், ரஜினி. எனவே கடந்த ஜனவரி மாதத்தின் முதல்வாரத்தில் இமயமலை செல்வதாகத் திட்டமிட்டு இருந்தார். திடீரென தனது பயணத்தைத் தள்ளிவைத்துவிட்டு, ஜனவரி மாத இறுதியில் தனது ரசிகர்களை ஶ்ரீராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார். 2017 டிசம்பர் 31-ஆம் தேதி அன்று 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்று பிரகடனம் செய்தார். அதன்பிறகு தமிழகத்தின் அரசியல் களத்திலும், மீடியா உலகத்திலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பெரிதாகப் பேசப்பட்டது. அடுத்து மார்ச் 5-ம்தேதி அன்று சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரஜினி பேசிய ஆழமான பேச்சு அரசியல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இப்போது தமிழகம் ரஜினி துவங்கப் போகும் கட்சியின் பெயர் என்ன, கட்சிக் கொடியின் நிறம் என்ன என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஜனவரியில் தள்ளிப்போன இமயமலைக்கு சென்று தான் வணங்கும் பாபா மற்றும் குருமார்களின் ஆசிகளைப் பெற்றுவந்த பிறகே தனது ஆன்மிக அரசியல் கட்சியின் பெயரை, கொடியை, கொள்கையை அறிவிக்கத் திட்டமிட்டு இருக்கிறார், ரஜினி. சுருங்கச் சொன்னால், ரஜினியின் 'ஆன்மிக அரசியல்' என்ட்ரிக்கு, இந்தப் பயணம் அவருக்கு ரொம்பவே முக்கியம். எனவே, இந்த ஆன்மிகப் பயணத்திற்குப் பிறகு, தனது அரசியல் வேலைகளை இன்னும் தீவிரப்படுத்த முடிவெடுத்திருக்கும் ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் திட்டங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறாராம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About